Saturday 25 August 2018

மனிதநேயமும் ஐயப்பனின் கோபமும்

ஒவ்வொரு இயற்கைப் பேரிடரும் உயிர் இழப்பையும் பொருள் இழப்பையும் தாங்கமுடியாத வலியையும் சொல்லமுடியாத சோகத்தையும் தந்துவிட்டு செல்வதோடு மனிதநேயத்தின் வலிமையையும் சொல்லிவிட்டுத்தான் செல்கிறது.
ஒவ்வொரு சாதாரண மனிதனும் மனிதநேயம் மிக்கவனாகவே இருக்கிறான். பேரவலம் நடைபெறும்போதெல்லாம் பிறரது துன்பத்தை கண்டு ஓடோடிச்சென்று உதவுபவனாகவும் தம்மால் இயன்றதை கொடுப்பவனாகவும் ஏதும் செய்ய இயலாத போது ஆற்றாமையில் கண்ணீர் விட்டு அழுகின்றவனாகவுமே இருக்கிறான்.
மனிதநேயம் மிக்கவர்களாலேயே இந்த உலகம் இன்னும் நிலை பெற்றிருக்கிறது இல்லாது போனால் உலகம் என்றோ மண்ணோடு மண்ணாயிருக்கும். சாதி மதம் இனம் மொழி கடவுளின் பெயரால் பிழைப்பு நடத்துபவர்கள்தான் மனிதநேயமற்ற இழிபிறவிகளாக இருக்கின்றனர்.
அனுப்ரியா என்ற விழுப்புரத்தில் உள்ள சிறுமி கேரளத்தில் நிகழ்ந்த இயற்கை பேரழிவை தொலைக்காட்சியில் பார்த்தபோது ஒரு குழந்தை அழுவதைப் பார்த்து தானும் அழுதவள் அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என எண்ணி தான் மிதிவண்டி வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த பணத்தை கொடுத்து உதவி இருக்கிறாள், ஒருவர் அழும்போது தான் அழுவதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற அந்த சிறுமியின் எண்ணம்தான் ஒவ்வொரு சாதாரண மனிதனின் எண்ணமும்.
மெத்தப்படித்த அறிவாளியாக சுட்டிக்காட்டப்படுகிற ஆடிட்டர் குருமூர்த்தி கேரள பேரழிவிற்கு காரணம் அனைத்து பெண்களையும் ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டதனால் ஐயப்பன் கொண்ட கோபம் தான் என்கிறார், சுனாமி வந்ததற்கு காரணம் சங்கராச்சாரியாரை கைது செய்ததுதான் என்று கூறியவர்கள்தான் இவர்கள்.
ஒரு பேரவலம் நடைபெறும்போது கூட தங்கள் மதத்தையும் மதக்கருத்துக்களையும் நிலைநிறுத்த முயல்கின்ற கொடூர மனம் படைத்த மதவாதிகள். இவர்கள் பிழைப்பு நடத்துவற்கு மதம் வேண்டும் மதம் நிலை பெற்றிருக்க வேண்டும் என்பது மட்டுமே இவர்களின் ஒரே சிந்தனை, இது கடவுள் தந்த தண்டனை எல்லோரும் அனுபவியுங்கள் என்று சொல்வது எப்படிப்பட்ட குரூர மனத்தின் வெளிப்பாடு,மதவாதிகளுக்கும் மனித நேயத்திற்கும் வெகுதூரம், இல்லையென்றால் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரை தீயிட்டுக் கொளுத்தியிருப்பார்களா.
இந்த உலகில் இன்னும் மனித இனம் நிலைபெற்று வாழ்வது அனுப்ரியாக்களால் தான். அனுப்பிரியாக்களை வளர்ப்பதில்தான் இருக்கிறது எதிர்கால மனிதகுலத்தின் வாழ்வு.

60,000 யானைகள் கப்பலில் சென்ற கதை - சீமானின் கதைகள்

அன்பான உறவுகளே நான் சில மதங்களுக்கு முன்னால் சொன்ன ஆமைக்கதை, ஆஸ்திரேலியா கப்பலில் வடை சுட்ட கதைகளை கேட்டு கைதட்டி விசிலடித்து சில்லறையை சிதற விட்டிருப்பீர்கள், நான் இப்போது ஒரு கதை சொல்லப்போகிறேன் இது நமது பாட்டன்களான தமிழ் அரசர்கள் கதை.
நம் அரசர்கள் அண்டை நாட்டின் மீது படையெடுத்து செல்லும்போது 60,000 யானைகள்,60,000 பாகன்கள்,படைவீரர்கள்,யானைகள் மற்றும் மனிதர்களுக்கான உணவு ஆகியவற்றை மரக்கலங்களில் கொண்டு செல்வார்கள் ஏனென்றால் அந்த காலத்தில் உலோகத்திலான கப்பல்கள் இல்லை. தம்பி தங்கைகளே ஒரு யானையின் எடை சுமாராக 6000 கிலோகிராம் என்றால் 60,000 யானைகளின் எடையை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள். அவற்றை ஏற்றிச்சென்ற மரக்கலங்கள் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.
நீங்கள் நினைக்கலாம் காட்டில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த யானைகளை பிடித்துவந்து கொடுமைப்படுத்தலாமா, அவ்வளவு பெரிய மரக்கலங்களை செய்வதற்கு காடுகளை அழிக்கலாமா என்று. நீங்கள் அவ்வாறெல்லாம் நினைக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும் ஏனென்றால் நான் உங்களை அவ்வாறு வளர்க்கவில்லை, கைதட்டி விசிலடித்து நான் சொல்வதே வரலாறு என்று நம்பி சில்லறயை சிதறவிடுவதற்கே உங்களை பழக்கப்படுதியுள்ளேன். இருந்தாலும் ஒன்றை மட்டும் நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும் உறவுகளே, நமது சுயநலத்துக்காக செய்யக்கூடாதது எதை வேண்டுமானாலும் செய்யலாம்.
நமது அரசர்கள் யானைகளை வைத்து எப்படி மற்றவர்களிடம் படம் காட்டி நாட்டைப் பிடித்தார்களோ அதைப்போலவே நானும் கையை முறுக்கி ஆவேசமாக சத்தம்போட்டு வாயாலே வடை சுட்டு உங்களை கைதட்டவும் விசிலடிக்கவும் வைத்துக்கொண்டிருக்கிறேன். எப்போதும் இல்லாததை பற்றிக் கவலைப்படக்கூடாது இருப்பதை வைத்துக் கொண்டு ஏமாற்றத் தெரிய வேண்டும், இதனால் தான் உறவுகளே நான் அடிக்கடி சொல்கிறேன் நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்று.

Tuesday 7 August 2018

அறத்தை மீறிய ஆசிரியர்களும், கண்டுகொள்ளாத களவானிகளும்

அறத்தை மீறிய ஆசிரியர்களும், கண்டுகொள்ளாத களவானிகளும்
------------------------------------------------------------------------------------------
தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும் அறத்தையும் நல் ஒழுக்கத்தையும் கற்றுத்தந்து அவர்களை சிறந்த மனிதர்களாக ஆக்கும் பொறுமையும் திறமையும் ஆசிரியர்களுக்கு உண்டு என ஒவ்வொரு பெற்றோரும் நம்புகின்றனர் ஆனால் இந்த நம்பிக்கையைப் பொய்யாக்கும் விதமான செய்திகளே அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன.
அண்ணா பல்கலைக்கழகம் உலக அளவில் மிகவும் புகழ் பெற்ற ஒரு கல்வி நிறுவனம், இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் மிகவும் திறமைசாலிகளாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை உலக அளவில் இருக்கிறது அதனாலேயே மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் இங்கு பயின்ற மாணவர்களை பணியில் அமர்த்திக்கொள்கின்றனர். ஆனால் இந்த நம்பிக்கையை கெடுக்கும்விதமாகவும் பல்கலைக்கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாகவும் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
தங்கள் தேர்வுத்தாள்களை மறுகூட்டல் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பித்த மாணவர்களிடமிருந்து லஞ்சமாகப் பணத்தைப் பெற்றுக்கொண்டு குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கும் தோல்வி அடைந்தவர்களுக்கும் அதிக மதிப்பெண்கள் வழங்கி தேர்ச்சி அடைய வைத்திருக்கிறார்கள். இந்த ஊழல் முறைகேட்டில் இதுவரை 200 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டிருக்கிறது. இந்த ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அனைவருமே உயர் கல்வி கற்று உயர் பதவியில் இருந்து கொண்டு அதிக சம்பளம் பெறக்கூடிய பேராசிரியர்களும் உதவிப் பேராசிரியர்களும் தான்.
அறத்தை கற்றுத்தர வேண்டிய ஆசிரியர்கள் அறத்தின் மீது அக்கறை இல்லாமல் பொருளின் மீது பேராசை கொண்டிருக்கின்றனர். நாமும் இவர்களை நம்பித்தான் நம் பிள்ளைகளை அனுப்பி வைக்கிறோம் அறத்தையும் நல் ஒழுக்கத்தையும் கற்றுத்தருவார்கள் என நம்பி. இவர்களிடம் பயிலும் மாணவர்களிடம் நாம் எவ்வாறு அறத்தையும் ஒழுக்கத்தையும் எதிர்பார்க்க முடியும், இவ்வாறு பணம் கொடுத்து மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று வெளியில் வரும் மாணவன் இந்த சமூகத்துக்கு என்ன நல்லது செய்வான். பெற்றோருக்குத் தெரியாமல் இந்த குற்றச்செயல் நடந்திருக்க முடியுமா அப்படியானால் தங்கள் பிள்ளைகளிடமிருந்து பெற்றோர் எதிர்பார்ப்பதுதான் என்ன, அறம் வேண்டாத பொருள் மட்டும் தானா. பணம் மட்டும் இருந்தால் போதும் ஒருவன் படிக்காமலேயே அதிக மதிப்பெண்ணுடன் பட்டமும் பெற்று வேலையும் பெற்றுவிட முடியுமானால் எதற்காக இந்த கேடுகெட்ட கல்விமுறை தேர்வுமுறை.
இது எதுவுமே தெரியாமல் ஏதாவது ஒரு அரசு வேலை கிடைத்துவிடாதா என்று எண்ணி அரசுப்பணிக்காக நம்பிக்கையோடு தொடர்ந்து தேர்வெழுதி வருகிறதே ஒரு இளைஞர் கூட்டம் அவர்களுக்கு இந்த சமூகம் சொல்ல வருவதுதான் என்ன. இந்த இளைஞர்கள் விரக்தியுற்று ஒரு கட்டத்தில் தவறான பாதையில் செல்லும்போது அவர்களுக்கு அறிவுரை சொல்ல வரும் அறிவாளிகள் கூட்டம் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது.
உலக அளவில் நடக்கின்ற ஊழல்களைப் பற்றி எல்லாம் வாய்கிழிய பேசியும் எழுதியும் வரும் நாம் நம்மைப்போன்ற சக மனிதர்களின் ஊழல்களை கண்டும் காணாமல் கடந்துவிடுவது எதனால், உண்ணுவது உறங்குவதைப்போல் ஊழலும் சாதாரண நிகழ்வுதான் என எண்ணத் தொடங்கிவிட்டோமா, நம்மைப்போன்ற ஒருவர்தானே செய்திருக்கிறார் என்ற பாசமா, வாய்ப்புக் கிடைத்தால் நாமும் யாரிடமும் மாட்டிக்கொள்ளாமல் ஊழல் செய்யலாம் என்கிற கேடுகெட்ட மனநிலையா. இனி வரும் காலங்களில் தனி மனித ஊழல்வாதிகள் பெருகி வருவர், தனி மனித ஊழல்வாதிகள் நிறைந்த சமூகத்தை ஆள்வதற்கு ஊழல் அரசர்களே வருவார்கள் உத்தமர்கள் வரப்போவதில்லை.

அடிமைகளின் வாழ்க்கை

அடிமைகளின் வாழ்க்கை
----------------------------------------
அப்படி ஒன்றும் எளிதானதல்ல அடிமைகளாய் வாழ்வது, சூடு சொரணை வெட்கம் மானம் எல்லாவற்றையும் உதிர்த்து விட வேண்டியதாய் இருக்கிறது, விடுதலை உணர்வோடும் தன்மானத்தோடும் வாழத்தெரிவதில்லை அடிமைகளுக்கு, அடிமைகளாய் நடத்தும் ஏதாவதொரு எஜமான் தேவையாய் இருக்கிறது எப்போதும் அவர்களுக்கு, முகத்தில் காறி உமிழ்ந்தாலும் துடைத்துவிட்டு மீண்டும் துப்புங்கள் எஜமான் என்று முகத்தைக்காட்டும் மனப்பக்குவம் தேவையானதாக இருக்கிறது. ஆகச் சிறந்த அடிமை தான்தான் என்பதை நொடிக்கொரு முறை நிரூபிக்க வேண்டியதாக இருக்கிறது.
அடிமைகளுக்குள் அவ்வப்போது போட்டியும் வந்துவிடுகிறது யார் மிகச் சிறந்த அடிமையென்று காட்டிக்கொள்வதில், அடிமைத்தனத்தில் புதிய யுக்திகளை கற்றுக்கொண்டுவரும் புதிய அடிமைகளிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டி இருக்கிறது அதற்காக தனது அடிமைத்தன உத்திகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகி விடுகிறது. எஜமானர்கள் காலில் விழுவதற்கு தயாராக இருக்க வேண்டியிருக்கிறது எங்கேயும் எப்போதும். எட்டி உதைத்தாலும் உதைத்த கால்களை தொட்டு வணங்கி கால்கள் வலிக்கிறதா எஜமான் என்று கேட்கக்கூடிய பொறுமை அவசியமாகிறது.
அறிவாளிகளாலும் திறமையாளர்களாலும் அவர்களுக்குரிய இடத்தை எஜமானர்களிடத்தில் பெற்று விட முடியும் ஆனால் அந்த இடத்தில் காலமெல்லாம் நீடித்து இருப்பதற்கு அடிமைகளால் மட்டும் தான் முடியும், எஜமானர்களுக்கு எப்போதும் அடிமைகளையே பிடித்திருக்கிறது அடிமைகளுக்கும் தங்களை அடிமைகளாய் நடத்தும் எஜமானர்களையே பிடித்திருக்கிறது.

கருத்துகள்

தமிழக வரலாற்றை பாஜக மாற்றப்போகிறது .. டாக்டர் தமிழிசை.
வரலாற்றை மாற்றி எழுதுவதும் திரித்து எழுதுவதும் தானே உங்கள் வரலாறு.
                                     ------------------------------------------------------------
மோடி இந்தியாவிற்கு கடவுள் கொடுத்த வரம்- சிவ்ராஜ்சிங் செளகான், ம.பி முதல்வர்
பெருமைக்காக புள்ளய பெத்தேன்னாலாம் ஒருத்தி,
அதுக்கு ஏண்டி எருமைய பெத்தன்னாலாம் இன்னொருத்தி.
                                      ----------------------------------------------------------
நாட்டை மீட்க 5 ஆண்டு போதாது. மோடி மீண்டும் வெற்றி பெற வேண்டும் - நடிகை கங்கனா ரனாவத்.
அடகு வச்சவருதான் மீட்கனும்னு சொல்றாங்க போல.
                                    ----------------------------------------------------------
ஓ.பி.எஸ் செய்த பாவங்கள் அவரை விடாது - தினகரன்
இதுகளயெல்லாம் எங்க தலையில கட்டுன பாவமும் ஒங்கள விடாதுய்யா.
                                  ---------------------------------------------------------
வண்டலூர் பூங்காவில் சிங்கக் குட்டிக்கு "ஜெயா" என்று பெயர் சூட்டப்பட்டது
அது கால்ல யாரும் விழுகலயே?      

பெரியாரெனும் ஓர் ஆகச் சிறந்த ஆட்டக்காரர்

பெரியாரெனும் ஓர் ஆகச் சிறந்த ஆட்டக்காரர்
------------------------------------------------------------------------
பெரியாரின் ஆடுகளம் தூரத்தால் குறிக்கப்படுவது அல்ல, அது காலத்தால் குறிக்கப்பட வேண்டியது. அவர் எப்போதும் எதிர்ப்பு ஆட்டமே (Offence) ஆடியிருக்கிறார் தடுப்பாட்டத்தில் (Defence) அவருக்கு விருப்பமில்லை. ஆனால் ஒரு போதும் அவர் முரட்டு ஆட்டம் ஆடியது இல்லை.
பிரேசில் வீரர் நெய்மரைப்போல் அழுது நடிக்கும் அழுகுணி ஆட்டமும் ஆடியது இல்லை, அர்ஜென்டினா வீரர் மரடோனாவைப்போல் கையால் கோல் அடித்துவிட்டு அது கடவுளின் கை (Hand of God) என்று பொய் சொல்லி ஏமாற்றியதைப் போன்ற புளுகுணி ஆட்டமும் ஆடியதில்லை. துடிதுடிப்போடும் சுறுசுறுப்போடும் களத்தில் பம்பரமாய் சுழன்று ஆடியிருக்கிறார் தன் வாழ்நாள் முழுவதும்.
எதிராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பந்துகளை எல்லாம் நேர்த்தியாக திருப்பி தடைகளை தகர்த்து வெற்றிக் கோல்களாக்கி வெற்றிக்கோப்பையை பார்வையாளர்களாகிய பொதுமக்களுக்கே பெற்றுத் தந்திருக்கிறார் பெரியார், இதோ கோல் அடிக்கிறேன் முடிந்தால் தடுத்துப் பார் என்று சொல்லிச் சொல்லியே அடித்திருக்கிறார் கில்லி மாதிரி.
சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டு வீரர்கள் ஆடுகளத்திலிருந்து வெளியேற்றப்படுவது போல், பெரியாரும் களத்திலிருந்து வெளியேற்றப்பட்டு அவ்வப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார், அது அவர் செய்த தவறுகளுக்காக அல்ல அவரது ஆட்டைத்தை கண்டு கலக்கமடைந்த எதிராளிகளுக்கு ஏற்பட்ட பயத்தினால்.
வெற்றிக்குரிய கோலை அடிக்கும் வீரராக அவர் இருந்தபோதும் களத்தில் குழுவாக இணைந்து ஒற்றுமையுடனே ஆடி இருக்கிறார், ஆம் அவரின் எல்லாப் போராட்டங்களிலும் பொதுமக்களின் பங்களிப்பும் சேர்ந்தே இருந்திருக்கிறது.
அன்று மட்டுமல்ல இன்றும் அவரே ஆகச் சிறந்த ஆட்டக்காரராக இருக்கிறார் மக்களிடத்தில். ஏனெனில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் களத்தில் ஆடிய ஆட்டம் அப்படி.

Monday 6 August 2018

அம்மா அப்பாவிற்குப் பிறந்தவன்

அம்மா அப்பாவிற்குப் பிறந்தவன்
----------------------------------------------------
பசிக்கான உன் உணவை
இனி நான் சமைக்க மாட்டேன்
வளர்ந்துவிட்ட உன் முடியை
இனி நான் வெட்ட மாட்டேன்
அழுக்கான உன் உடையை
இனி நான் வெளுக்க மாட்டேன்
கிழிந்துபோன உன் செருப்பை
இனி நான் தைக்க மாட்டேன்
நாறுகின்ற உன் மலத்தை
இனி நான் அள்ள மாட்டேன்
உன் வீட்டு சாக்கடைக்குள்
இனி நான் இறங்க மாட்டேன்
உன் வீட்டு சாவுக்கு
இனி நான் பறையடிக்க மாட்டேன்
நீ சூத்திரன்
காலில் இருந்து பிறந்தவன்
பார்ப்பானின் வைப்பாட்டி மகன்,
ஆனால் நானோ என் அம்மா அப்பாவிற்குப் பிறந்தவன்
க.ம.மணிவண்ணன்

கருத்துகள்

மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை - ரஜினி
நீங்க இன்னும் கட்சி தொடங்குறதப் பத்தியே முடிவு செய்யலயே பாஸ்.
                                      ---------------------------------------------------------
பிரதமர் நாற்காலியில் இருந்து நான் எழ ஒருவர் விரும்புகிறார்- மோடி
ஒருத்தர் இல்ல பல கோடி பேரு
                                      --------------------------------------------------------
மோடியுடன் கல்லூரியில் படித்த ஒரு நபரை காட்டுங்கள்- ராகுல் காந்தி
சாரி பாஸ்,அவரு இன்னும் பொறக்கவே இல்ல.
                                      -------------------------------------------------------
இந்தியா ஒரு கோவில் அதில் கடவுள் இருக்குமிடம் தமிழ்நாடு - எடப்பாடி
தமிழ்நாட்டுலதான் 7000 கடவுள் திருடு போச்சுன்னு சொல்றாங்க
                                    --------------------------------------------------------
இமயமலை ஏறிவிட்ட பெண்களால் இன்னும் சபரிமலை ஏற முடியாமலேயே இருக்கிறது.
                                   ----------------------------------------------------------
அயோத்தியில் போலி சாமியார்களை களைய அடையாளம் அறியும் சோதனை : யோகி ஆதித்தியநாத்
சாமியார்னாவே போலிதானே.   

ரஜினி - கடவுளின் அல்லக்கை

உழைப்பால்,முயற்சியால் மட்டும் வெற்றி பெற முடியாது,ஆண்டவன் அருள் இருந்தால் தான் வெற்றி கிடைக்கும் – ரஜினிகாந்த்
--------------------------------------------------------------------------------------
ரஜினி - கடவுளின் அல்லக்கை
------------------------------------------------
தன்னைவிட அதிக திறமையும் முயற்சியும் உழைப்பும் உள்ளவர்கள் நிறைய பேர் இருக்கும்போது, சொல்லிக்கொள்ளும்படி எந்தவித திறமையும் கடின உழைப்பும் இல்லாத தான் இந்த சமூகத்தில் பேருடனும் புகழுடனும் வாழ்வதற்குக் காரணம் என்ன? வெற்று மாயக் கவர்ச்சியை மூலதனமாக்கி ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்று, அவர்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை சுரண்டிக்கொழுத்து, மாபெரும் செல்வந்தனாக தான் இருப்பதற்கு காரணம் என்ன? இந்த விடை தெரியாத கேள்விகளுக்கு ரஜினி கண்டுபிடித்த விடைதான் கடவுள்,கடவுள் அருள்.
அதாவது, ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் தகுதியும் திறமையும் இல்லாத ஒருவர் அந்த நிறுவனத்தின் முதலாளியிடமிருந்து, திறமை வாய்ந்த மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக சம்பளம் வாங்கும்போது, தனது முதலாளியிடம் எவ்வளவு நன்றியும் விசுவாசமும் வைத்திருப்பாரோ, அதைப்போன்றதே ரஜினி தன்னுடைய முதலாளியாக நினைக்கின்ற கடவுளின் மேல் வைத்திருக்கும் பக்தியும், அதுமட்டுமல்லாமல் எங்கே தனது முதலாளி எல்லாவற்றையும் பறித்துக்கொள்வாரோ தடுத்துவிடுவாரோ என்ற பயமும்தான் அவரது அளவற்ற கடவுள் பக்திக்கு காரணம்.
ரஜினி சொல்லவருவது என்னவென்றால் யாரெல்லாம் சதாசர்வகாலமும் கடவுளுக்கு அல்லக்கைகளாக இருந்து சொம்படிக்கிறார்களோ அவர்களுக்கே அவர் அருள்புரிந்து வெற்றிபெறச் செய்வார் என்பதே. இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது இப்படிப்பட்ட கடவுள் மட்டும் கேடுகெட்டவர் அல்ல, இதை வெட்கமின்றி சொல்லித்திரியும் ரஜினியைப் போன்றவர்களும் கேடுகேட்டவர்களே.
க.ம.மணிவண்ணன்
13/07/2018

இராஜாஜியும் குலக்கல்வியும்

"என் பாட்டன் ராஜாஜி குலக்கல்வியை கொண்டு வந்ததை தவிர வேறு எந்தத் தவறையும் செய்ய வில்லை - "சீமான்"
இராஜாஜியும் குலக்கல்வியும்
-----------------------------------------------
அன்றைய சென்னை மாகாணத்தின் முதல்வராக 1952 முதல் 1954 வரை இராஜாஜி இருந்தார். அவர் கொண்டு வந்த திட்டம் தான் “குலக்கல்வி”. தந்தை பெரியார் துவங்கி சாதாரணமானவர்கள் வரை எதிர்த்த திட்டம். அந்த திட்டம் என்ன? அதாவது, தினமும் மூன்று மணி நேரம் மட்டுமே கல்வி. மீதி நேரம் தகப்பன் செய்யும் தொழிலை கற்றுக் கொள்ளவேண்டும். எவ்வளவு அருமையான திட்டம்?
அதாவது இராஜாஜி போன்ற பார்ப்பனர்கள் படித்து, பட்டம் பெற்று, பதவி சுகத்தை அடையலாம். அதே வேளை முடிவெட்டுகிற குப்பனின் மகன் பள்ளிக்கு செல்லலாம் அங்கு மூன்று மணி நேரம் இருந்து விட்டு வந்து முடிவெட்ட தகப்பனாருடன் வீடு வீடாக சென்று ‘தொழில்’ பழகலாம். அப்படியே காலப்போக்கில் படிப்பை நிறுத்தி முடி திருத்தும் தொழிலில் ஈடுபடலாம். என்ன உயரிய சிந்தனை? துணி வெளுப்பவர் மகன் துணி வெளுக்கவும், செருப்பு தைப்பவர் மகன் செருப்பு தைக்கவும், மீன் விற்பவர் மகன் மீன் விற்கவும், மணியாட்டி பூஜை செய்பவர் மகன் மணியாட்டவுமான சாதிச் சாக்கடையை கட்டிக்காக்கிற சாக்கடை நாற்றெமெடுக்கிற ஆரிய சிந்தனையின் வக்கிரம் தான் இராஜாஜியின் குலக்கல்வித் திட்டம்.
அன்று இந்த குலக்கல்வித் திட்டத்தை முழுவேகமாக சிலிர்த்தெழுந்து சிங்கமாக தந்தை பெரியார் எதிர்த்ததால் இன்று அனைவருக்கும் அடிப்படைக் கல்வியும் தொழில்நுட்ப கல்வி என்பதும் நடைமுறையாகி இருக்கிறது. அந்த எதிர்ப்பை தாங்காது இராஜாஜி பதவியை துறக்க நிர்ப்பந்திக்கப்பட்டார் என்பது தான் உண்மை. இராஜாஜி பதவி துறந்தது 1954.இராஜாஜி பதவியிழந்த பின்னர் தந்தை பெரியாரால் ஆதரவளிக்கப்பட்டு படிக்காத மேதை காமராஜர் முதலமைச்சரானார்.
குலக்கல்வி திட்டத்தை ஒழித்ததோடு அதிக எண்ணிக்கையில் பள்ளிகள், கல்லூரிகளை திறந்து அனைவருக்கும் கல்வியை தந்தார் காமராஜர். இலவச கல்வி முறை, மதிய உணவு திட்டம் என சமூக நோக்கான உயர்ந்த திட்டங்களை கொண்டுவந்து ஏழை வீட்டு பிள்ளைக்கும் கல்வி கிடைக்க செய்தார். அதன் விளைவு தான் இன்று பார்ப்பனர்கள் மட்டுமல்ல அனைவருக்கும் கல்வி என்பது நடைமுறையானது. அனைவரும் மருத்துவம், சட்டம், பொறியியல் என படிக்க முடிந்தது. (திராவிட இயக்கங்களின் சாதனை, தாக்கமென்ன என முகமூடியணிந்து கேட்பவர்களுக்கு இதுவும் சாதனைகளில் ஒன்று என்பது புரியட்டும்.)
இராஜாஜி பதவியை விட்டு இறங்கியதும் அரசுக்கு நெருக்கடி தீர்ந்தது எப்படி? பள்ளிகளுக்கு கட்டிடங்கள், ஆசிரியர்கள், புதிய பள்ளிகள், கல்லூரிகள், மதிய உணவு என திட்டங்கள் வந்தது எப்படி? அப்படியானால் இராஜாஜிக்கு நிர்வாக திறனில்லை! அல்லது அவர் சார்ந்த பார்ப்பன குலத்தின் வேதங்கள் சொல்லுகிற சாதியை கட்டிக்காக்க அரசு திட்டங்கள் தீட்டி தனது ‘சாணக்கியத்தனத்தை’ நிரூபித்தார். அந்த குலக்கல்வி சாணக்கியம் பெரியார், காமராஜர் என்கிற திராவிடர்களால் அழிக்கப்பட்டது என்பது வரலாறு.
இராஜாஜியின் குலக்கல்வி திட்டம் மனிதனை அடிமையாக வைத்திருக்கும் தந்திரமுடையதே தவிர கல்வியை வழங்குவதோ அல்லது வேலைவாய்ப்பின்மையை களையும் நோக்கமுடையதோ அல்ல. கல்வி பயிலும் பார்ப்பனரல்லாத ஒவ்வொருவரும் மனதில் நிறுத்த வேண்டிய தலைவர்கள் பெரியார், காமராஜர் என்பதை தமிழக வரலாறு பதிவு செய்துள்ளது.
ராஜாஜி இரண்டு முறை சென்னை மாநிலத்திற்கு முதல் அமைச்சராக வந்தார்.இரண்டு முறையும் தேர்தலில் நின்று மக்கள் வாக்குப் பெற்று முதல் அமைச்சர் ஆனவர் இல்லை. கொல்லைப்புறம் வழியாக (மேல்சபை மூலம்) உள்ளே நுழைந்தவர்தான் அவர்.
1937இல் முதல் அமைச்சராக வந்தபோது அவர் செய்தது 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடியது,அதே நேரத்தில் ரூ.12 லட்சம் செலவில் சமஸ்கிருதக் கல்லூரியை ஏற்படுத்தினார். 1952_54 காலகட்டத்தில் இரண்டாவது முறையாக மாநில முதல் அமைச்சராக வந்தபோது அரசிடம் போதிய நிதி இல்லை என்று சொல்லி 6000 பள்ளிகளை இழுத்து மூடினார் மூதறிஞர் ராஜாஜி(!?). ஆனால் அதே நேரத்தில் வேதபாடசாலைகள் திறக்கப்பட்டன.இருமுறை முதல் அமைச்சராக வந்தபோதும் அவர் செய்ததெல்லாம் பள்ளிக் கூடங்களை இழுத்து மூடியதுதான்.காமராசர் ஆட்சிக்கு வந்தவுடன் மூடிய பள்ளிகளை திறந்ததோடு மட்டுமல்லாமல் மேலும் ஆயிரக்கனக்கான பள்ளிகளை திறந்தார். அதன் மூலம் தமிழகத்தில் கல்வி புரட்சி ஏற்பட்டது.
தமிழகத்தில் கடந்த 60,70 ஆண்டுகளில் என்ன நடந்தது என்பது இப்போது இருக்கும் இளைய சமுதாயத்திற்கு தெரியவில்லை என்பது கவலை அளிக்கும் விடயம்.
அண்ணன் சீமான் சொல்வதே அரசியல்,வரலாறு என நம்பி கைதட்டி விசிலடித்து சில்லரைகளை சிதற விடும் தம்பிகளை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது.

கருத்துகள்

அமித்ஷாவின் வருகை எங்களுக்கு பவுர்ணமி. சிலருக்கு அமாவாசை-தமிழிசை
மேடம் அமித்ஷாவோட முடி இல்லாத தலைய கிண்டல் பண்றாங்க
                                                 ----------------------------------------------------
வர்றவங்கள வாங்க வாங்கன்னு சொல்றதுதானடா தமிழனோட பண்பாடு, வராதே திரும்பிப்போன்னு எங்கள சொல்ல வைக்கிறீங்களேடா பிஜேபிக்காரனுகளா.
                                               ------------------------------------------------------
நான் இனி பொது கூட்டங்களில் பேசவே மாட்டேன்.
-சீமான்
அண்ணே, இனிமே யாருண்ணே எங்களுக்கு ஆமக் கத,கப்பல் கத,AK 74 கதயெல்லாம் சொல்லுவா.
                                               ----------------------------------------------------
அமித்ஷா பேச்சை மொழிபெயர்ப்பு செய்ததில் தவறு ஏதுமில்லை. - எச் ராஜா
அப்படின்னா அமித்ஷாதான் தவறா பேசி இருக்காரு.
                                               ---------------------------------------------------
வீட்டில் இல்லாத நேர்மையை வெளியில் தேடிக்கொண்டிருக்கிறார் ரஜினி.

மதுரையை எரித்த கண்ணகிக்கு ஒன்னுந்தெரியாத சின்னப்பய எழுதுறது,

மதுரையை எரித்த கண்ணகிக்கு ஒன்னுந்தெரியாத சின்னப்பய எழுதுறது,
எனக்கு இலக்கண இலக்கியம் சிலப்பதிகாரமெல்லாம் தெரியாது, ஒங்கள சினிமாலதான் பாத்துருக்கேன். ஒங்ககிட்ட சில விசயங்கள சொல்லனும்னு தோணிச்சு அதுனாலதான் இந்த கடுதாசிய எழுதுறேன்.
1) உங்களுக்கு நடந்தது குழந்தை திருமணம்,உங்களுக்கு 12 வயசு கோவலனுக்கு 16 வயசு அதாவது good touch, bad touch னா என்னன்னு தெரியாத வயசுல ஒங்களுக்கு கல்யாணம் நடந்திருக்கு,நீங்க இந்த கல்யாணம் வேணாம்னு சொல்லி அழுது அடம்புடிச்சு கல்யாணத்த நிப்பாட்டாம இந்த தப்புக்கு நீங்களும் தொண போயிருக்கீங்க.
2) அந்த சின்ன வயசுலேயே உங்க வீட்டுக்காரரு மாசறு பொன்னே வலம்புரி முத்தேன்னு பாடும்போது இது child abusing னு சொல்லி கண்டிக்காம நீங்களும் சந்தோசமா சிரிச்சு ரசிச்சுக்கிட்டு இருந்திருக்கீங்க.
3) கோவலனோட character என்னன்னு ஒங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும்,அப்படி தெரிஞ்சிருந்தும் நானும் ஒங்க கூட வர்றேன் அத்தான்னு சொல்லாம அவன மட்டும் வெளியூருக்கு அனுப்பி வச்சிருக்கீங்க business பண்றதுக்கு.
4) போனவன ரெம்ப நாளா காணாம்னதும் பெத்தவங்ககிட்ட சொல்லி தேடச்சொல்லியிருக்கணும்.நீங்க ரொம்ப வசதியான குடும்பம் அதுனால அரசர்கிட்ட சொல்லி ஒற்றர்கள அனுப்பி அவன கண்டுபிடிச்சு கூட்டிக்கிட்டு வரச்சொல்லியிருக்கலாம் ஆனா நீங்க அத செய்யாம இருந்திருக்கீங்க.
5) காசு பணத்தையெல்லாம் அழிச்சிட்டு மாதவி மேல சந்தேகப்பட்டு சண்டைபோட்டுட்டு வீட்டுக்கு வந்தவன நீ எதுக்கு இங்க வந்தேன்னு சொல்லி வெரட்டிவிடாம அவன சேத்துக்கிட்டீங்க இது நீங்க செஞ்ச உலக மகா தப்பு.
6) ஏற்கனவே ஒரு தடவ உங்கள விட்டுட்டு போனவன்னு தெரிஞ்சும் அவன் கூடப்போகாம business னா என்னன்னே தெரியாத அவன்கிட்ட ஒங்க சிலம்பக் கொடுத்து வித்திட்டு வரச்சொல்லியிருக்கீங்க.
7) பாண்டிய நெடுஞ்செழியன் கோபத்துல கொண்டுவா கள்வனைன்னு சொல்றதுக்குப் பதிலா கொன்றுவா கள்வனைன்னு சொன்னதும் கோவலனை கொன்னுட்டாங்க, நீங்களும் கோவத்தோட போயி தேரா மன்னான்னு பாண்டியன்கிட்ட வாக்குவாதம் பண்ணி உண்மைய நிரூபிச்சதும் அவனும் நாம தப்பு பண்ணிட்டோமேன்னு feel பண்ணி செத்துப்போயிட்டான்.
8) இதோட நீங்க விட்டுருக்கணும் ஆனா என்ன பண்ணீங்க உங்க சொந்தப் பிரச்சனைக்காக பொது சொத்துக்களையும் பொதுமக்களையும் தீயில எரிய விட்டுருக்கீங்க அது மட்டுமா பாப்பானுகள ஒன்னும் செய்யக்கூடாதுன்னு தீக்கிட்ட சொல்லி இருக்கீங்க. ஒழைக்காம தின்னு கொழுக்குற பாப்பானுகளுக்கு ஒன்னும் ஆகக் கூடாது, அன்னாடம் ஒழச்சுப் பொழைக்குற எங்க பாட்டனும் பாட்டியும் நெருப்புல வெந்து சாகணும்னு நெனச்சிருக்கீங்க இது எவ்வளவு பெரிய அநியாயம்.
9) நீங்க ஒழுங்கா check பண்ணியிருந்தா ஒங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சிருக்கும், அந்த சிலம்பயே பாப்பானுகதான் திருடியிருப்பானுக, இவ்வளவு technology, cctv இருக்குறப்பவே கோவில் சிலைய திருடி இருக்குறானுக, கருவறைக்குள்ளேயே அசிங்கம் பண்றானுக, தப்பு பண்ணிட்டு தலைமறைவா திரியிறானுக அப்ப அந்த காலத்துல என்னென்ன பண்ணியிருப்பானுக, நீங்க என்னடான்னா அவனுகள காப்பாத்தியிருக்கீங்க.
இப்பவாவது தெரிஞ்சுக்குங்க நீங்க எவ்வளவு பெரிய தப்புகள பண்ணியிருக்கீங்கன்னு.
இப்படிக்கு,
தீயில் எரிந்து சாம்பலான பாட்டன் பாட்டிகளின் பேரன்
க.ம.மணிவண்ணன்

கருத்துகள்

மாட்டுகறி சாப்பிட்டால்
மிருக குணம் வந்து விடும்.
- சுகி சிவம்.
ஹிட்லர் சுத்த சைவமாமே மிஸ்டர் சுகிசிவம்.
                                                 ----------------------------------------------
பகுத்தறிவு அரசியல்தான் எனது நிலைப்பாடு-கமல்
ஏன்யா நீ எப்போதுமே மய்யத்துலதான போவ திடீர்னு ஏன்யா லெப்டுல திரும்புற
                                                ----------------------------------------------
தனது சொந்தப்பிரச்சனைக்காக பொதுச் சொத்தையும் உயிர்களையும் எரிக்கலாம் என அரசியல்வாதிகளுக்குச் சொல்லித்தந்தவள் தான் கண்ணகி.
                                                 -----------------------------------------------      

சிலை திருடிகளின் கதை

சிலை திருடிகளின் கதை
----------------------------------------
ஹரஹர மஹாதேவகி
ஒரு ஊருல கணபதி அய்யரு கணபதி அய்யருன்னு ஒருத்தரு இருந்தாரு அவருக்கு கிச்சா கிச்சான்னு ஒரு புள்ளாண்டான் இருந்தான், ரெண்டு பேரும் ஒரு கோவில்ல அர்சகரா இருந்தாங்க, அந்த கோவில்ல ஒரு அம்பாள் சிலை இருந்துச்சு கணபதி அய்யருக்கு அம்பாள் சிலை மேல ரெம்ப நாளாவே ஒரு கண்ணு இத எப்படியாவது திருடி வித்துறனும்னு ஒரு நாளு யாருக்கும் தெரியாமா அந்த சிலைய தூக்கிட்டுப்போயி நல்ல வெலைக்கி வித்திட்டாரு,அதுக்குப் பதிலா வேறொரு டூப்ளிகேட் சிலைய கொண்டு வந்து வச்சுட்டாரு.அவரு புள்ளாண்டானுக்கும் ஒரு ஆச எப்படியாவது சிலைய திருடி வித்துறனும்னு, அவனோட தோப்பனார மாதிரியே யாருக்கும் தெரியாம சிலைய திருடி வித்திட்டு அதுக்குப் பதிலா வேறொரு சிலைய கொண்டாந்து வச்சுட்டான். காலையில கணபதி அய்யரு சிலைய குளிப்பாட்டும்போதுதான் தெரியுது அது அம்பாள் சிலை இல்ல ஒரு ஆம்பள சிலையின்னு அவருக்கு ஒரே ஆச்சரியம் அம்பாள் சிலை எப்படி ஆம்பள சிலையா மாறுச்சுன்னு, இத தன்னோட புள்ளாண்டன்கிட்ட சொல்றாரு அதுக்கு அவன் என்னைய மன்னிச்சுக்குங்க நான்தான் சிலைய திருடி வித்துட்டேன் தவறுதலா ஆம்பள சிலையைக் கொண்டாந்து வச்சுட்டேன்னு சொல்லி அழுதான், அதுக்கு கணபதி அய்யரு இதுக்குப் போயி ஏண்டா அழுகுற நானாவது ஒரிஜினல் சிலைய திருடி வித்தேன் நீ டுப்ளிகேட் சிலையவே வித்திருக்கியே நீ பெரிய கெட்டிகாரன்டா,தாய் எட்டடி பாஞ்சா குட்டி பதினாறு அடி பாயும்டான்னு சொல்லி ரெம்ப சந்தோசப்பட்டாரு.தோப்பனார்கிட்ட புள்ளாண்டான் கேட்டான் ஆம்பள சிலையா இருக்கே மாத்திறலாமான்னு அதுக்கு கணபதி அய்யரு இங்க சாமி கும்புட வர்றவனுகளுக்கு அது அம்பாள் சிலையா ஆம்பள சிலையான்னு தெரியாது ஏதோ ஒரு கல்லு இருந்தா போதும் கும்புட்டுட்டு போய்கிட்டே இருப்பானுக, அவனுக நம்ம கிட்ட கேள்வி கேட்டுருந்தா இவ்வளவு காலமா நாம ஏமாத்தி பொழக்க முடியுமான்னு சொல்லி தொப்பை குலுங்க சிரிச்சாரு.கொஞ்ச நாள் போகட்டும் இந்த சிலையையும் திருடி வித்துறலாம்னு ரெண்டு பெரும் பேசிக்கிட்டாங்க.
ஹரஹர மஹாதேவகி

கருத்துகள்

நோட்டா ஆப்ஷன் என்பது தேவையில்லாத ஒன்று-தமிழிசை
அவங்களோட ஒரே எதிரி நோட்டாதான் அதான் ரெம்பக் கோவப்படுறாங்க
                                     ------------------------------------------------
சிவனுக்குத் தமிழ் தெரியாது-ஜக்கி
ஒரு வேள சோமாலியா நாட்டுக்காரரா இருப்பாரோ
                                    -----------------------------------------------
சிவனுக்குத் தமிழ் தெரியாது-ஜக்கி
நேத்து வந்த பானிபூரிக்காரனுக்கு தமிழ் தெரியுது, 2000 வருசமா இங்க இருக்குற ஆளுக்கு இன்னும் தமிழ் தெரியல ப்ளடி ஃபூல்.
                                 -------------------------------------------------
சிவனுக்குத் தமிழ் தெரியாது-ஜக்கி
முழுசாத் தெரியலைனாலும் மார்வாடி மாதிரி நம்மள்கி நிம்மள்கினு கூடவா பேசத் தெரியாது.
                               ------------------------------------------------- 

கமலகாசன் அவர்களே....

சாதியை ஒழிக்க பள்ளி விண்ணப்பப் படிவத்தில் சாதி மதப்பெயரை குறிப்பிடாதீர்கள்,சாதிச்சான்றிதழ் பெறுவதை கைவிடுங்கள். – கமலகாசன்
------------------------------------------------------------------------------------------------
கமலகாசன் அவர்களே....
நீங்கள் என்னதான் மறைத்தாலும் வெளியில் வந்து குதித்து ஆடும் உங்கள் உச்சிக் குடுமியை எதுவும் செய்ய முடியாது உங்களால். உங்கள் பூணூலை கழற்றிவிட்டு நீங்கள் வேண்டுமானால் முற்போக்கு வேடம் போடலாம் ஆனால் உங்கள் உடல் முழுவதும் நரம்புகளாக ஓடும் பூணூல்களை மறைக்க முடியாது உங்களால். பள்ளிகளில் சாதி மதப்பெயர் குறிப்பிடப்படுவதும் சாதிச்சான்றிதழ் பெறப்படுவதும் எதனால் என்று தெரியாத அளவிற்கு நீங்கள் ஒன்றும் ஒன்றுமே தெரியாத அப்பாவி இல்லை.உங்களை ஒன்றுமே தெரியாத அப்பாவி என்று நம்பி ஏமாறும் அளவிற்கு நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.
பள்ளிகளில் குறிப்பிடப்படும் சாதி மதப்பெயர்களாலும் சாதிச்சான்றிதழாலும் தான் சாதி இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்றதொரு பொய்யான தோற்றத்தை நிறுவ முயலுகிறீர்கள்.நால்வகை வர்ணத்தைச் சொல்லி சூத்திரன் என்று எங்களை அடிமைப்படுத்தி எங்கள் கல்வி உரிமையை பறித்து காலம் காலமாக உங்கள் கூட்டம் செய்த கொடுமையில் இருந்து எங்களை மீட்டு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் உயர் நிலையை அடைவதற்கு செய்யப்பட்ட ஏற்பாடே இடஒதுக்கீடு,உலக மகா அறிவாளியான உங்களுக்கு அது தெரியாதது அல்ல. இருந்த போதும் இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே உங்கள் கூட்டத்தாரின் நோக்கம் அதை நேரடியாகச் சொல்ல துணிவில்லாமல் உங்கள் பசப்பு மொழிகளால் நாக்கில் தேன் தடவி இடஒதுக்கீட்டையும் அதனால் கிடைக்கும் பலனையும் கைவிடுங்கள் என்று எங்களிடம் கோரிக்கை வைக்கிறீர்கள்.
நாங்களாகவா விரும்பி ஏற்றுக்கொண்டோம் சாதிகளை உங்கள் கூட்டம் திணித்தது தானே இது. எங்கள் கல்வி உரிமையை நீங்கள் தடுக்காது இருந்திருந்தால் இடஒதுக்கீடு என்பதே எங்களுக்கு தேவை இல்லாததாக இருந்திருக்கும்.நாங்கள் உயர் கல்வி கற்று அங்கொன்றும் இங்கொன்றுமாக நாங்கள் உயர் பதவிகளில் இருப்பது உங்கள் கண்களை உறுத்துகிறது போலும்.சாதியக் கட்டமைப்பு இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்குக் காரணமே பார்ப்பனீயம் தான், பார்ப்பனீயம் ஒழிந்தால் தான் சாதிகள் ஒழியும் இதைச் சொல்வதற்கு அறிவு நாணயம் இருக்கிறதா உங்களிடம்.
பூணூல்களை அறுத்து எறியுங்கள், அனைவரும் அர்ச்சகராக அனுமதியுங்கள் எல்லோரையும் உங்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று உங்கள் கூட்டத்திடம் சொல்வதற்கு துணிச்சல் இருக்கிறதா உங்களிடம். இதை முதலில் செய்து சாதியை ஒழிக்கச் சொல்லுங்கள் உங்கள் கூட்டத்திடம். நால்வர்ணத்தையும் நாலாயிரம் சாதிகளையும் உருவாக்கிய உங்கள் கூட்டத்தில் இருந்து சாதி ஒழிப்பை ஆரம்பியுங்கள் அதுவே நியாயமும் நேர்மையும் ஆகும்.
கமலகாசன் அவர்களே, நீங்கள் முற்போக்குப் பார்ப்பான் பாரதியின் புதிய பதிப்பு தான் என்பது எங்களுக்குத் தெரியும். உங்களை எல்லாம் எப்படிக் கையாள வேண்டுமென்று எங்களுக்கு ஈரோட்டுக் கிழவன் சொல்லித்தந்து விட்டுப் போயிருக்கிறார். வைதீகம் பேசும் பார்ப்பானைக் கூட நம்புவோம் ஆனால் உம்மைப் போன்ற முற்போக்கு பேசும் பார்ப்பானை நம்புவதற்கு நாங்கள் தயாராக இல்லை.

கருத்துகள்

பாஜகவில் ஜாதி கிடையாது - வெங்கய்யா நாயுடு
இந்து மதத்துல ஜாதியே கிடையாதுன்னு சொன்னாலும் சொல்லுவாங்க.
                                           ----------------------------------------------------
தெய்வத்தை அவமதிப்பு செய்பவர்களை கோவிலுக்குள் அனுமதிக்கக்கூடாது - பொன்.ராதா
யார சொல்றீங்க, காஞ்சிபுரம் தேவநாதன் குருக்களையும் ஸ்ரீவில்லிபுத்தூர் பத்ரி நாராயணன் பட்டாச்சாரியாரையுமா.
                                            ---------------------------------------------------
சென்னையில் #பாஜக_பாமக தொண்டர்கள் இடையே பயங்கர மோதல்-செய்தி
மதவெறிக்கும் சாதிவெறிக்கும் சண்டை.
                                           ---------------------------------------------------
நான் பிரபாகரனை சந்ததித்தது யாருக்கும் தெரியாது - சீமான்
ஆமா, அது பிரபாகரனுக்குக் கூட தெரியாது.
                                         -----------------------------------------------------
நானே ஒரு சயனைடு குப்பி # சீமான்
சிரிக்காம சொல்லுங்க, சயனைடு குப்பியா மூக்குப்பொடி டப்பியா?
                                       -----------------------------------------------------
சேலம் 8 வழி பாதையால் டயர் தேய்மானம் குறைகிறது
டயரைத் தொட்டு வணங்கியவர்களுக்குத் தான் தெரியும் டயரின் அருமை       

நாத்திகர்களாக மாறுங்கள்

நாத்திகர்களாக மாறுங்கள்
-----------------------------------------
அன்பை மட்டுமே போதிப்பதாகச் சொல்லும் உங்கள் எல்லா மதங்களும் தங்களுக்கு எதிராக விமர்சனம் வரும்போதும் கருத்துக்கள் வரும்போதும் கருத்துக்களோடு மோதாமல் கருத்துச் சொன்னவர்களோடுதான் மோதி இருக்கின்றன, மிரட்டி இருக்கின்றன, அடி பணியாத போது எங்கே நாம் தோற்று விடுமோவோ எனப் பயந்து கொலை செய்திருக்கின்றன. இதுதான் வரலாறு நெடுகிலும் காணக் கிடைக்கிறது.
ஏனென்றால் உங்கள் மதங்கள் வெற்று நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உணர்சிகளால் கட்டப்பட்டவை. அவைகளால் விவாதிக்கவோ தங்களது கருத்துக்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் புதிய கருத்துகளை ஏற்றுக்கொள்ளவோ தங்களைப் புதுப்பித்துக்கொள்ளவோ முடியாது.
உலகம் தட்டை எனச் சொன்ன உங்கள் மதங்கள் உருண்டை எனச் சொன்ன கலிலியோவின் அறிவியலைக் கல்லால் அடித்துக் காயப்படுத்தியது. அறிவியலாளர் புருனோவை ரோம் நகர வீதியில் வைத்து உயிரோடு கொளுத்தியது.
வங்காள தேசத்தில் முற்போக்கு எழுத்தாளர்களைக் கொன்றதும் சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் தலைகளுக்கு விலை வைத்ததும் உங்கள் மதங்கள் தானே.
சமணர்களையும் பௌத்தர்களையும் கழுவேற்றிக் கொன்றதும், எழுத்தாளர்கள் கோவிந்த் பன்சாரே, தபோல்கர், கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகியோரைக் கொன்றதும் உங்கள் மதங்கள் தானே.
ஆனால் நாத்திகம் என்பது அப்படி ஆனது அல்ல, அது மனித நேயத்துடனான அறிவியல் சிந்தனை. அதனால் தான் அது தன்னுடைய கருத்து தவறு என்றால் திருத்திக்கொள்ளவும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளவும் செய்கிறது. மதங்கள்தான் மனிதனைக் கொன்று இருக்கின்றன, ஆனால் நாத்திகம் எந்த மனிதனையும் கொன்றதாக வரலாற்றின் எந்தப் பக்கங்களிலும் பதிவே இல்லை.
சாக்ரடீஸ் முதல் புத்தன் வரை, காரல் மார்க்ஸ் முதல் பெரியார் வரை, இங்கர்சால் முதல் பெட்ரன்ட் ரஸ்ஸல் வரை, அனைவரின் பேச்சிலும் எழுத்திலும் செயலிலும் கடவுள் மறுப்பை விஞ்சிய மனித நேயமே இருக்கிறது. நாத்திகர்களே ஆகச் சிறந்த சமூகப் போராளிகளாகவும் இருந்து வருகிறார்கள். உங்கள் மதங்கள் கடவுளைப்பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்கும்போது நாத்திகம் தான் மனிதர்களைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கிறது.
நாத்திகர்களாக மாறுவதும் வாழுவதுமே மிகச்சிறப்பு. குறைந்த பட்சம் மதங்களை விடுத்து மனிதர்களாகவாவது மாறுங்கள்.

கருத்துகள்

இதுவரை என்னிடம், நீங்க என்ன சாதின்னு கேட்காத ஒரே ஆளு பிராமணர்கள் தான் # சீமான்.
அவாளுக்கு நீங்க சூத்திராளுன்னு நன்னா தெரியும் ஓய், உம்ம ஜாதி தெரிஞ்சுண்டு அவா என்ன ஷம்பந்தமா பண்ணப் போறா
                                                    ---------------------------------------------
இதுவரை என்னிடம், நீங்க என்ன சாதின்னு கேட்காத ஒரே ஆளு பிராமணர்கள் தான் # சீமான்.
ஆனா ஒங்க தம்பிக எல்லார்க்கிட்டயும் சாதி கேக்குறாங்களே
                                                   ----------------------------------------------
சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை பதிவிடுவதை தவிர்க்குமாறு பாஜக தொண்டர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தல்.
பாவம், உண்மையான தகவல்களுக்கு அவங்க எங்க போவாங்க அமித்ஷா, அதுக்கு நீங்க சமூக வலைதளங்களில் பதிவே போடாதீங்கன்னு நேரடியாவே சொல்லியிருக்கலாம்.
                                                   ---------------------------------------------------        

கருத்துகள்

மாவீரன் அலெக்சாண்டர், பிரபாகரனுக்குப் பிறகு மாவீரன் என்றால் அது ஜெ.குரு தான்.. - அன்புமணி
அப்போ சீமான் பாரிசாலன்லாம் யாரு.

                           -----------------------------------------------------------------------
ராஜஸ்தானில் 211 மாடுகளுக்கு பகவத் கீதை படித்துச் சொல்லப்பட்டது.
மாடுகள் பகவத்கீதையை காதால் கேட்டால் நிறைய சாணியும் மூத்திரமும் தரும் என பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா சொல்லியிருக்கிறாராம்.
                          -----------------------------------------------------------------------
சூரிய ஒளியில் ஜட்டி காய வைப்பது சூரிய பகவானுக்கு செய்யும் அவமரியாதையாகும் - மோடி
சரி தல, இனிமே இண்டக்சன் ஸ்டவ்வுலயே காய வச்சுக்குறோம்.
                          ------------------------------------------------------------------------
ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை வாரி இறைக்கிறார் தினகரன் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
இருக்குற அமைச்சர்கள்ளயே இவரு ஒருத்தரு தான் உண்மைய பேசுறவரா இருப்பாரு போல.
                         -------------------------------------------------------------------------
பின்வாசல் வழியாக கோர்ட்டில் ஆஜரான எஸ்வீ.சேகர்
அவாளோட வரலாறே பின்வாசல் தான், அதுக்கு பேருதான் சாணக்கியத்தனம்.      

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...