நிலத்தில் இருந்து கடல் ஒதுங்கியே இருப்பது போல் கடலை நம்பிப் பிழைப்பு நடத்தும் மீனவ நண்பர்களையும் நாம் ஒதுக்கியே வைத்திருக்கிறோம் எப்போதும்.
ஏன் அவர்களின் வாழ்க்கை முறை,உடல்மொழி,பேச்சு வழக்கு அனைத்துமே நம்மிலிருந்து வேறுபட்டு இருக்கிறது என்பதாலா இல்லை குப்பத்தில் வாழும் அடித்தட்டு மக்கள் என்றென்னும் நமது கேவலமான மனநிலையா.
நாம் மழை வெள்ளத்தில் அல்லல் பட்டு கதறிய போது இதோ நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு என்று படகுகளை கொண்டு வந்து நம்மை காப்பாற்றினார்களே அன்று. இப்போது புயலில் சிக்கி துன்பப்படும் அவர்களுக்கு என்ன செய்தோம் நாம்.
சல்லிக்கட்டு போராட்டத்தில் நம் மீது விழ வேண்டிய அடிகளை எல்லாம் அவர்கள் தாங்கினார்களே அவர்களைத் தாங்கினோமா நாம்.
அவர்களின் வாழ்க்கை எப்போதுமே சுகமானதாக இருந்தது இல்லை. போருக்குச் செல்லும் வீரர்களைப்போல் மீனவர்களும் திரும்பி வந்தால் தான் வாழ்வு நிச்சயம்.
அறியாமல் எல்லை தாண்டிச் சென்று விடும் மீனவர்கள் சுடப்படும்போதும் தாக்கப்படும்போதும்,படகுகள் பறிமுதல் செய்யப்படும்போதும், வலைகள் சேதப்படுத்தப்படும்போதும், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி கண்டு கோபம் கொள்ளாமல் யாருக்கோ நிகழ்ந்ததாக எண்ணி எளிதில் கடந்து விடுகிறோம் நாம்.
அதிக மீன்கள் கிடைக்கும் என்ற ஆசையில் தான் எல்லை தாண்டிச் செல்கிறார்கள் என்று கேலி பேசும் கேவலமானவர்களாகவே இருக்கிறோம் நாம்.
வானிலைமையங்கள் முன்னெச்சரிக்கை தகவல்களை முதலில் தெரிவிப்பதே அரசிடம் தான். அரசுதான் முன்னேற்பாடுகள் செய்து மக்களைக் காக்க வேண்டும். மீனவர்கள் கடலுக்குள் செல்லாதிருக்க அறிவுறுத்த வேண்டும். அரசே மக்களைக் காக்கவில்லை என்றால் அரசு எதற்கு.
ஓட்டுப் பொறுக்கிகளுக்கு கடலுக்குள் போய் காணாமல் போனது வெறும் ஓட்டுக்கள் தான். நிர்மலா சீத்தாராமன்களுக்கோ அவர்கள் வெறும் நம்பர்ஸ் தான். ஆனால் நமக்கு அவர்கள் நம்பர்ஸ் இல்லை நண்பர்கள், நம்மைக் காப்பாற்றிய உயிரும் உணர்வும் கொண்ட தோழர்கள். அவர்களுக்காக என்ன செய்யப் போகிறோம் நாம்.