அன்பான உறவுகளே நான் சில மதங்களுக்கு முன்னால் சொன்ன ஆமைக்கதை, ஆஸ்திரேலியா கப்பலில் வடை சுட்ட கதைகளை கேட்டு கைதட்டி விசிலடித்து சில்லறையை சிதற விட்டிருப்பீர்கள், நான் இப்போது ஒரு கதை சொல்லப்போகிறேன் இது நமது பாட்டன்களான தமிழ் அரசர்கள் கதை.
நம் அரசர்கள் அண்டை நாட்டின் மீது படையெடுத்து செல்லும்போது 60,000 யானைகள்,60,000 பாகன்கள்,படைவீரர்கள்,யானைகள் மற்றும் மனிதர்களுக்கான உணவு ஆகியவற்றை மரக்கலங்களில் கொண்டு செல்வார்கள் ஏனென்றால் அந்த காலத்தில் உலோகத்திலான கப்பல்கள் இல்லை. தம்பி தங்கைகளே ஒரு யானையின் எடை சுமாராக 6000 கிலோகிராம் என்றால் 60,000 யானைகளின் எடையை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள். அவற்றை ஏற்றிச்சென்ற மரக்கலங்கள் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.
நீங்கள் நினைக்கலாம் காட்டில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த யானைகளை பிடித்துவந்து கொடுமைப்படுத்தலாமா, அவ்வளவு பெரிய மரக்கலங்களை செய்வதற்கு காடுகளை அழிக்கலாமா என்று. நீங்கள் அவ்வாறெல்லாம் நினைக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும் ஏனென்றால் நான் உங்களை அவ்வாறு வளர்க்கவில்லை, கைதட்டி விசிலடித்து நான் சொல்வதே வரலாறு என்று நம்பி சில்லறயை சிதறவிடுவதற்கே உங்களை பழக்கப்படுதியுள்ளேன். இருந்தாலும் ஒன்றை மட்டும் நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும் உறவுகளே, நமது சுயநலத்துக்காக செய்யக்கூடாதது எதை வேண்டுமானாலும் செய்யலாம்.
நமது அரசர்கள் யானைகளை வைத்து எப்படி மற்றவர்களிடம் படம் காட்டி நாட்டைப் பிடித்தார்களோ அதைப்போலவே நானும் கையை முறுக்கி ஆவேசமாக சத்தம்போட்டு வாயாலே வடை சுட்டு உங்களை கைதட்டவும் விசிலடிக்கவும் வைத்துக்கொண்டிருக்கிறேன். எப்போதும் இல்லாததை பற்றிக் கவலைப்படக்கூடாது இருப்பதை வைத்துக் கொண்டு ஏமாற்றத் தெரிய வேண்டும், இதனால் தான் உறவுகளே நான் அடிக்கடி சொல்கிறேன் நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்று.
No comments:
Post a Comment