திரு.வைரமுத்து அவர்களுக்கு ஒன்னுந்தெரியாத சின்னப்பய எழுதுறது,
நான் கவிதை எழுதவும் கவிதை நூல்கள் வாசிக்கவும் பழகிய காலமது. உங்களுடைய படைப்புகளை மட்டுமே தேடித்தேடி வாசித்தேன். தமிழின் ஆகச் சிறந்த கவிஞர் நீங்கள் மட்டும்தான் என்ற மூடநம்பிக்கையுடன் இருந்தேன் அப்போது.
உங்கள் மீது தணியாத பாசம் இருந்தது அதற்கு ஒரு காரணமும் இருந்தது. பெரியார் திடலுக்கு ஒரு நிகழ்வுக்கு வந்தபோது ஏன் கருப்புசட்டை அணியவில்லையென்று செய்தியாளர் வீரபாண்டியன் கேட்டதற்கு நான் கருப்புத் தோலுடன் வந்துள்ளேன்,சட்டையை கழற்றி விடலாம் தோலை கழற்ற முடியாது என நீங்கள் சொன்னதாக நான் படித்திருக்கிறேன். அட இவரும் நம்ம ஆளுதான் என்றெண்ணி மகிழ்ந்த காலமது.
பெரியாரை அதிகமாக உள்வாங்க ஆரம்பித்த பிறகும், ஒடுக்கப்பட்டடோரின் குரலாய் ஒலித்த உண்மையான கலைஞர்களின் படைப்புகளைப் படிக்க ஆரம்பித்த பிறகும் தான் நீங்கள் ஒரு சிறந்த படைப்பாளி இல்லை சிறந்த வியாபாரி என்பதை புரிந்து கொண்டேன். உங்களிடம் எந்த கொள்கையும் இல்லை முற்போக்கும் இல்லை என்பது தெரிந்த பிறகு உங்களிடமிருந்து வெகுதூரம் விலகி வந்துவிட்டேன்.
தமிழ் எனக்குச் சோறு போட்டது, நான் இப்போது தமிழுக்குச் சோறு போடுகிறேன் என்று நீங்கள் சொன்னபோது நான் வாய் விட்டுச் சிரித்தேன் உங்களை எண்ணி அல்ல தமிழின் நிலைமையை எண்ணி.
நீங்கள் எப்போதும் எங்களுக்கானவரில்லை, ஷங்கர்களுக்கும் மணிரத்னங்களுக்கும் மட்டுமே பிடித்துப்போன வார்த்தை வியாபாரி. நீங்கள் அவர்களுக்கு மட்டுமானவர்களாகவே இருங்கள்,எங்களுக்கு வேண்டாம் நீங்கள்.
திராவிடம் வேறு ஆரியம் வேறு, திராவிடத்தின் எதிரி ஆரியமே என்று முழங்கிய பெரியார் மண்ணில், எப்போது நீங்கள் ஆரிய உதடுகள் உன்னது திராவிட உதடுகள் என்னது, ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே என்று எழுதினீர்களோ அப்போதே நினைத்தேன் உங்கள் மனதில் ஏதோ பெரிய திட்டம் இருக்கிறது என்று, இப்போது புரிந்து விட்டது. உங்களை அண்ணா அறிவாலயமும், கோபாலபுரமும் இனியாவது புரிந்து கொள்ளுமா.
விளைந்த கதிர் வளைந்து நிற்பதைப் பார்த்தபோது, மருத்துவக் கனவோடு சுற்றித் திரிந்த மாணவி அனிதா மண்ணுக்குள் போனது மறந்தே போனதா. நட்டு வைத்த வேலுக்கு பொட்டு வைத்தது போல நிமிர்ந்து நிற்பதைப் பார்த்தபோது சூடு பட்ட மீனவர்கள் உங்கள் நினைவில் இருந்து தொலைந்தே போனார்களா.
உங்களைப் போன்றவர்களுக்காகவே பெரியார் அன்று சொன்னது,
“நாய் எலும்பைக் கடிக்குமாம். அந்த எலும்பில் சதையே இருக்காதாம். நாயின் எயிறில் பட்டு இரத்தம் வருமாம். அந்த இரத்தம் எலும்பிலிருந்து வருவதாக கருதி மேலும் கடித்து எயிறை எல்லாம் கிழித்துக் கொள்ளுமாம். அது போன்று தான் நம் புலவர்கள் பழைய குப்பைகளைக் கிளறி அதன் மூலம் கிடைக்கும் பதவி எலும்பைக் கடிக்க ஆசைப்படுகின்றார்களே தவிர, உண்மையை எடுத்துச் சொல்லி மக்களை முன்னேற்றுவோம் – அறிவுடையவர்களாக்குவோம் என்று எவரும் பாடுபடுவது கிடையாது.” (விடுதலை 06.08.1968)
இப்படிக்கு,
ஒன்னுந்தெரியாத சின்னப்பய
க.ம.மணிவண்ணன்
க.ம.மணிவண்ணன்