Tuesday 1 January 2019

தந்தை பெரியாரும் - இட ஒதுக்கீடும் - முதல் சட்ட திருத்தமும்

தந்தை பெரியாரும் - இட ஒதுக்கீடும் - முதல் சட்ட திருத்தமும்
----------------------------------------------------------------------------------------------------
சென்னை மாகாணத்தின் காங்கிரஸ் முதல் மந்திரியாக ஓமந்தூர் பி. ராமசாமி அவர்கள் 1947-ல் பதவியேற்ற பிறகு, 1928-ல் பிறப்பிக்கப்பட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உத்தரவைப் பின்வருமாறு திருத்தி, ‘மொத்த உத்தியோகம் 14 என்றால், பார்ப்பனருக்கு 2, கிறிஸ்துவருக்கு 1, முஸ்லிமுக்கு 1, ஆதிதிராவிடருக்கு 2, பிற்பட்டோருக்கு 2, மற்ற பார்ப்பனர் அல்லாதாருக்கு 6 என்ற வீதத்தில் உத்தியோகம் வழங்கப்பட வேண்டும்' என்று உத்தரவிட்டார். இதைப் பொறுக்க முடியாத பார்ப்பனர்கள் ஓமந்தூர் ராமசாமியை "தாடியில்லாத ராமசாமி" என்று வசைபாடினார்கள் என்பது வரலாறு.
இந்தியாவை விட்டு பிரிட்டிஷார் வெளியேறுவதற்கு முன்பே, காங்கிரஸ் கட்சியின் சென்னை மாகாண அரசு, 24.03.1947 அன்று ஓர் ஆணையைப் பிறப்பித்தது. அந்த ஆணை மூலமாக, 14 பணியிடங்கள் இருந்தால், அவற்றில் இரண்டை, பார்ப்பனர் அல்லாத பிற்படுத்தப்பட்டவருக்கு ஒதுக்கீடு செய்தது. ஓமந்தூர் பி. ராமசாமி அவர்களின் தலைமையிலான சென்னை மாகாண அரசுதான், இந்தியா விலேயே முதன்முறையாகத் தனி ஒதுக்கீடு வழங்கியது.நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, 21.11.1947 அன்று பிறப்பித்த அரசு ஆணையின்படி, இதற்கு முன் 12 என்று கணக்கிடப் பட்ட பணியிடங்கள் 14-ஆக உயர்த்தப்பட்டு, உயர்த்தப்பட்ட இரு பணியிடங்களும் பார்ப்பனர் அல்லாத, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு, ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.
நீதிமன்றம் போட்ட தடை:
இந்தியா குடியரசு நாடாகி, இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நிலையில், இரண்டு பார்ப்பன மாணவர்கள் வகுப்புவாரி ஒதுக்கீட்டால் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும், இந்த ஒதுக்கீட்டு ஆணை, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 15-வது விதி மற்றும் 29(2)-வது விதி ஆகியவற்றுக்கு முரணானது' என்றும், ‘தனிநபர் உரிமையைப் பாதிக்கும் வகுப்புவாரி உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்' என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., பட்டத்தினை இயற்பியல், வேதியியல் பிரிவில் படித்த செண்பகம் துரைராஜன் என்ற பார்ப்பன மாணவர் சென்னை அரசு மருத்துவக் கல்லூயில் எம்.பி.பி.எஸ். படிப்பதற்கு மனு செய்திருந்ததாகவும் தனக்கு எம்.பி.பி.எஸ். சீட் ஒதுக்காமல் தன்னைவிட குறைவாக மதிப்பெண் பெற்றிருந்த பாப்பனரல்லாத சமூகத்தைச் சோந்தவர்களுக்கு எம்.பி.பி.எஸ். சீட் கொடுத்துள்ளதாகவும் அது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 15ஆவது பிரிவின்படி இனம், மொழி, ஜாதி அடிப்படையில் எந்த ஒரு இந்தியக் குடிமகனுக்கும் கல்வியில் வேறுபாடு காட்டக்கூடாது என்று சொல்லியிருப்பதற்கு மாறாக சென்னை மாகாண அரசாங்கம் வகுப்புவாரி இடஒதுக்கீடுச் சலுகை கொடுத்து வருவதாகவும், அந்த அரசாணை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்தார். மேற்படி வழக்கில் ஆஜராவதற்காக அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றும் குழுவில் உறுப்பினராயிருந்த சா. அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் செண்பகம் துரைராஜனுக்கு ஆதரவாக வாதாடினார்.
வகுப்புவாரி பிரதிநிதித்துவ அடிப்படையில் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதை வரைமுறைப்படுத்தும் அரசாணை எண். 1254 (கல்வி) நாள் 17.05.1948 செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டது. மேற்படி தீர்ப்பு வந்தவுடன் தமிழ்நாட்டில் தந்தை பெரியார் போர்க்குரல் எழுப்பி மாபெரும் போராட்டத்திற்குப் பார்ப்பனரல்லாதார் அணியமாக வேண்டுமென்று அறைகூவல் விடுத்தார். மேற்படி தீர்ப்பிற்கு எதிராக அன்றைய சென்னை மாகாண அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 1950 ஆம் ஆண்டு செப்டம்பரில் உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பையே உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. மேல்முறையீட்டிலும் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரே உச்ச நீதிமன்றத்தில் செண்பகம் துரைராஜனுக்கு வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்குத் தொடுத்த ஒரு பார்ப்பனப் பெண்மணி, எழுத்து மூலம் உறுதிமொழிப் பத்திரம் தராமலேயே அவருடைய வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் ஏற்கப்பட்டு,விசாரிக்கப்பட்டு அவருக்கு ஆதரவாகத் தீர்ப்பும் வழங்கப்பட்டது. இதை உச்சநீதிமன்றம் பின்னால் கண்டுபிடித்துக் கூறியது என்றால்,இது எவ்வளவு பெரிய மோசடியானது என்பது விளங்கும்.
பெரியார் நடத்திய மாநாடும் பேரெழுச்சியும்:
சமூக நீதிக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை எதிர்த்து தந்தை பெரியார் 14.08.1950-ல் நாடெங்கும் ‘வகுப்புரிமை நாள் கொண்டாடுங்கள்!’ என வேண்டுகோள் விடுத்தார். தந்தை பெரியாரின் வேண்டுகோளை ஏற்றுத் தமிழகமே திரண்டெழுந்தது. மாணவர்களும், இளைஞர்களும், பொது மக்களும் கட்சி வேறுபாடின்றி, ‘அரசியல் சட்டம் ஒழிக! ‘வகுப்புவாரி உரிமை வேண்டும்!’ என முழங்கினார்கள்.
டெல்லி உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பும் வகுப்புவாரி உரிமைக்கு எதிராக அமைந்தது. அந்தத் தீர்ப்பைத் துணையாகக் கொண்டு ,‘வகுப்புவாரி உத்தரவை அமல்படுத்துவது இந்திய அரசியல் சட்டத்திற்கு முரணானது; ஆதலால், அதனை அமல்படுத்தக்கூடாது’ – என மத்திய அரசு 1950 செப்டம்பர் மாதம் மாகாண அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது.
அனைத்துக் கட்சியிலும் உள்ள வகுப்புவாரி உரிமை ஆதரவாளர்களைத் திரட்டினார் பெரியார்; திருச்சியில் 03.12.1950-ல் ‘வகுப்புவாரி உரிமை மாநாடு’ ஒன்றைப் பெரிய அளவில் நடத்திப் பல முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினார். நடுவணரசு அமைச்சர்கள் சென்னை மாகாணத்திற்கு வரும்போது கறுப்புக்கொடி காட்டி நம் வெறுப்பை,எதிர்ப்பை உணர்த்த வேண்டும் என தமிழக மக்களுக்கு தந்தை பெரியார் அறைகூவல் விடுத்தார். களத்தில் குதித்தது மாணவர் பெரும் படை. ஊர்தோறும் உணர்ச்சி பெருக்கு! மத்திய அமைச்சர்களுக்கு கருப்புக் கொடி காட்டினார்கள் திராவிடர்கழகத்தினர். அனைத்துக் கட்சிகளும் ஆர்ப்பரித்து போராட்டங்களை நடத்தின.
பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் அனைவரும் அவரவர்க்கு உரிய முறையில் வகுப்புரிமை காக்க போராடினார்கள், வாதாடினார்கள் என்றாலும் போராட்டப் புயலின் மய்யமாய் திகழ்ந்தவர் பெரியாரே.
அரசியலமைப்பு சட்டத்தில் முதல்திருத்தம்:
தமிழ்நாட்டில் எழுந்த மக்கள் கிளர்ச்சியின் விளைவால், மக்கள் சக்தியின் வலிமையையும், இந்தக் கோரிக்கையின் நியாயத்தையும் இந்திய அரசு உணர வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. ஜனநாயகவாதியான பிரதமர் நேரு, உண்மை நிலையை அறிய, காமராஜரைக் கலந்தாலோசித்தார். காமராஜர் தந்த தெளிவான ஆலோசனைக்குப் பிறகு, இட ஒதுக்கீட்டிற்காக முதன்முதலாக இந்திய அரசியல் சட்டத்தின் 15வது பிரிவு திருத்தப்படும் தீர்மானம் பிரதமர் நேரு அவர்களால் கொண்டு வரப்பட்டு 01/06/1951 அன்று 15வது விதியில் 4வது உட்பிரிவாக சேர்க்கப்பட்டது.வகுப்புரிமைக்கு வந்த ஆபத்து நீங்கியது. இந்திய அரசியல் சட்டம் அமல்படுத்தப்பட்ட ஓராண்டு காலத்திற்குள் 1951, பிப்ரவரியில் நிறைவேற்றப்பட்ட இந்த திருத்தமே அரசியல் சட்டத்தில் செய்யப்பட்ட ‘முதல்’ திருத்தம் ஆகும். இந்திய அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை முன்மொழிந்து நாடாளுமன்றத்தில் 29.05.1951-ல் நேரு இவ்வாறு பேசினார்.
“இந்தக் குறிப்பிட்ட விஷயமானது இந்தக் குறிப்பிட்ட வடிவத்தில் இங்கு முன் மொழியப்படக் காரணம் சென்னையில் அண்மையில் நடந்துவிட்ட சில நிகழ்ச்சிகளே ஆகும். இது பற்றி அவையினருக்கு நன்கு தெரியும். இதைமூடி மறைப்பது அவசியமற்றது. சென்னை மாகாண அரசு குறிப்பிட்ட வகுப்பினருக்கு,ஏன் எல்லாச் சாதியினருக்குமே இடஒதுக்கீடு தந்து ஆணை பிறப்பித்துவிட்டது.அந்த ஆணை முறையானதாக இல்லையென்றும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் கருத்துக்கு விரோதமாக உள்ளதென்றும் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்புக் கூறியதே இந்த திருத்தம் வரக் காரணமாகும்” இவ்வாறு மூடி மறைக்காமல்,நாடாளுமன்றத்தில் நேரு இதைப் போட்டு உடைத்து விட்டார்.
இந்த சட்ட திருத்தத்தின் மீது நாடாளுமன்றத்தில் கடுமையான விவாதங்கள் நடைபெற்றன. விவாத முடிவில் 01.06.1951-ல் வாக்கெடுப்பு நடைபெற்றது. அரசியல் சட்டவிதி 15-ல் உட்பிரிவு 4என்பதைச் சேர்த்து நேரு கொண்டு வந்த திருத்தத்துக்கு ஆதரவாக 243 வாக்குகளும், எதிராக 5 வாக்குகளும் பதிவாயின.
இந்தியாவில் அரசியல் சட்டத்தின் ‘முதல்’திருத்தம், வகுப்புவாரி உரிமைக்கான ‘சமூக நீதிக்காக’ செய்யப்பட்டது. மக்கள் எழுச்சிகளும், போராட்டங்களும் மக்கள் நலனுக்குப் புறம்பான தீர்ப்புகளையும்,தடைகளையும்,உடைத்தெறியும் என்பதே வரலாற்று உண்மையாகும்.
அம்பேத்கரின் அறிவாற்றல் :
அரசியலமைப்புச் சட்டம் திருத்தம் செய்வதற்கு அண்ணல் அம்பேத்கர் முழுமையான ஆதரவினை அளித்து தன்னுடைய தேர்ந்த வாதத்திறமையினால் மிகப்பெரும்பான்மையினர் ஆதரவளிக்க அண்ணல் அவர்கள் ஆற்றிய அரிய உரையே காரணமாகும். கிட்டத்தட்ட 90 நிமிடங்களுக்கும் மேலாக தன்னுடைய உரையில் மிகவும் இடர்பாடான நுட்பமான அரசியல் சட்டம் மற்றும் சட்டங்கள் குறித்த சிக்கல்கள் பற்றி விளக்கி கூர்மையான அறிவு நுட்பத்துடனும் தெளிவுடனும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஆற்றிய உரைகளிலெல்லாம் தலைசிறந்தது என்று 19.05.1951 ஆம் நாளிட்ட தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் வெகுவாகப் பாராட்டியிருந்தது.
பார்ப்பனரல்லாத மக்களின் வகுப்புரிமைக்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படுவதற்கு பெரிதும் காரணமாய் அமைந்தது அண்ணல் அம்பேத்கரின் அறிவு! அம்பேத்கருக்கு முன்பே அரசியலமைப்பு சட்டத்தின் வரைவு ஒன்றை பி.என்.ராவ் என்பவர் உருவாக்கியிருந்தார்.அதில் விதி 12ல் 3வது பிரிவு "அரசு பணிகளில் எந்த வகுப்பு குடிமக்களுக்கு வேண்டுமானாலும் அரசு இட ஒதுக்கீடு செய்யலாம்" என்று இருந்தது. இதன் மூலம் அதிகார செல்வாக்கு பெற்ற உயர்குடியினரே அரசு பணிகளை அபகரித்து கொள்வார்கள் என்பதை நுட்பமாக உணர்ந்து கொண்ட அண்ணல் அம்பேத்கர் "எந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு குடிமக்களுக்கு வேண்டுமானாலும்" என்று திருத்தி அதை அரசமைப்பு சட்டத்தின் விதி 16ல் 4வது உட்பிரிவாக சேர்த்தார். இதனால்தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு செய்திட அரசியல் சட்டத்தை இலகுவாக திருத்த முடிந்தது.இன்று ஆண்டபரம்பரை எனும் மயக்கத்தில் திரியும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அம்பேத்கரின் அரிய பணியை அறிந்து கொள்ள வேண்டும்.அவருக்காக அல்ல...நமக்காக!
இன்றைய நிலை:
விரிவு கருதி சுருக்கமாக சொன்னால்....அதன் பிறகு தமிழ்நாட்டை ஆண்ட திராவிடக் கட்சிகள் தொடர்ந்து உயர்த்திக் கொண்டு வந்ததுதான் இன்று மாநில அரசில் 69% இட ஒதுக்கீடு!திராவிடர் இயக்கத்தினர், மற்றும் வடபுலத்திலுள்ள சமூகநீதி சிந்தனையாளர்களின் இடைவிடாத முயற்சியால், மண்டல் கமிசன் மூலமாக வி.பி.சிங் அவர்களின் பெரும்பணியால் பெற்றதுதான் மத்தியஅரசில் 27% இட ஒதுக்கீடு!ஆனால் இந்த ஒதுக்கீடுகளின் பலனையும் முழுமையாக அனுபவிக்க இயலாத வகையில் நீதிமன்றத்தின் குறுக்கீடுகள்,நீட் தேர்வுகள், தனியார் மயமாக்கல் என இன்றுவரை பார்ப்பனீயம் முயன்று கொண்டே இருக்கிறது.இன்று ஓரளவிற்காவது நாம் கல்வி வேலைவாய்ப்புகளில் நிமிர்ந்து நிற்பதற்கு அடித்தளமிட்டவர்களை வந்தேறி என்று தூற்றுதல் எளிது! ஆனால் வரலாற்றை மாற்றுவது கடினம்!
க.ம.மணிவண்ணன்

கருத்துகள்

100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் மோடி - செய்தி.

நாணயமே இல்லாதவர் நாணயத்தை வெளியிட்டு இருக்கிறாரே அடடா ஆச்சரியக்குறி.
                                         ----------------------------------------------
தமிழகத்தில் நாத்திக சட்டைகளை ஆத்திக சட்டைகளாக மாற்றுவோம்.
இப்படிக்கு,
தமிழிசை டெய்லர்
தாமரை தையல் கடை.
குறிப்பு : எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை.
                                         -------------------------------------------------------
இயேசுவை போல மண்ணில் அவதரித்தவர் தான் பிரதமர் மோடி
-தமிழிசை
அப்ப யூதாசு யாரு அமித்ஷாவா மேடம்.
                                         ----------------------------------------------        

இயேசுவுக்கு...

தேவகுமாரன் இறங்கி வருவாரென அண்ணாந்து இருந்தபோதுதான், என் கடைசிக் கோவணமும் களவு போனது.
                                                       ----------------------------------------
நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை கைவிடுவதுமில்லை.

தயவுசெய்து விட்டுவிடு, என்னை நானே பார்த்துக் கொள்கிறேன்.
                                                        -----------------------------------------
நல்ல மேய்ப்பனின் ஆடுகள் எல்லாம் குழம்புச் சட்டியில் வெந்து கொண்டிருக்கின்றன.
                                                       --------------------------------------------
என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும்.

கொஞ்சம் வழி விடுங்கள், நான் வேகமாகச் செல்ல வேண்டும்.
                                                       ---------------------------------------------
தட்டுங்கள் திறக்கப்படும்.

கதவை மூடிக்கொண்டு உள்ளே என்ன வேலை.
                                                     -------------------------------------------------
உன்னுடன் இருந்து நான் செய்யும் காரியங்கள் மிகவும் பயங்கரமானதாக இருக்கும்.

இல்லை வேண்டாம், நான் மிகவும் பயந்த சுபாவம்.
                                                     -------------------------------------------
தோழர் இயேசு, மீண்டும் இங்கு வரும்போது எந்த ஜாதியில் சேருவீர்கள்?

பெண்ணுரிமைப் போராளி பெரியார்

பெண்ணுரிமைப் போராளி பெரியார்
--------------------------------------------------------
ஆணும் பெண்ணும் சமம் ஆண்களுக்குள்ள உரிமைகள் பெண்களுக்கு வேண்டும் என்கிறார் பெரியார். பெண் கல்வியை வலியுறுத்தினார் பெரியார். உயர் கல்வி கற்ற பெற்ற பெண்களின் மொத்த விழுக்காட்டில் தமிழகமே முதல் இடத்தில் உள்ளது. பெரியார் விதைத்த சிந்தனை விதை இன்று மாபெரும் ஆலமரமாகி நிற்கிறது.பெண்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சொத்திலும் ஆண்களுக்கு நிகரான சம உரிமை வேண்டுமென்றார் பெரியார்.கைம்பெண் மறுமணத்தை ஆதரித்தார் பெரியார். அதை தன் இல்லத்திலேயே நிகழ்த்திக்காட்டினார்.மதத்தின் பெயராலும் சடங்கு சம்பிரதாயங்களின் பெயராலும் பெண்கள் அடிமைப்படுத்தப்படுவதையும் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் கண்டு கோபம் கொண்டு போராடினார் பெரியார்.அவர் பெண் குலத்திற்கு செய்த நன்மைகளை பாராட்டியே பெண்கள் அவருக்கு பெரியார் என்ற பட்டத்தைக் கொடுத்து சிறப்பித்தனர்.அதுவரை ஈ.வெ.ராமசாமியாக இருந்தவர் பெண்களால் தான் பெரியார் என்றானார்.
க.ம.மணிவண்ணன்

என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்

என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்
---------------------------------------------------------------
நன்றி மறந்தவர்களே ஓராயிரம் முறை கேளுங்கள் என்ன செய்து கிழித்துவிட்டார் பெரியார். நாம் படித்ததும் படிப்பதும் இடஒதுக்கீட்டாலே வேலை பெற்றதும் பெறப்போவதும் இடஒதுக்கீட்டாலே. இடஒதுக்கீடு கிடைத்தது யாராலே அது பகுத்தறிவுப் பகலவனாம் பெரியாராலே. புதிய அரசியல் சட்டத்தில் வகுப்புவாரி இடஒதுக்கீடு ஒழிக்கப்பட்டது. பெரியாரல் போராட்டங்கள் நடத்தப்பட்டது, இடஓதுக்கீட்டீற்காக முதன்முதலாக அரசியல் சட்டம் திருத்தப்பட்டது. ஆனால் நாம் நன்றி மறந்து சத்தம் போட்டு கேட்கிறோம் என்ன செய்து கிழித்துவிட்டார் பெரியார் என்று.
முதல்வராக ராஜாஜி பதவி ஏறினார், பதவியேற்றதும் 6000 பள்ளிகளை இழுத்துமூடினார். குலக்கல்வியை புகுத்துவதற்கு திட்டமிட்டார். அவரவர் சாதித் தொழிலை பள்ளிகளில் படிக்க வேண்டுமென உத்தரவிட்டார். குலக்கல்வி எல்லோராலும் எதிர்க்கப்பட்டது மாபெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. போராட்டங்களைப் பெரியார் வழிநடத்தினார்.அதனைக்கண்டு ராஜாஜி நடுநடுங்கினார்.போராட்டங்களை அரசு ஒடுக்க நினைத்தது அதனால் போராளிகளை அது கைது செய்தது. துப்பாக்கிச் சூடு கூட நடத்தப்பட்டது போராளிகள் உயிர் அங்கே பறிக்கப்பட்டது, தோழர்களின் உடல் முழுதும் காயமுற்றது பல பேரின் கைகால் அங்கே பறிபோனது.போராட்டம் மிகவும் தீவிரமானது ராஜாஜிக்கு அது பெரிய கலக்கமானது. உடல் நலம் சரியில்லையென ராஜாஜி பதவி விலகினார் காமராசர் முதல்வராக பதவி ஏறினார்.குலக்கல்வித் திட்டம் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது பல உயிர்களைப் பலிகொடுத்துத்தான் குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டது. வரலாறு தெரியாத வசவாளர்களே சத்தம் போட்டு கேளுங்கள் பெரியார் என்ன செய்து கிழித்துவிட்டார் என்று.
க.ம.மணிவண்ணன்



எது வரலாறு

கல்டுவல், ஈவெராவிற்கு முன்பு தமிழர்களுக்கு சேர சோழ பாண்டிர்கள் வரலாறு இல்லையா ? - எச்ச
1) பொண்ணுக்காகவும் மண்ணுக்காகவும் சண்டை போட்டு மக்களக் கொன்னதெல்லாம் ஒரு வரலாறாடா.
2) படிக்கிறதுக்கு பள்ளிக்கூடம் கட்டாம கோயிலாக் கட்டி பாப்பான மணி ஆட்ட விட்டதெல்லாம் ஒரு வரலாறாடா
3) அரசவைக்கே வராம அந்தப்புரத்துலேயே கெடந்ததெல்லாம் ஒரு வரலாறாடா.
4) தன்னப் புகழ்ந்து ஜால்ரா அடிச்சவங்களுக்கு மட்டும் பொன்னும் பொருளும் குடுத்ததெல்லாம் ஒரு வரலாறாடா
5) மக்களுக்கு வரிச்சுமையை குடுத்துட்டு முல்லைக்கு தேரையும் மயிலுக்கு போர்வையையும் குடுத்ததெல்லாம் ஒரு வரலாறாடா.

சைவமும் அசைவமும்

சைவமும் அசைவமும்
-------------------------------------
மனித இனம் தோன்றிய காலத்தில் அவர்களது முக்கியத் தேவை உணவாக மட்டுமே இருந்தது. அப்போது அவர்கள் இயற்கையில் கிடைக்கும் காய்கறி, பழங்கள், தாவரங்களை மட்டுமின்றி, விலங்குகளை வேட்டையாடி உண்டும் தங்கள் உணவுத் தேவையை தீர்த்து வந்துள்ளனர். அப்போதிலிருந்து எல்லோரது உணவுப் பழக்கமும் ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. உணவுப் பழக்கத்தில் சைவம், அசைவம் என ஏற்பட்டதெல்லாம் இடையில் வந்ததுதான்.
உலகில் எல்லா நாடுகளிலும் சைவ அசைவ உணவுப் பழக்கம் இருந்து வருகிறது, மற்ற நாடுகளிலெல்லாம் எந்த உணவுப் பழக்கமும் உயர்வானதும் இல்லை, தாழ்வானதும் இல்லை. ஆனால் இந்தியாவில் மட்டும் தான் சைவம் உண்பது உயர்வானதென்றும், அசைவம் என்பது தாழ்வானதென்றும் ஒரு கருத்து காலம் காலமாக பரப்பப்பட்டு வருகிறது. இது சைவ உணவு சாப்பிடுகிற ஒரு சிறு கூட்டம், அசைவம் சாப்பிடுகிற பெரும்பான்மை மக்களைத் தங்கள் உணவுப் பழக்கத்திற்கு மாற்ற முயலுகின்ற ஒரு தந்திரம். இந்த தந்திரத்தை கடைபிடிக்கின்ற அக்கூட்டம், ஒரு காலத்தில் அசைவ உணவுகளை ஒன்று விடாமல் தின்று கொழித்த கூட்டம்தான்.
அசைவ உணவு உண்பது, பாவகரமானது உயிர்க்கொலை செய்வது என்றதொரு கருத்தைப் பரப்பி உளவியல் ரீதியாக குற்ற உணர்வுக்கு உள்ளாக்க முயற்சி செய்கின்றனர். விலங்குகளுக்கு மட்டுமல்ல தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை அறிவியல் ஆணித்தரமாக நிரூபித்த பின்பும் அசைவம் உண்பது உயிர்க் கொலை என அதையே சொல்லிக் கொண்டிருப்பது கடைந்தெடுத்த முட்டாள்த்தனம் மட்டுமல்ல கேடுகெட்ட அயோக்கியத்தனமும் கூட.
சைவ உணவு உண்பவர்கள் எல்லாம் எந்த உயிருக்கும் தீங்கு எண்ணாத அன்புள்ளம் கொண்டவர்கள், அறிவு மிக்கவர்கள், ஆரோக்கியமானவர்கள் என்றதொரு பொய்யான கருத்தைப் பரப்பி அசைவ உணவு உண்பவர்களிடம் தாழ்வு மனப்பான்மையை உருவாக்க எண்ணுகின்றனர். ஆனால் இவற்றிற்கெல்லாம் எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் இல்லை. காந்தியைக் கொன்ற கோட்சேவும், பல கொலைகள் புரிந்திட்ட ஹிட்லரும் சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள்தான். அவ்வளவு ஏன் மதம் பிடித்ததால் மனிதர்களைக் கொல்லும் சில மனிதர்களும், யானைகளும் கூட உண்பது சைவ உணவுகள் தான். நாம் அறிந்த ஆகச்சிறந்த அறிவியல் அறிஞர்களில், மேதைகளில் பெரும்பாலானோர் அசைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள்தான். சைவ உணவுக்கும் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லுவதும் பொய்யே.
உணவுப் பழக்கத்தில் உயர்வு தாழ்வு கற்பிப்பதும் ஒரு வகை தீண்டாமையே. பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு எனப் பிரித்த மனு அதர்மக் கூட்டம், உணவுப் பழக்கத்தை வைத்தும் மக்களைப் பிரிப்பது உலக மகா திருட்டுத்தனம்.
க.ம.மணிவண்ணன்

டிசம்பர் 10, உலக மனித உரிமைகள் நாள்

டிசம்பர் 10, உலக மனித உரிமைகள் நாள்
-----------------------------------------------------------------
மனித உரிமை என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல. யாராலும் யாருக்கும் வழங்கப்பட்டதும் அல்ல. ஒவ்வொரு மனிதன் பிறக்கும்போதும் அவனுடன் பிறந்ததுதான் மனித உரிமை. அதனால், ஒருவரின் உரிமையைப் பறிக்க யாருக்கும் உரிமை இல்லை. இன்னும் சொல்லப் போனால், ஒரு குடிமகனின் மனித உரிமையைப் பறிக்க அந்த நாட்டின் அரசுக்குக்கூட அதிகாரம் இல்லை. உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் சமமான உரிமைகளும் அடிப்படை சுதந்திரமும் உள்ளது.
உலகில் உள்ள எல்லா மனிதர்களும் சமமானவர்களே. எல்லாருக்கும் சம உரிமை உண்டு. மற்றவர்களிடம் இருந்து நாம் என்ன உரிமையை எதிர்பார்க்கிறோமோ அதே உரிமையை அவர்களுக்கும் நாம் தர வேண்டும். யாரையும் யாரும் அடிமைப்படுத்தக் கூடாது
.
வாழ்வுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை போன்ற அடிப்படை உரிமைகளை அனைவரும் பெற்று சுதந்திரமாக வாழ வேண்டும். உயிர் வாழ்வதற்கான உரிமை, கருத்துச் சுதந்திரம், மனிதன் சுதந்திரமாக வாழ்வதற்கான கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர் போன்ற அடிப்படை அம்சங்கள் ஒருவன் மனிதனாக வாழ்வதற்கு உரிய அடிப்படை உரிமைகள்.
நாடு, சமூகம், பொருளாதாரம், அரசியல், நீதி ஆகியவற்றில் மனிதன் மனிதனாக வாழ்வுதற்கான உரிமை ஒவ்வொருவருக்கும் உறுதி செய்யப்பட வேண்டும். நாடு, மொழி, ஜாதி, இனம்,நிறம்,பால், பொருளாதாரம் போன்ற எந்தக் காரணத்தைக் காட்டியும் ஒருவனுடைய இந்த உரிமைகள் பறிக்கப்படக் கூடாது.

நவம்பர் 9, உலக ஊழல் எதிர்ப்பு நாள்



நவம்பர் 9, உலக ஊழல் எதிர்ப்பு நாள்
----------------------------------------------------------
ஊழல் என்றால் அரசியல்வாதிகள் என்பதிலிருந்து தொடங்கி பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் வரை வந்து இப்போது எல்லோருக்கும் பொதுமை என்றாகி விட்டது. பணம் படைத்தவர்கள் மட்டுமே வாழ்வாங்கு வாழ முடியும் என்றதொரு காலச்சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம். ஊழல் வலியவர்களுக்கு பயனையும் வறியவர்களுக்கு பாதிப்பையும் தரக்கூடியது. ஒருவருக்கு நன்மை செய்து ஊருக்கே தீமை விளைவிப்பது ஊழலின் குணம்.
சட்டத்தின்படியோ நியாயத்தின்படியோ தமக்கு உரிமை இல்லாத ஒன்றை முறையற்ற வகையில் பெறுகிற வழிமுறைகள் அனைத்துமே ஊழல்தான். கையூட்டு கொடுப்பதும் பெறுவதும் மட்டுமே ஊழல் என்று நினைக்கிறோம், சட்டத்தின்படி அல்லாது தனிப்பட்ட முறையில் முன்னுரிமை தருவது, சட்டத்தின் குறைகளை சாதகமாகப் பயன்படுத்துவது, பயன்படுத்தத் துணை போவது இவை எல்லாமே ஊழலின் பல்வேறு வடிவங்கள்தான். ஊழல் நடவடிக்கைகளில் தருகிறவர் பெறுகிறவர் இருவருமே குற்றவாளிகள்தான்.
உலக அளவில் நடக்கின்ற ஊழல்களைப் பற்றி எல்லாம் வாய்கிழிய பேசியும்எழுதியும் வரும் நாம் நம்மைப்போன்ற சக மனிதர்களின் ஊழல்களை கண்டும் காணாமல் கடந்துவிடுவது எதனால், உண்ணுவது உறங்குவதைப்போல் ஊழலும் சாதாரண நிகழ்வுதான் என எண்ணத் தொடங்கிவிட்டோமா, நம்மைப்போன்ற ஒருவர்தானே செய்திருக்கிறார் என்ற பாசமா, வாய்ப்புக் கிடைத்தால் நாமும் யாரிடமும் மாட்டிக்கொள்ளாமல் ஊழல் செய்யலாம் என்கிற கேடுகெட்ட மனநிலையா. இனி வரும் காலங்களில் தனி மனித ஊழல்வாதிகள் பெருகி வருவர், தனி மனித ஊழல்வாதிகள் நிறைந்த சமூகத்தை ஆள்வதற்கு ஊழல் அரசர்களே வருவார்கள் உத்தமர்கள் வரப்போவதில்லை.
ஊழலின் ஊற்றுக்கண் குடும்பத்தில் தான் இருக்கிறது. பெரியவர்கள் சிறியவர்களிடம் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் ‘நல்லாப் படிக்கணும், கை நிறைய சம்பாதிக்கணும்’ என்பது.நல்லாப் படிக்கணும் என்பது அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற கருத்தில் சொல்லப்படுகிறதே தவிர நல்லதைப் படிக்க வேண்டும் என்ற கருத்தில் சொல்லப்படுவது இல்லை அதாவது நல்லொழுக்கம் நன்னடத்தை மனிதநேயம் என்ற கருத்தில் சொல்லப்படுவது இல்லை. கை நிறைய சம்பாதிக்கணும் என்பது அதிகமாக பொருள் ஈட்டவேண்டும் என்ற பொருளில் சொல்லப்படுகிறதே தவிர நல்வழியில் ஈட்ட வேண்டும் என்ற பொருளில் இல்லை.
இங்கு குழந்தைகளுக்கு அறம் சொல்லித் தரப்படுவது இல்லை மாறாக பொருள் மட்டுமே சொல்லித் தரப்படுகிறது. அறத்தை மீறிய பொருள் எப்போதும் ஊழல் நிறைந்ததாகவே இருக்கும்.
குழந்தைகளுக்கு நாம் அறத்தை மட்டும் கற்றுத்தருவோம், பொருள் செய்வது பற்றி அவர்கள் கற்றுக்கொள்வார்கள். அறத்தை மீறிய பொருள் அழிவை நோக்கியே இட்டுச்செல்லும்.
க.ம.மணிவண்ணன்

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்
-------------------------------------------------------
அண்ணல் அம்பேத்கர் நமக்கு சொன்ன செய்தி ஒன்றே ஒன்றுதான். “எல்லா மனிதர்களையும் சமமாக மதியுங்கள். எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்பு அளியுங்கள். ‘எனக்கு மேலே ஒருவரும் இல்லை; எனக்குக் கீழேயும் ஒருவரும் இல்லை’ என்பதை மனித விழுமியமாக மாற்றுங்கள்’ என்பதுதான் அது.
டாக்டர் அம்பேத்கர் வெறுமனே சட்ட மேதையோ, தலித் தலைவரோ மட்டும் அல்ல. அரசியல், இலக்கியம், தத்துவம், இதிகாசம், வரலாறு, மதம், சட்டம், பொருளாதாரம் என மனித அறிவு சாதித்த துறைகளில் பெரும்பாலானவை குறித்த விரிவான வாசிப்பும் அறிதலும் கொண்டவர். அவருடைய டாக்டர் பட்ட ஆய்வு ரூபாய் குறித்தது. ரிசர்வ் வங்கியை உருவாக்கியதில் முக்கியமான பங்கு அம்பேத்கருடையது.
அண்ணல் அம்பேத்கர் வெறுமனே கற்றறிந்த அறிவுஜீவியாக மட்டும் இருந்திருந்தால், கோடிக்கணக்கான மக்களால் நினைத்துப் பார்க்கப்படும் மாமனிதராக இருந்திருக்க மாட்டார். அவர் சமூகத்தைப் புரிந்துகொள்வதற்காகவே அதிகம் படித்தார். தன்னுடைய வாசிப்பையும் அறிவையும் சமூக மாற்றத்துக்கான கருவியாகப் பயன்படுத்தினார்.
இந்தியாவின் வரலாறு எப்படி பெளத்தத்துக்கும் பார்ப்பனியத்துக்குமான போராட்டமாக இருந்தது, சாதி என்ற காரணி எப்படி இந்திய வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்தையும் தீர்மானித்தது என்று விரிவாக ஆராய்ந்தவர் அண்ணல் அம்பேத்கர்.
கல்வி, அரசியல் அதிகாரம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் காலங்காலமாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பவர்களுக்கு சிறப்பு உரிமைகள் அளிக்க வேண்டும் என்றார். அதனாலேயே இட ஒதுக்கீட்டையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இரட்டை வாக்குரிமையையும் முன்வைத்தார்.
அரசியல் கல்வியை அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். “ஓர் அடிமைக்கு அவனை முதலில் அடிமை என்பதை உணர்த்து, அவன் தானாகவே கிளர்ந்தெழுந்து போராடுவான்” என்றார். இந்தியச் சாதியமைப்பின் மிகப்பெரிய பலமே அது கருத்தியல் வன்முறையைக் கொண்டிருப்பதுதான். நேரடியான வன்முறையைக் கொண்டு சாதி நிறுவப்படவில்லை. “தான் இழிவானவன், அடிமை” என்பதை அவர்களே ஒப்புக்கொள்ள வைப்பதில்தான் சாதியின் தந்திரம் அடங்கியிருக்கிறது”.என்றார் அம்பேத்கர்.
தாழ்த்தப்பட்டவர்களின் நிலையும் பெண்களின் நிலையும் ஒன்றுதான். இதை உணர்ந்துகொண்ட அண்ணல் அம்பேத்கர் சதி என்னும் உடன்கட்டை ஏறுதல், விதவைத் திருமண மறுப்பு, குழந்தைத் திருமணம் ஆகிய பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கும் சாதி, தீண்டாமை ஆகியவற்றுக்கு உள்ள உறவு குறித்தும் விரிவாக ஆராய்ந்து எழுதினார்.
ஒவ்வொரு சாதிக்காரனும் தன்னை மேலே இருந்து அழுத்துகிறவன் மீது கோபப்படுவதில்லை. ஏனெனில், அவன் அடிமைப்படுத்துவதற்குக் கீழே ஒரு சாதி இருக்கிறது. இந்த உளவியல் திருப்தி, சாதியமைப்பை வலுவாகத் தக்கவைத்துக்கொள்வதைக் கண்டுபிடித்துச் சொன்னார். ''இந்து மதம் என்பது ஒவ்வொரு சாதிக்காரனும் இன்னொரு சாதிக்காரனிடம் இருந்து எவ்வளவு தூரம் விலகி நிற்பது போன்ற விதிமுறைகளின் தொகுப்பாகத்தான் இருக்கிறது” என்றார்.
இந்து என்ற உணர்வு எவரிடமும் இல்லை. ஒவ்வொரு இந்துவிடமும் இருப்பது சாதி உணர்வுதான். சமபந்தி விருந்துகள் சாதியப் பாகுபாட்டை ஒழிக்காது. மாறாக இந்து சமயத்தின் அடிப்படையாக உள்ள பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற பிறப்பின் அடிப்படையிலான நால் வர்ணக் கோட்பாட்டை ஒழிப்பதுதான் சரியான வழி என்று வாதிட்டார் அண்ணல் அம்பேத்கர்.
இந்துக்கள் தங்கள் மதத்தை காப்பாற்ற விரும்பினால் அவர்களுக்கு உள்ள ஒரே வழி சாதியை ஒழிப்பதுதான் எனவும் குறிப்பிட்டார். ‘நான் இந்துவாகப் பிறந்தேன். அதைத் தடுக்கும் சக்தி இல்லை. ஆனால், நான் இந்துவாக சாக மாட்டேன்’ என 1935-லேயே அறிவித்தார் அம்பேத்கர்.
அம்பேத்கர், இந்து மதத்தில் சாதிப் பாகுபாட்டை நீக்குவது முடியாத காரியம் என்ற முடிவுக்கு வந்துதான் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு புத்த மதத்தில் இணைந்தார்.
இந்துத்துவவாதிகள் அண்ணல் அம்பேத்கர் மீது தற்போது புதிதாக பாசம் காட்டுகின்றனர். இந்து மதமே வேண்டாம் என்று அதை உதறித் தள்ளிய அம்பேத்கரை சொந்தமாக்கும் இந்து மதவாதிகள் சொல்லும் காரணம், புத்தமதமும் இந்தியாவில் பிறந்தது என்பதுதான். புத்த மதத்தைக் கபளீகரம் செய்ததுபோல் அம்பேத்கரையும் கபளீகரம் செய்யும் முயற்சி வெற்றி பெறாது. அம்பேத்கரின் கருத்துகளை மேலும் மேலும் பரப்புவதன் மூலமே இந்துத்துவ சக்திகளின் மோசடியை முறியடிக்க முடியும்.
க.ம.மணிவண்ணன்

டிசம்பர் 3, உலக மாற்றுத்திறனாளிகள் நாள்

டிசம்பர் 3, உலக மாற்றுத்திறனாளிகள் நாள்
--------------------------------------------------------------------
மாற்றுத்திறனாளிகள் மன உறுதியாலும் தன்னம்பிக்கையாலும் விடாமுயற்சியாலும் வாழ்க்கையை சிறப்பாக்கிக் கொள்ளும் திறனாளிகள்.
மாற்றுத்திறனாளிகள் மனதால், எண்ணங்களால் உயர்ந்தவர்கள்தான். மற்றவர்களிடம் இல்லாத தன்னம்பிக்கை மனஉறுதி, வாழவேண்டும் என்கிற வைராக்கியத்தை அவர்களுக்குத் தருகிறது. அந்த வைராக்கியம்தான் வலிகளைத் தாங்கி வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிகளைத் தந்து சாதனையாளர்களாய் சாதிக்க வைக்கின்றது.
ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும் இன்னொரு மாற்றுத்திறன் இருக்கிறது. அதைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். தேடலில்தானே வாழ்க்கையின் வெற்றி அடங்கி இருக்கிறது. அந்த வெற்றிதான் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்துகின்றது.
கொடிய நோய் பறித்துக் கொண்ட பேச்சுத்திறனை, எழுத்துத்திறனை, தளராத முயற்சியால் மீட்டுக்கொண்ட,அதிசயமே அதிசயத்துப் போகும் மிகப்பெரும் சாதனைக்குரியவர் ஹெலன் கெல்லர். தன்னம்பிக்கை, விடாமுயற்சி, துணிச்சல், ஆர்வம், அன்பு, பரிவு, பாசம், தேடல் இதன் மறு பெயர்தான் ஹெலன்கெல்லர். தன் உடல் குறைபாடுகளை மலைபோன்ற மன உறுதியால் வெற்றி கண்டவர்.
ஸ்டீபன் ஹாக்கிங் கை, கால், வயிறு, தலை என உடலின் எந்தப் பாகமும் செயல்படாத நிலையில் நம்பிக்கை இழக்காமல் வலக்கண்ணை மட்டுமே அசைத்து எழுத்துகளை அடையாளம் காட்டி பாடம் நடத்தி, புத்தகம் எழுதி புகழின் உச்சிக்கு உயர்ந்தவர். தன்னம்பிக்கைப் பயிற்சியாளர்.
ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு முறை தொலைக்காட்சியில் கேட்ட கேள்விகளுக்கு கணினி மூலம் விடை சொன்னார் இப்படி,
“வாழ்க்கை எப்படி இருக்கிறது” என்ற ஒரு கேள்வியைக் கேட்கிறார் தொகுப்பாளர்.
“முன்பைவிட மகிழ்ச்சியாகவும், சவால் நிறைந்ததாகவும் இருக்கிறது” என்கிறார் ஹாக்கிங்.
“இந்த உடல் நிலையில் உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறதா?” என்று தயங்கித் தயங்கிக் கேட்கிறார், தொகுப்பாளர்.
“எதை இழந்தீர்கள் என்பதல்ல, என்ன மிச்சம் இருக்கிறது என்பதுதான் முக்கியம்” என்றார் ஸ்டீபன் ஹாக்கிங்.
‘அசைக்கமுடியாத உறுதியும் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டவன் உலகத்தைத் தன் வழியில் தானே உருவாக்கிக் கொள்வான்’ என்பார் தத்துவமேதை கதே.
க.ம.மணிவண்ணன்

சுயமரியாதை வீராங்கனை அன்னை மீனாம்பாள்

சுயமரியாதை வீராங்கனை அன்னை மீனாம்பாள்
---------------------------------------------------------------------------
பெண் விடுதலைக் காகவும், தலித் விடுதலைக் காகவும் போராடுவததைத் தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டு போராடி வென்ற பெண். இவர் இந்தி எதிர்ப்புப் போரின் முதல் படைத் தலைவியாக விளங்கியவர். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழி களில் வல்லமை பெற்றவர். சென்னை மாநகராட்சியின் துணை மேயர். தலித் மக்களுக்கு அகில இந்திய அளவில் தலைமையேற்ற முதல் பெண்மணி, கௌரவ நீதிபதியாகப் பணியாற்றியவர், பல்கலைக்கழக செனட் அமைப்புகளில் பங்கேற்று வழிநடத்தியவர் எனப் பல குறிப்பிடத்தக்க சமூகப்பணிகளையாற்றிய மீனாம்பாள் அவர்கள் புகழ்பெற்ற தாழ்த்தப்பட்டோர் இயக்கத் தலைவர் சிவராஜ் அவர்களின் துணைவியாரும் ஆவார்.
மிகச் சீரிய சுயமரியாதை வீரங்கனை. ஆம், அன்றைய காலக்கட்டங்களில் தந்தை பெரியார் அவர்களோடு பல்வேறு கூட்டங்களில், திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றியவர். அண்ணல் அம்பேத்கர் இயக்கத்திலும் பங்கேற்று அகில இந்திய அரசியலிலும் முத்திரை பதித்தவர்.
ராஜாஜி அவர்கள் பிரதமராக இருந்த சமயம் தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க ஏற்பாடு செய்தார். அப்போது சென்னை தியாகராயர் நகரில் கூட்டத்தைத் தொடங்கி வைத்து அன்னை மீனாம்பாள் இந்தி திணிப்பை எதிர்த்து உரையாற்றி முதன் முதலில் இந்தி திணிப்பு போரை தொடங்கி வைத்தார்.
வரலாற்றில் தந்தை பெரியார் அவர்களுக்கு பெரியார் எனும் பட்டம் அளித்த பெருமை அன்னை மீனாம்பாள் அவர்களையே சாரும். 1938 இல் சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் பெரியார் என்ற பட்டம் அளிக்கப்பட்டது.
இதனை நீதிக்கட்சி பவள விழா மலர் ஒன்றில் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறுகிறார்.
“நான், நாராயிணி அம்மாள், டாக்டர் தருமாம்மாள் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தபோது, காந்தியாருக்கு மகாத்மா என்ற பட்டம் கொடுத்து அழைக்கிறார்கள். நாம் நம் மக்களுக்காக எல்லாவற்றிலும் முன்னின்று பாடுபடுகிற ஈ.வெ.ரா. அவர்களுக்கு ஒரு பட்டம் கொடுத்து அழைக்கவேண்டும் என்று முடிவு செய்தோம். அப்பொழுதுதான் ‘பெரியார்’ என்று அழைப்பது என்ற முடிவு செய்து, பிறகு பெண்கள் மாநாடு கூட்டி ‘பெரியார்’ என்று பட்டம் கொடுத்தோம். அதை ஒரு முக்கிய நிகழ்ச்சியாக என் வாழ்நாளில் கருதுகின்றேன்”. என்றார்.
அதே போன்று, மும்பையில் உள்ள அண்ணல் அம்பேத்கர் வீட்டில் தன் இணையர் தந்தை சிவராஜ் அவர்களுடன் கலந்து கொண்ட போது, அண்ணல் அவர்களே விருந்து சமைத்து பரிமாறினார்கள் என்பது மிகச் சிறப்பான செய்தி. அண்ணல் அவர்கள் எப்போதும் அன்னை மீனாம்பாள் அவர்களை தன் தங்கை என்றே அழைத்து வந்தார்கள்.
மிகச் சீரிய பெண்ணியவாதியாக திகழ்ந்த அன்னை மீனாம்பாள் அவர்களின் முழக்கம், “பெண்களின் விடுதலையே ஆண்களின் விடுதலை” என்பது.
31 -1 -1937 இல் திருநெல்வேலியில் ஆதிதிராவிடர் மாநாட்டில் அன்னை மீனாம்பாள் இவ்வாறு பேசினார்கள்.
“ஓர் சமுகமோ, ஓர் நாடோ விடுதலையடைய வேண்டுமானால் “கல்வி”, “ஒற்றுமை”, “மகளிர் முன்னேற்றம்” இம் மூன்றும் மிகவும் அவசியமானவை. இந்தியாவின் கல்வி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது; சாதி வேற்றுமைகளால் சமூகத்தில் ஒற்றுமையும் குறைவு; உலக அளவில் ஒப்பிடுகையில் இந்திய மகளிர் கேவலமாக நடத்தப்படுகிறார்கள், மகளிரின் பிற்போக்கான நிலை நாட்டையும் பிற்போக்கான நிலையில் வைத்திருக்கிறது”.
“பெண்கல்வி என்பது குழந்தைகளை வளர்த்துப் பராமரித்து அவர்களுக்குக் கல்வி கற்பிப்பதன் அருமையை உணர்த்தி அக்குடும்பத்தை உயர்த்தும். பெண்களின் அரசியல் பங்களிப்புகளுக்கு வழி வகுத்து சமூக முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும். இது நாட்டின் முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும். இதனை மனதில் கொண்டு பெண்கல்விக்கு வழிவகுப்பது இன்றியமையாதது”.
“ஒற்றுமையில்லாக் குடும்பம், ஒருமிக்க கெடும் என்பார்கள். அதுபோல ஒரு குடும்பமோ, ஒரு சமுதாயமோ, ஒரு தேசமோ முன்னேற்றமடைய வேண்டுமானால் ஒற்றுமை மிகவும் அவசியம். நாம் தேசத்தில் சாதிப்பிரிவினை அறவே ஒழிய இன்னும் பல ஆண்டுகள் செல்லுமாயினும் நம் சமூகத்தினர், நாம் முன்னேற்றமடைய நாங்களும் மனிதர்கள்தான், எல்லா உரிமைகளும் எங்களுக்கும் உண்டு என்று நிரூபிக்க வேண்டி நாம் யாவரும் பிரிவினை இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார் அன்னை மீனாம்பாள்.
க.ம.மணிவண்ணன்

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்



கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
--------------------------------------------------------
நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்துவிட்டுப்போகிறவர்கள் என்கிற எண்ணத்தை உடைத்து நொறுக்கிய திரையுலகப்போராளி அவர். நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் மூலம் மக்களை சீர்படுத்த முயன்றவர் அவர்.
நாகர்கோவில் அருகே உள்ள ஒழுகினசேரி கிராமத்தில் 1908-ல் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் நாள் பிறந்தார்.நாகர்கோவில் சுடலைமுத்துக் கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. கலைவாணரை செதுக்கியவர்கள் பெரியாரும், ஜீவானந்தமும். கலைவாணர் பிறந்தபோது நாகர்கோவிலை உள்ளடக்கிய நாஞ்சில்நாடு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுமையில் இருந்தது. சாதிக் கொடுமை அதிகம். நாயர்களுக்கும், நம்பூதிரிகளுக்கும் கீழ்தான் மற்ற அனைத்து சாதியினரும் அடிமைப்பட்டு இருந்தனர்.கலைவாணரின் நாடகங்களில் இது வெளிப்பட்டது. வன்மையாக அல்ல, மென்மையாக.
என்.எஸ்.கிருஷ்ணன் வருகைக்குப்பின் நகைச்சுவையின் தரம் உயர்ந்தது. நகைச்சுவை என்பது வெறுமனே உடல் மொழி மட்டுமல்ல; உடல் மொழி, வார்த்தை ஜாலங்கள் இவைகளைத் தாண்டி மக்களைச் சிந்திக்கவும் வைப்பது என்பதைத் தன் ஒவ்வொரு படத்திலும் ஆணித்தரமாக முன்வைக்க ஆரம்பித்தார் கலைவாணர்.
மக்களிடம் அவர் புகழ் கூட ஆரம்பித்தது. நகைச்சுவை நடிகனாக மட்டுமே அவர் சினிமாவைக் கடந்துசென்றுவிடவில்லை. எந்த விஷயத்திலும் தனக்கென ஒரு பார்வையை அவர் கொண்டிருந்தார். நடிப்பு பாடல் புதிய சிந்தனை பகுத்தறிவு என சினிமாவில் அவர் இயங்கினார். தனிப்பட்ட தன் வாழ்வில் அதிகபட்ச மனிதநேயத்தைப் பின்பற்றினார். திறமைசாலிகளைப் போற்றினார். அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தார்.
கலை என்பது மக்களை மகிழ்விக்க மட்டுமன்றி மக்களைச் சிந்திக்கவைத்து அதன்மூலம் சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதே என்ற கொள்கையுடன் பெரியாரைத் தன் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட கலைவாணர் தன் படங்களில் சுயமரியாதைக் கருத்துகளையும் பகுத்தறிவுக்கருத்துகளையும் பரப்பினார். ஒரு பெரிய இயக்கம், பல தலைவர்கள் ஒன்றுகூடிச் செய்யவேண்டிய சமூகப்பணியைத் தனி ஒருவனாகத் திரைப்படங்களில் நிகழ்த்திக்காட்டினார் அவர். சுயமரியாதைத் தலைவர்கள், திராவிட இயக்கத்தலைவர்கள், காங்கிரஸ் பேரியக்கத்தவர்கள் என அத்தனை தலைவர்களாலும் கொண்டாடப்பட்டது ஒன்றே அவரது நேர்மையான சமூகத்தொண்டுக்கு அடையாளம். 'கலைஞன் கட்சிக்கு அப்பாற்பட்டவன்' என்ற தன் கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்தார்.
சீர்திருத்த கருத்துகளை படங்களில் இயல்பாக கொண்டு சேர்த்தார் அவர். தன்னுடைய நிலம் முழுவதையும் ஊர் மக்களுக்குப் பொதுவாக்கி, கூட்டு உழைப்பால் கிடைக்கும் பலனை ஊர் மக்கள் ஒற்றுமையாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நல்லத்தம்பி படத்தில் வலியுறுத்தினார். தீண்டாமை மற்றும் மதுவை எதிர்த்தும் அவர் குரல் கொடுத்தார். கிந்தனார் நாடகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்க வேண்டும் என்று குரல் கொடுத்தார். இது எதுவும் அறிவுரை போல இருக்காது என்பது தான் கலைவாணரின் முத்திரைக்கு சான்று.
சென்னையில் 'சந்திரோதயம்' நாடகம் பெரியார் தலைமையில் நடந்தது. 'நாடகம். சினிமாவால்தான் மக்கள் பாழாகிறார்கள்!' என்று அடித்துப் பேசி அமர்ந்தார் பெரியார். அடுத்துப் பேசிய என்.எஸ்.கே.'பெரியார் சொன்னவை அனைத்தும் சரியே. நாங்கள் கொள்ளை அடிக்கிறோம். எங்களால் நன்மையைவிட கேடுகளே அதிகம்!' என்றார். அந்த நேர்மையும் துணிச்சலும் கலைவாணர் கைவண்ணம்!
அக்ரகாரத்து அதிசய மனிதர் வ.ரா. பெரியார் வரிசையில் கலைவாணர் என்று எழுதி விட பெரியாரிடம் இது குறித்து கருத்து கேட்டார்கள் . ” தனக்கே உரிய வகையில் நானும் சீர்திருத்தக் கருத்துகளைச் சொல்கிறேன்; கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும் சொல்றாரு. நான் சொல்லும்போது அழுகிய முட்டையையும் நாற்காலியையும் வீசி எறிகிறார்கள். ஜனங்க, இதையே கலைவாணர் சொன்னா காசு குடுத்துக் கேட்டுக் கை தட்டி ரசித்துச் சிரிச்சுட்டு அதை ஒத்துக்கிட்டுப் போறாங்க. அந்த வகையிலே என்னைவிட அவரு உசந்துட்டாரு ” என்றது வரலாறு.
தினமும் ஒரு பிச்சைக்காரர் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நிற்பாராம். இவரும் பணம் கொடுப்பார். 'அவன் உங்களை ஏமாற்றுக்கிறான்' என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்லவே, 'அவன் ஏமாத்தி என்ன மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத்தானே சாப்பிடப்போறான். ஏமாத்திட்டுப் போகட்டுமே' என்பாராம்!
ஒரு கட்டத்தில் கொடுத்துக் கொடுத்தே இல்லாமல் ஆகிப்போனார். அப்போது அவரிடம் வேலை செய்த ஒருவர், 'எனக்குத் திருமணம்' என்று வந்து நிற்கிறார். சுற்றும்முற்றும் பார்த்தபோது கண்ணில்பட்டது. ஒரு வெள்ளி கூஜா. அதை எடுத்துக் கொடுத்து, 'இதை விற்றுத் திருமணச் செலவுக்கு வைத்துக்கொள்'என்றாராம். எவரேனும் என்னிடம் உதவி கேட்டு, நான் இல்லை என்றும் கூறும் நிலை வந்தால், நான் இல்லாமல் இருக்க வேண்டும்!' என்று அடிக்கடி கூறுவாராம்.
கலைவாணர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்த சமயம், அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வதந்திகள் பரவின, 'மதுரம், நான் சாகலேன்னா இவங்க விட மாட்டாங்கபோல. இவங்க திருப்திக்காகவாவது ஒரு தரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கே என்றாராம்!
தன் மனைவி மதுரத்திடம் இப்படிச்சொன்னார் ,"நான் ஐம்பது வயசுக்குள்ள இறந்துடணும் மதுரம். ஒரு கலைஞன் தன்னோட கலை வறண்டு போறதுக்கு முன்னாடி இறந்துடணும் !" என்று.சொன்னபடியே நாற்பத்தி ஒன்பது வயதில் மரணமடைந்தார்.
“இனி என்.எஸ்.கே. செத்தாலும் சரி, அவர் பணம் காசெல்லாம் நழுவி அன்னக்காவடி கிருஷ்ணன் ஆனாலும் சரி. நாடக புரட்சி உலகைப் பற்றி சரித்திரம் எழுதப்பட்டால், அந்தச் சரித்திரத்தின் அட்டைப் படத்தில் கிருஷ்ணன் படம் போடாவிட்டால் அந்தச் சரித்திரமே தீண்டப்படாததாகி விடும்”--(குடிஅரசு 11.11.1944)
கலைவாணர் என்.எஸ்.கே. பற்றி தந்தை பெரியார்.

சமூகப் புரட்சியாளர் - ஜோதிபா பூலே

சமூகப் புரட்சியாளர் - ஜோதிபா பூலே
---------------------------------------------------------
மராட்டிய மண்ணில் தீண்டத்தகாதவர்களுக்காகவும், பெண்களுக்காகவும் முதலில் செயல்வடிவப் போராட்டத்தைத் தொடங்கியவர் ஜோதிபா பூலேதான். ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் நிலவி வந்த அறியாமையையும், மூடநம்பிக்கையையும் அகற்ற அவர்களின் அடிமை விலங்குகளை உடைத்தெறியக் களம் புகுந்தவர் பூலே.
முதன்முதலில் சனாதனிகள் கொடி கட்டிப் பறந்த பூனேவில், சிங்கத்தின் குகைக்குள்ளேயே புகுந்து அதற்கு சவால் விடுவதுபோல் அடித்தள மக்களுக்கும், பெண்களுக்கும் பள்ளியைத் திறந்தவர் பூலே. சமூக சமத்துவம், நீதி, பகுத்தறிவு ஆகியவற்றின் அடிப்படையில் சமூக ஒழுங்கை நிறுவச்செய்வதே அவரது இலட்சியமாக இருந்தது.
ஜோதிபா பூலேவின் காலச் சூழலைப் புரிந்து கொண்டால்தான் அவரது பணி எவ்வளவு முக்கியமானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அது பேஷ்வாக்கள் ஆட்சி செய்த காலம், மக்கள் அனைத்து தார்மீக நெறிகளையும் இழந்து நின்றனர். சித்பவன் பார்ப்பனர்களே அனைத்துப் பதவிகளையும் பிடித்துக் கொண்டனர். பிற சாதியினர் அமர்த்தப்பட்டிருந்தாலும், எவ்வளவு திறமையானவராகவும், உறுதியானவராகவும் இருந்தாலும், சூழ்ச்சியால் விரட்டப்பட்டனர்.
அறநெறியில் ஒரு தேக்கம்,கலாச்சாரத்தில் ஒரு சீரழிவு, மதவிசயங்களில் ஒரு இறுக்கம். அறிவு, உழைப்பு ஆகிய செயல்பாடுகளில் ஏற்பட்டிருந்த தளர்ச்சியானது வீழ்ச்சியையும், சீரழிவையும் கொண்டு வந்தது. இதுவே அன்றைய நிலை.
ஜோதிபா பூலே வாழ்க்கைப்பாதையை மாற்றியது அவர் கலந்து கொண்ட ஒரு பார்ப்பனத் திருமணம். அதில் அவர் அழைக்கப்பட்டே கலந்து கொண்டிருந்தாலும், அவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதால் கடுமையாக அவமதிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டார். இந்தச் சமூக இழிவுக்கெதிராகக் கலகம் செய்யவும், அடிமைச் சங்கிலியை உடைக்கவும், மதத்தின் பெயரால் வளர்க்கப்பட்டு, இந்துச் சமூகத்தின் மீது மோசமான பாதிப்புக்களை செலுத்தி வந்த கீழ்த்தரமான தீய ஒழுக்கங்களுக்கு எதிராகப் போராடவும் ஜோதிபா பூலே உறுதி பூண்டார். மாட்டு வண்டியிலிருந்து இறக்கி விடப்பட்டது எப்படி அண்ணல் அம்பேத்காரை உருவாக்கியதோ, அதேபோல் மகாத்மா ஜோதிபா பூலேவை உருவாக்கியது இந்த அவமதிப்பு.
ஜோதிபா மராட்டியத்தில் சமூக சீர்திருத்தப் பணியைத் தொடங்கினார். பெண்கள் படிக்கவே கூடாது என்ற சனாதன தர்மத்தை உடைத்து முதன்முதலில் பெண்கள் பள்ளியை அமைத்தார் ஜோதிபா. தமது மனைவி சாவித்திரிபாய் பூலேவுக்குக் கல்வி கற்பித்து அவரையே ஆசிரியராகவும் ஆக்கினார். பொது வேலைகளுக்கு வரும் இந்தியப் பெண்களுக்கு சாவித்திரிபாய் முன்னோடி. இதற்கெதிராக சனாதனிகள் தாக்குதல் தொடுத்தனர். சாவித்திரிபாய் தெருவில் நடக்கும்போது கற்களாலும், சேற்றாலும் தாக்கப்பட்டார். அமைதியாகப் பொறுத்துக் கொண்ட அவர் தனது கணவரின் கொள்கையை சிறிதும் கைவிடாது உடன் பணியாற்றினார். ஜோதிபாவை சிறிதும் அசைக்க முடியாத சனாதனிகள் அவரது தந்தையை மிரட்டி அவரையும், அவரது மனைவியையும் வீட்டை விட்டு வெளியேற்ற வைத்து விட்டனர். ஆறு மாதங்கள் மட்டுமே அவரால் பள்ளியை நடத்த முடிந்தது. எனினும் தளராத அவர் சிறிது நிலைமை மேம்பட்டதும் தம் நண்பர் சதாசிவ கோவந்தே கொடுத்த இடத்தில் மீண்டும் பள்ளியைத் தொடங்கி விட்டார். மிகச்சிறந்த பெயரை இந்தப்பள்ளி பெற்றது.
பூலே செய்த இன்னொரு செயல் வார்த்தைகளால் பாராட்ட இயலாதது. அவர் தாழ்த்தப்பட்டவர்கள்மேல் மட்டும் தனது கருணையைக் காட்டவில்லை. அனைத்து சாதியினரும், பார்ப்பனர்கள் உட்பட சகோதரர்களாகவே கருதி வந்தார். அந்தக் காலத்தில் பார்ப்பன விதவைப் பெண்கள் கடும் துன்பத்தில் உழன்றனர். அவர்கள் மொட்டையடிக்கப்பட்டு வீட்டுக்குள் அடைக்கப்பட்டனர். சிலரது காம விளையாட்டுக்களில் சிக்கி சின்னாபின்னமாயினர். எனவே அவர்கள் யாருக்கும் தெரியாமல் பிள்ளை பெற்று விட்டுச் செல்வது வழக்கமாகிப் போனது. பார்த்தார் ஜோதிபா. தன் பொறுப்பிலேயே ஒரு அமைப்பைத் தொடங்கி, இது போல் வழியற்று வரும் பார்ப்பனப் பெண்களை தம் வீட்டிலேயே வந்து தங்கிப் பிள்ளை பெற்றுச் செல்ல ஏற்பாடு செய்தார். அது மட்டுமல்ல, இப்படி ஒரு பார்ப்பனப் பெண் பெற்றெடுத்த பிள்ளையைத் தன் பிள்ளையாக தத்தெடுத்து வாரிசாக்கிக் கொண்டார்.
விதவைகளாகும் பார்ப்பனப் பெண்களுக்கு மொட்டையடிக்கக் கூடாது என்ற உன்னத லட்சியத்தை முன்வைத்து நாவிதர்களின் உதவியுடன் பெரும் போராட்டத்தைத் தூண்டி அதற்கும் பெருமளவில் மராட்டியத்தில் முடிவு கட்டினார் ஜோதிபா.
உண்மை நாடுவோர் சங்கம் என்ற சங்கத்தை அமைத்து அதன் மூலம் ஏராளமான செயல்பாடுகளை மேற்கொண்டு பெரும் சீர்திருத்தத்தைச் செய்தார் ஜோதிபா. அவரைப் பின்பற்றி ஏராளமானோர் அவரது சீடர்களாயினர். அவரது இயக்கம் மராட்டியத்தில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியது. பூனே நகராட்சி உறுப்பினராக பூலே சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்துள்ளார்.
“மகாத்மா” என்ற பட்டத்தை முதலில் பெற்றவர் ஜோதிபா. ஆனால் அதை அவரது அறுபதாவது பிறந்தநாளில் ஆயிரக்கணக்கில் கூடி “மக்களே அளித்தனர்” என்பதில்தான் அவரது மேன்மை அடங்கியுள்ளது. சத்யமேவ ஜெயதே - வாய்மையே வெல்லும் என்ற கோஷம் பூலேவால் உபயோகிப்பட்டதேயாகும்.
சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும், அண்ணல் அம்பேத்கருக்கு முன்னோடியாகவும், தம் வாழ்க்கையையே மக்களுக்காக அர்ப்பணித்தவருமான மகாத்மா பூலேவின் சமூகப் புரட்சியை நினைவில் ஏற்றுவோம்.
க.ம.மணிவண்ணன்

கருத்துகள்


நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இல்லை - தமிழிசை

கட்சியில இருந்ததே 10 பேருதான் அதுலயும் இப்ப ஒன்னு அவுட்டா.                                                          ---------------------------------------------

இது எங்களுக்கு வெற்றிகரமான தோல்வி!'- -தமிழிசை


டாக்டர் என்ன சொல்றாங்கன்னா, "ஆபரேஷன் சக்சஸ் பட் பேஷன்ட் டெட்" அப்புடிங்குறாங்க.
                       --------------------------------------------------------


பெரியாரை 25 ஆண்டுகளாக தெருத் தெருவாக அழைத்துச் சென்றேன் - சீமான்

ஆனா அவர அப்படியே விட்டுட்டு நீங்க ISUZU கார்ல ஏறிப் போயிட்டீங்களே அண்ணே.
                          -----------------------------------------------------------------

தமிழ்நாட்டு தவளைகளுக்கு மோடியைப் பற்றி என்ன தெரியும் - கரு. நாகராஜன்.

 தவளைகளுக்குத்தான் தெரியும் பாம்பு மிகவும் ஆபத்தானது என்று.

                                   ------------------------------------------------------------------
தமிழகத்தில் பா.ஜ.க. விஸ்வரூபம் எடுக்கும் - தமிழிசை

ஆனா அந்தப் படம் எங்க தியேட்டருல ஓடாது.

                             ----------------------------------------------------------------------
மோடியை வேண்டும் என்றே தமிழகத்தில் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள் - தமிழிசை

இல்லை,அவரை வேண்டாம் என்றுதான் விமர்சனம் செய்கிறோம்.
                             ----------------------------------------------------------------

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களை நினைவில் கொள்வோம்.
-----------------------------------------------------------------------------------
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடமிருந்தும் 40 ஆண்டுகளாக வழங்கப்படாத சமூகநீதியை வழங்கி, அதற்காக தமது பிரதமர் பதவியை இழந்தவர். பதவிக்காய் மக்களின் உரிமைகளை ஆதிக்க ஜாதியினரிடம் அடகு வைக்காமல், சமூகநீதிக்காக ஆயிரம் பிரதமர் நாற்காலிகளை தூக்கி எறியலாம் என்று அறிவித்த தியாகச் செம்மல்! அதிசய மனிதர்!
அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 340-ன் படி அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பி.பி.மண்டல் தலைமையில் 1980-ல் அரசுக்கு அறிக்கையை அளித்தது. ஆனால், பத்தாண்டுகள், அந்த அறிக்கை பற்றி எந்த நடவடிக்கையும் அன்றைய அரசு எடுக்கவில்லை.
1990-ல் அமைந்த தேசிய முன்னணி அரசு, தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, மண்டல் குழு அறிக்கையின் ஒரு பரிந்துரையை - பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு பணிகளில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு - நிறைவேற்றும் ஆணையை 7.8.1990-ல் அன்றைய பிரதமர் வி.பி. சிங் அறிவித்தார். இன்றைக்கு மண்டல் கமிசன் பரிந்துரைப்படி 27 விழுக்காடு பிற்படுத்தப் பட்டவர்களுக்கு, தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு 23 விழுக்காடு, குறைந்த பட்சம் 50 விழுக்காடு என்று ஆக்கிய காரணத்தால்தான் இன்றைக்கு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்கள் மத்திய அரசுப் பணிகளில் இடம் பிடித்துள்ளனர்
அன்று வி.பி. சிங் அறிவித்த ஆணையை எதிர்த்து, ஆதிக்க சக்திகள் வட நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தியது. அதைவிட வி.பி.சிங் அரசிற்கு ஆதரவு அளித்து வந்த பாஜக, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று கூறி, அத்வானி தலைமையில் 25.9.1990 அன்று ரத யாத்திரையை துவங்கியது.
மண்டலை எதிர்த்து, கமண்டலம் துவக்கப்பட்டது. சமூக நீதியின் காரணமாக சம்பூகன்கள் உருவாகக் கூடாது என்ற நோக்கில், 'ராமராஜ்யம் அமைப்போம் ராமர் கோவில் கட்டுவோம்' என்ற கோஷத்தோடும், யாத்திரை கிளம்பியது. அந்த ரத யாத்திரை 30.10.1990-ல் அன்றைய முதல்வர் லாலூ பிரசாத் அரசினாலே பீகாரிலே தடுக்கப்பட்டதால், வி.பி.சிங் அரசுக்கான ஆதரவை பாஜக உடனே விலக்கிக் கொண்டது. 1990ஆம் ஆண்டு நவம்பர் 7ந் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோரினார் வி.பி.சிங்.
அவரது அரசுக்கு ஆதரவாக 142 வாக்குகள் மட்டுமே பதிவாயின. எதிராக (பா.ஜ.க+காங்கிரஸ் உள்பட) 346 வாக்குகள் பதிவாயின. சமூக நீதியை நடைமுறைப்படுத்தவும், மதச்சார்பின்மையைக் காக்கவும் முயன்றவரின் தலைமையிலான தேசிய முன்னணி அரசு 11 மாதங்களிலேயே கவிழ்ந்தது. பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்டோருக்கு சமூக நீதி வழங்கிய அரசை, மதவெறி மாய்த்தது. சமூக நீதிக்கெதிராக மதத்தை முன்வைத்து ஆட்சியை கவிழ்த்தனர்.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கை கோரி வி.பி.சிங் ஆற்றிய உரையில் சமூக நீதியின் அவசியத்தை அவர் அழுத்தமாக வலியுறுத்தினார். அப்படிப் பேசும்போதெல்லாம் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா ஆகியோரது பெயர்களை உச்சரித்தார். “என் கால்கள் உடைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் நான் அடையவேண்டிய லட்சியத்தை அடைந்துவிட்டேன். மரியாதையோடு ஆட்சியை விட்டு நாங்கள் வெளியேறுகிறோம். அதற்காகப் பெருமைப்படுகிறோம்.
அரசியல் நாள்காட்டிகளில் கடைசித் தேதி என்று எதுவும் கிடையாது” என உறுதியாகத் தெரிவித்துவிட்டு, தோல்வியைத் துணிச்சலாக எதிர்கொண்டார். ஒரு வரலாற்றுக் கடமையை நிறைவேற்றிய திருப்தியுடன் வருவதுபோல, சமூக நீதிக்காகவும் மதச்சார்பின்மைக்காகவும் பிரதர் பதவியைத் துறந்துவிட்டு நாடாளுமன்றத்திலிருந்து கம்பீரமாக வெளியே வந்தார் வி.பி.சிங்.
க.ம.மணிவண்ணன்

புயல் கற்றுத்தந்த பாடம்

புயல் கற்றுத்தந்த பாடம்
---------------------------------------
கடந்து போன கஜா புயல் பெரிய பாதிப்புகளையும் சில பாடங்களையும் தந்துவிட்டுப் போயிருக்கிறது.
புயல் கடலோர மாவட்டங்களை மட்டுமே தாக்கும் என்கிற பொதுக்கருத்தை உடைத்துவிட்டுச் சென்றிருக்கிறது, கடலோடு எந்தவித தொடர்பும் இல்லாத திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களும் புயலால் பாதிக்கப்பட்டிருக்கிறது புயலால். எனவே இனிமேல் எந்த இயற்கை சீற்றமென்றாலும் எல்லோரும் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்பதைச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறது புயல்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமாக அதிக மனித உயிர் பலியாவதை வேண்டுமானால் தடுக்கலாம் ஆனால் முற்றிலுமாக தடுக்க முடியாது என்பதையும், கால்நடைகளையும் விவசாயப் பயிர்களையும் மரங்களையும் உடைமைகளையும் காப்பது கடினம் என்பதையும், ஆகப் பெரியவன் இயற்கைதான் என்பதையும் மீண்டும் ஒருமுறை அடித்துச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறது புயல்.
திட்டமிட்டுச் செயல்படுகின்ற நிர்வாகத்திறன் கொண்ட அரசால் மட்டுமே இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முக்கியத் தேவைகளான உணவு, உடை, குடிநீர், மின்சாரம் மற்றும் நிவாரணங்களை உடனடியாகத் தந்து பாதிப்பிலிருந்து விரைவாக மீட்டெடுக்க முடியும் என்பதையும் உறுதியாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறது புயல்.
இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டது பெருநகரமா, கிராமமா, பாதிக்கப்பட்ட மக்கள் யார் என்பதைப் பொருத்தே மற்றவர்களால் கவனிக்கப்படுகிறது என்பதையும், மீனவர்களின் அழுகுரலுக்குப் போலவே விவசாயிகளின் அழுகுரலுக்கும், உழைக்கும் ஏழை மக்களின் அழுகுரலுக்கும் இங்கு மதிப்பு இல்லை என்பதையும் சொல்லிவிட்டுப் போயிருக்கிறது புயல்.
மனிதகுலம் இந்த மண்ணில் இன்னும் உயிர்ப்புடன் வாழ்வதற்கு மனிதநேயம் மட்டுமே காரணம் என்பதையும், மதநேயம் ஒரு மயிரையும் புடுங்காது என்பதையும் ஓங்கி அடித்து உரக்கச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறது புயல்.
க.ம.மணிவண்ணன்
23/11/2018

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...