Thursday 23 July 2020

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையும் குறிப்பதாகவே நான் கருத்தில் கொள்கிறேன். அறிவியலும் மூடநம்பிக்கைகளும் எக்காலத்திலும் ஒன்றுக்கொன்று எதிரானது. அத்தகைய அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி குழந்தைகள் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பதென்பது முரணானது மட்டுமல்ல மிகுந்த வேதனையானதும் கூட.

முதலில், ஊடகங்களின் தாயாகவும் முதன்மையானதாகவும் விளங்குகின்ற திரைப்படங்களை எடுத்துக் கொள்வோம், பட பூஜையில் தொடங்கி வெளிவருவது வரை மூட நம்பிக்கைகளால் நிரம்பி வழிவது திரைப்படத்துறை, இவர்கள் வெளியிடும் திரைப்படங்கள் மட்டுமென்ன அறிவியலையும் பகுத்தறிவையுமா பேசப் போகிறது. மூடநம்பிக்கைகளை மனதில் விதைத்து அதை வளர்த்தெடுப்பதில் பெரும்பங்கு திரைப்படங்களுக்கே உண்டு.

பாம்பு பால் குடிப்பது, மிருகங்கள் பழிவாங்குவது, வேப்ப மரத்தில் பால் வடிவது, அம்மைக்கு மருத்துவம் பார்க்கக் கூடாதென்பது, சகுனம் பார்ப்பது, சடங்கு செய்வது, மண்சோறு தின்பது, தீ மிதிப்பது, அலகு குத்துவது, பால் குடம் எடுப்பது, காவடி தூக்குவது, குறி சொல்வது, கோடாங்கி அடிப்பது, செய்வினை செய்வது, திருஷ்டி கழிப்பது, பேய் விரட்டுவது, சாமி ஆடுவது, தாலி மஞ்சள் குங்குமம் என அழுது புலம்புவது, அப்பப்பா திரைப்படங்களால் தான் எத்தனை எத்தனை மூடநம்பிக்கைகள் விதைக்கப்படுகின்றன. நீங்களே சொல்லுங்கள் பேய்ப் படங்களையும் சாமிப் படங்களையும் கண்டு ரசிக்காத எந்தக் குழந்தையாவது உண்டா. பிஞ்சுகளின் நெஞ்சில் மூடநம்பிக்கை எனும் நஞ்சை விதைத்து வளர்த்து வருகின்றன திரைப்படங்கள். மூட நம்பிக்கைகளை ஒழிக்க காலமெல்லாம் பரப்புரை செய்து பகுத்தறிவாளர்கள் போராடி வரும் வேளையிலே, பல கோடிகள் செலவு செய்து படம் எடுத்து மூடநம்பிக்கைகளை வளர்த்து வருகிறது ஒரு முட்டாள் சுயநலக் கூட்டம்.

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பார்கள், ஆம் நான் சின்னத்திரை என்னும் தொலைக்காட்சியைப் பற்றித்தான் சொல்லுகிறேன். காலை எழுந்ததுமே அந்த ராசி நேயர்களே இந்த ராசி நேயர்களே என்று பொய் சொல்ல ஆரம்பித்து விடுகிறது ஏமாற்றுக் கூட்டம். இது எவ்வளவு பெரிய மூடநம்பிக்கை. 2020 சிறப்பாக இருக்கும் என்று சொன்ன யாரவது ஒரு ஜோசியர் கொரோனா வருமென்று சொன்னாரா, யாருமே சொல்ல வில்லையே. இது மட்டுமா மூடநம்பிக்கையை வளர்க்கும் புராணத் தொடர்களையும் பாம்புத் தொடர்களையும்தானே ஒளி பரப்பிக் கொண்டிருக்கின்றன அனைத்துத் தொலைகாட்சிகளும். இவற்றை விரும்பிப் பார்க்கும் சின்னஞ்சிறு குழந்தைகள் மனதில் மூடநம்பிக்கைகள் வளரத்தானே செய்யும். ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை எனும் விதத்தில் அனைத்து மதங்களும் அவர்களுக்கென்று தனித்தனியாக பல தொலைக்காட்சி ஊடகங்களை வைத்துக்கொண்டு  மதக் கருத்துக்களை பரப்புகிறோம் என்று சொல்லி மூடநம்பிக்கைகளைத்தானே விதைத்து வருகின்றன. இவைகளிடமிருந்து நம் பிஞ்சுகளை எவ்வாறு காக்கப் போகிறோம்.

மூடநம்பிக்கையை வளர்ப்பதில் அச்சு ஊடகங்கள் ஒன்றும் குறைந்ததல்ல, ராசி பலன் வராத எந்த செய்தித் தாளாவது உண்டா, குழந்தைகளுக்கென வெளிவரும் மலர்களிலும் கதைப் புத்தகங்களிலும் பாட்டுகளிலும் கூட அறிவியலுக்குப் புறம்பான  மூடநம்பிகையைத்தான் விதைக்கின்றன அவை. இத்தோடு மட்டுமல்லாமல் ஆன்மிக மலர், பக்தி மலர் என மூடநம்பிக்கையை வளர்ப்பதற்கு இலவச இணைப்புகள் வேறு.

வலையொலி, முகநூல், புலனம் ஆகியவற்றை கைகளில் வைத்துக்கொண்டு, சுய சிந்தனை அற்ற தற்குறிக் கூட்டம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை, உண்மைத் தமிழனாய் இருந்தால் அதிகம் பகிரவும் என்று சொல்லி மூடக்கருத்துகளையும் மூட நம்பிக்கைகளையும் பரப்பிவருகிறதே இதனை நாம் என்னவென்று சொல்லுவது.

எதனையும் பகுத்தறிவோடும் அறிவியல் கண்ணோட்டத்தோடும் பேசி வரும் நாம் இன்னும் மிக முனைப்போடு செயல் படவேண்டியது காலத்தின் தேவை. நாம் மெத்தனமாக இருந்தால் நம் குழந்தைகளின் மனதில் மூட நம்பிக்கையை விதைத்து அதனை வளர்த்து நம் குழந்தைகளை முட்டாள்களாக மாற்றிவிடும் இந்த ஊடகங்கள்.

மூச்சு விட முடியவில்லை ( I can’t breathe)

மூச்சு விட முடியவில்லை ( I can’t breathe)

அடிமைத் தளை ஒடித்த ஆபிரகாம்லிங்கன்
அறிந்திருக்க வாய்ப்பில்லை
விடுதலைக் காற்றை சுவாசிக்க முடியாமல்
நீ வீழ்ந்து போனதை

கனவொன்றிருக்கிறது எனக்கு எனச் சொன்ன
லூதர்கிங்கிற்கு தெரியாது
வெள்ளை நிறவெறி
கழுத்தை நெரித்து கதை முடித்த வரலாறு

வரலாற்றை மறந்த சமூகத்தால்
வரலாறு படைக்கவே முடியாது எனச் சொன்ன
மால்கம் எக்ஸ் அறிந்திருக்க மாட்டார்
வெள்ளை மாளிகையை கருமேகங்கள் சூழ்ந்து
விடாது கருப்பு என வீரமுழக்கமிட்டதை.

ஜார்ஜ் பிளாய்டே! என் சோதரா!

“மூச்சு விட முடியவில்லை”
அது உன் ஒற்றைக் குரலல்ல
ஒடுக்கப்பட்டோரின் ஒட்டுமொத்தப் பெருவலி

உனக்கொன்று தெரியுமா?
எனக்கும் மூச்சு விட முடியவில்லை
மேலேறி அமர்ந்திருக்கிறது ஜாதி வெறி

உரிமையைப் பறித்தது
வெள்ளை ஆதிக்கம் உன் மண்ணில்
ஆரியம் என் மண்ணில்

போய் வா என் தோழனே!
நாளை நானாகவும் இருக்கக்கூடும்

என்றாவது ஓர் நாளில் நமது பொழுதுகள்
நாம் சொல்லித்தான் விடியும்
அதுவரை அமைதியாய் கண்ணுறங்கு

என் பார்வையில் மனிதநேயம்


என் பார்வையில் மனிதநேயம் எதுவென்று கேட்டால் நான் இப்படிச் சொல்வேன். ஒடுக்கப்பட்டோரின் பக்கமே நான் நிற்பேன் என்றுரைத்து அவர்களின் உரிமைக்காய், கல்விக்காய், வேலைவாய்ப்பிற்காய், பெண்களின் உரிமைக்காய், இழிநிலையைப் போக்குதற்காய் இறுதிவரை களம் கண்டு போராடினாரே நம் தந்தை பெரியார் அந்தப் போரட்ட குணத்தையே மனிதநேயமென்று அடித்துச் சொல்வேன் நான்.

ஒடுக்கப்பட்டோரின் பாதுகாப்பிற்காக பல சட்டங்கள் இயற்றினாரே நம் அண்ணல் அம்பேத்கர் அந்த சட்ட அறிவை நான் மனித நேயம் என்பேன்.
ஏழைத் தொழிலாளர்களின் உயர்வுக்காக அல்லும் பகலும் சிந்தித்தாரே காரல் மார்க்ஸ் அந்த சிந்தனையை மனித நேயம் என்பேன் நான்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் வள்ளுவத்தை, யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் புறநானூற்று வரிகளை, அறம் செய விரும்பெனும் ஆத்திசூடியை, வாடிய போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் வரிகளை நான் மனித நேயம் என்றுரைப்பேன்.

வெளிநாட்டில் பிறந்திட்டாலும் இந்திய மண்ணில் வந்து தொண்டு பல செய்த அன்னை தெரசாவின் சேவையை, கருப்பின மக்களின் விடுதலைக்காய் பாடுபட்ட மண்டேலா, லூதர்கிங், மால்கம் எக்ஸ் தியாகத்தை மனிதநேயம் என்று சொல்லாமல் வேறெப்படி சொல்ல முடியும்.

மனிதநேயமென்ன மரித்தா போய்விட்டது கோபத்தோடு சிலர் கேட்கக்கூடும். மனிதநேயமுள்ளவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனால் அவர்கள் சமூகத்தில் ஒரு சிறு விழுக்காடு. கல்விக்காகவும் நற்செயல்களுக்காகவும் செல்வத்தையும் பொருளையும் உழைப்பையும் அளிக்கின்ற நல்லவர்கள் சிலரே உண்டு. ஆனால் பெரும்பாலோர்?

ஆயிரம் நண்பர்களை முகநூலில் வைத்துக்கொண்டு ஆறுதல் கூறும் நாம் அண்டை வீட்டாரின் பெயரை அறிந்து வைத்திருக்கிறோமா? ஆதரவாய் எப்போதாவது பேசியிருக்கிறோமா? நெடுஞ்சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடுவோரை காணொலி எடுத்து வலைத்தளத்தில் இட்டு விருப்பக்குறி பெறுவது மனிதநேயமா? மருத்துவமனை சேர்த்து குருதி கொடுத்து உயிரைக் காப்பது மனிதநேயமா?

சம்புகனின் உயிர் பறித்த ஏகலைவன் விரல் பறித்த வர்ணாசிரமம், நீட்டின் பெயரால் அக்கா அனிதாவின் உயிர் பறித்த போதும், ஜாதியின் பெயரால் அண்ணன் வெமுலாவின் உயிர் பறித்த போதும், உங்கள் மனிதநேயம் என்ன செய்தது? எளிதாகக் கடந்து போய் வீட்டின் முகப்பறையில் அகன்ற ஒளித்திரையில் திரைப்படம் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தது அப்படித்தானே?

யானை இறந்து போனதற்காக கண்ணீர் விட்டு கதறி அழும் நம் மனிதநேயம் பசிக்காகத் திருடியவனை கொன்றதுதான் வரலாறு. மதத்தின் பெயரால் படுகொலைகள் நிகழ்ந்த போது மனிதநேயம் என்ன மரத்தா போனது? குழந்தை என்றும் பாராமல் பாலியல் சீண்டல் புரியும் மிருக மனம் படைத்தவர்களை மனிதக் கூட்டத்தில் எப்படிச் சேர்ப்பது?

சங்கர்களும் இளவரசன்களும் கோகுல்ராஜ்களும் கொலை செய்யப்பட்டபோது போர்வை போர்த்தி உறங்கிக் கொண்டுதானே இருந்தது உங்கள் மனிதநேயம்? சக மனிதர்களை மனிதர்களாக மதிக்கத் தெரியாத மனித நேயம், தன் சுய ஜாதியிலேயே வரன் பார்த்துத் திருமணம் செய்துவைக்கத் துடிக்கும் நம் மனிதநேயம் வெட்கக்கேடானது, அது மனித அறமற்றது.

மனிதநேயம் பற்றி பேசுகையில் நான் எழுதிய கவிதை ஒன்று நினைவிற்கு வருகிறது.

பஞ்சமனென்றாய்
தாழ்ந்தவனென்றாய்
சூத்திரனென்றாய்
இழிபிறப்பென்றாய்
தொட்டால் தீட்டென்றாய்
பார்த்தாலே பாவமென்றாய்
ஏகலைவன் விரலொடித்தாய்
சம்புகனின் தலை பறித்தாய்
தீண்டத்தகாதவனென்றாய்
சேரியிலே வாழவைத்தாய்
வெட்டுவேன் நாக்கையென்றாய்
ஈயம் காதில் ஊற்றுவேனென்றாய்
தகுதி திறமை இல்லையென்றாய்
இடஒதுக்கீடு எதற்கென்றாய்
காதலிக்கக் கூடாதென்றாய்
கழுத்தறுத்துக் கதற வைத்தாய்
உயிர் பறித்தாய்
உடைமைகளை எரித்தாய்
மலம் தின்ன வைத்தாய்
சிறுநீர் பருக வைத்தாய்
கோயிலுக்குள் வராதேயென்றாய்
தேர் இழுக்கத் தடையென்றாய்
நீ பற்ற வைத்த சாதித்தீயில்
கொழுந்துவிட்டு எரிந்தன குடிசைகள்
நாங்கள் கதறியழும்போது
ஏனென்று கேட்காத
உங்கள் சாமிகளும் எமக்கு வேண்டாம்
உங்கள் மதங்களும் எமக்கு வேண்டாம்

என் பார்வையில் மனிதநேயமென்பது ஜாதி மதம் கடவுளைத் துறந்து, நிற இன மொழி பாலின வேறுபாடு களைந்து ஒவ்வொரு மனிதரும் தன் சக மனிதர்களுடன் எல்லையற்ற அன்பையும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் சமூகநீதியையும் பேணுவதுதான்.

அறிவை நம்புவோம்   மனிதரை நினைப்போம்
மனிதராய் வாழுவோம் மனிதநேயம் காப்போம்.  

குடியும் கொரோனாவும்


எது நடக்காது என்றிருந்தேனோ
கடைசியில் அது நடந்தே விட்டது

அது ஒரு தனி அறை
அங்கே நானும் கொரோனாவும் மட்டும்

விட்டுவிடுமாறு கைகூப்பி கெஞ்சினேன்
நீதான் என்னைப் பிடித்தாய் என்றது

எங்கே எப்போது நிகழ்ந்ததெனக் கேட்டேன்
மதுக்கடை வாசலில் தான் என்றது அது
முகக் கவசம் அணிந்திருந்தேனே நானென்றேன்
இடுப்பு வேட்டியே உன் பேச்சைக் கேட்காதே
முகக் கவசம் மட்டும் எப்படி என்றது

குடிக்காமல் இருக்க முடியாதென்றேன்
குடித்தாலும் நீண்டநாள் இருக்க முடியாதென்றதது

தப்பிக்க வழி என்ன கேட்டது நான்
நோயெதிர்ப்பு ஆற்றல் உடலிலிருந்தால்
சாத்தியமென்றது அது

கடவுள் என்னைக் காப்பார் என்றேன்
அமைதியாய் இருந்த அந்தக் குறும்புக் கோரோனா
அறை அதிரச் சிரித்துவிட்டு
யார் அந்தக் கடவுள் என்றது

அறையை விட்டு தப்பிக்க எண்ணி
கதவைத் திறக்க வேகமாய் ஓடினேன்
அப்போதுதான் அது நிகழ்ந்தது
கட்டிலிலிருந்து தூக்கத்தில் விழுந்த நான்
கண்களைக் கசக்கி மெல்லமாய் எழுந்தேன்.


மதப் பசியெடுத்தால் மனித உயிர் தின்னும்


இந்தியப் பசுக்களும்
சைவம்தான் உண்ணும்
மதப் பசியெடுத்தால்
மனித உயிர் தின்னும்.
தும்பிக்கை நீட்டி பிச்சையெடுத்தது
நேற்று சாமி சிலை சுமந்துவந்த
அந்த வாடகை யானை.
எதிர்காலம் சொல்லும்
கிளிகளின் எதிர்காலம் ஜோசியக்காரனின்
நெல் மணிகளில்.
அமாவாசைக்கு
வடை தின்ன அழைக்கப்படும்
அந்தக் காகம்தான்
பாட்டியிடம் என்றோ திருடிய
ஒரு வடைக்காக
இன்னும் அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
எப்போதும் பலன் சொல்லும்
சமையலறைப் பல்லி
கொதிக்கும் பாலில் விழுந்தது
அந்தோ பரிதாபம்.

எத்தனை முறை குறுக்கே போனாலும்
குறைவதே இல்லை
பூனை வளர்க்கும் நடிகையின் செல்வம்.
கழுதையின் முகத்திலேயே
நாள்தோறும் விழித்தாலும்
பழைய துணியையே
துவைத்துக் கொண்டிருக்கிறார்
அந்த சலவைத் தொழிலாளி.

Wednesday 29 January 2020

தேசியக்கொடியும் 3% நூல்களும்

தேசியக்கொடியும் 3% நூல்களும்
---------------------------------------------------
சுதந்திரக் காற்றில் பறப்பதாகச்
சொல்லப்படும் தேசியக்கொடி
எப்போதும் 3% நூல்களாலேயே
கட்டப்பட்டிருக்கிறது
ஏற்றும் கரங்கள் மட்டுமே
மாறிக் கொண்டிருக்கின்றன
நூல்கள் எப்போதும்
அப்படியேதான் இருக்கின்றன
அசோகச் சக்கரத்தைச்
சுழலவிடாமல் கட்டிப்போட்ட கொண்டாட்டத்திலிருக்கும்
அந்த நூல்கள்
கொடி முழுவதையும் காவியாக்கும் வெறியோடுதான் இருக்கின்றன
அந்த நூல்கள் அறுபடாமல் தேசியக்கொடிக்கு மட்டுமல்ல தேசத்திற்கும் விடுதலை இல்லை
க.ம.மணிவண்ணன்
26/01/2020

வந்திருந்தார் காந்தி

வந்திருந்தார் காந்தி
------------------------------
குடியரசு தின விழாவிற்கு
வந்திருந்தார் காந்தி
எப்போதும் போலவே எளிய தோற்றம்,
விலை உயர்ந்த கோட், சூட், கூலர், ஷு
எதுவும் அவரிடத்தில் இல்லை
மேடையில் ஏறி பேசத்தொடங்கினார்
CAA NRC கூடவே கூடாதென்றார்
சுட்டு வீழ்த்தும் கொலைவெறியோடு
குறிபார்த்துக் காத்திருந்தது
கோட்சேவின் துப்பாக்கி
கோட்சேக்களின் சூழ்ச்சியை அறிந்த
காந்தியின் இடுப்பிலும்
துப்பாக்கி இருந்தது
அவ்வப்போது அதைத் தொட்டுப்
பார்த்துக் கொண்டிருந்தார்
மேடை விட்டு இறங்கிய காந்தி
கோட்சேக்களை முறைத்தபடி விடுவிடுவென நடக்கத் தொடங்கினார்
காலில் விழ வந்தவர்களை
கவனமாகத் தடுத்தார்
தொட்டு வணங்கும் கைகளுக்குள்ளும்
துப்பாக்கி இருக்கும் என்பது
அவருக்குத் தெரிந்திருந்தது
ஹேராம் என ஒருமுறை கூட
உச்சரிக்கவில்லை அவரது வாய்
நாதுராமும் ஹேராமும் வேறு வேறல்ல
இரண்டும் ஒன்றேதான் என்பது
இப்போது அவருக்கு
நன்றாகவே புரிந்திருந்தது
க.ம.மணிவண்ணன்
26/01/2020

ஜன.21 புரட்சியாளர் லெனின் நினைவு நாள்.

ஜன.21 புரட்சியாளர் லெனின் நினைவு நாள்.
--------------------------------------------------------------------
* உழைத்து உழைத்து உருக்குலைந்த மக்களை மேலெழும்ப விடாமல் அழுத்தி வைக்கும் ஆபத்தான ஆயுதங்களே மதமும் கடவுளும்.
* மத ஒழுக்கநெறி என்னும் சொற்றொடர்தான் மக்களை இன்னும் ஏமாற்றிக்கொண்டு ஏமாளிகளாக வைத்திருக்கிறது.
* நச்சரிக்கும் வீட்டு வேலைகளிலிருந்து பெண்கள் விடுதலை பெறாமல் மனிதகுல விடுதலை சாத்தியமே இல்லை.
* பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு.
* மக்கள் இனி வாழவே வழியில்லை என எண்ணும்போது புரட்சி வெடிக்கும்.
* புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே.
* தோல்விகளை ஒப்புக்கொள்ள தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
* தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியமும், அவற்றை விரைவில் திருத்தி கொள்வதற்கான வலிமையும்தான் வெற்றி பெறுவதற்கான குணங்களாகும்.
* நீ விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாதே, நீ விரும்புவதை உலகமே எதிர்த்தாலும் செய்துமுடி.
- புரட்சியாளர் லெனின்.

திருவள்ளுவர் திருவுருவம் உருவான வரலாறு

திருவள்ளுவர் திருநாளான இன்று திருவள்ளுவர் திருவுருவம் உருவான வரலாற்றையும் தெரிந்து கொள்வோம்.
உலகம் போற்றிக் கொண்டாடும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் திரு உருவம் தமிழருக்கு கிடைக்கவில்லையே என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் நாளும் ஏங்கினார். திருவள்ளுவரின் உருவம் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனையில் திளைத்திருந்தார், அந்த கற்பனை வடிவத்தை சரியாக படம்பிடித்து தந்தவர் அவரின் உண்மை தொண்டரான ஓவியர் வேணுகோபால் சர்மா.
வேணுகோபால் சர்மா படம் வரையும் போது அது எவ்வாறு இருக்கவேண்டும் என்று தனது அபிப்ராயத்தை கூறியதோடு அந்தப்படம் அச்சேறுவதற்கும் பெரும் துணையாய் நின்றவர் பாவேந்தர்.
ஓவியர் வரைந்து காட்டிய சிறிய படத்தை செல்வந்தரான திரு.ராம.தமிழ்ச்செல்வனிடம் காட்டி இதைப் பெரிய அளவில் வரைவதற்குப் பொருளுதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார் பாவேந்தர், அவரது கட்டளையை ஏற்று பொருளுதவி செய்ய ஒப்புக்கொள்கிறார் தமிழ்ச்செல்வன்.
பாவேந்தர் எண்ணத்தின் படியே திருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக்கி உள்ளத்தை கவர்கிறார் சர்மா. இந்த ஓவியத்தை அப்போதைய முதல் அமைச்சராக இருந்த காமராஜரிடம் காண்பிக்க காமராஜரும் அந்த ஓவியத்தை மகிழ்ந்து பாராட்டுகிறார்.
கரந்தையில் முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம் தலைமையில் நடைபெற்ற புலவர் குழு கூட்டத்தில் இப்படத்தை காட்சிக்கு வைத்த பாவேந்தர் குழுவிலிருந்த புலவர்களிடம் ஒப்புதலை பெறுகிறார்.
இந்த கூட்டத்தில் தான் பாவேந்தரை யானைமீது அம்பாரியில் உட்காரவைத்து தஞ்சை நகர வீதிகளில் ஊர்வலமாக அழைத்து வந்து முத்தமிழ் காவலரும் புலவர்களும் சிறப்பித்தனர் என்பது வரலாற்று பெருமைக்குரிய செய்தி.
அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், டாக்டர் மு.வ.சிலம்புச் செல்வர், கலைஞர் கருணாநிதி பேராசிரியர் அன்பழகன், கவியரசர் கண்ணதாசன் என பலதரப்பினரும் திருவள்ளுவர் திருவுருவத்தைக் கண்டு மகிழ்ந்து ஏற்றுக்கொண்டனர்.
திருவள்ளுவர் திருவுருவப் பட வெளியீட்டு விழா பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் அப்போதைய கல்வி அமைச்சர் சி. சுப்பிரமணியம் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த டாக்டர். சுப்பராயன் திருவள்ளுவர் உருவப்படத்தை கண்டு மகிழ்ந்து தபால் தலையை வெளியிட்டு வரலாறு படைத்தார்.இப்படித் தொடங்கியது திருவள்ளுவர் உருவப்பட வரலாறு.
பாவேந்தர் எண்ணத்தில் இயக்கத்தில் ஊக்கத்தில் பிறந்த திருவள்ளுவர் திருவுருவம், ஓவியர் வேணுகோபால் சர்மா கைவண்ணத்தில், குடியாத்தம் ராம.திருச்செல்வன் வள்ளல் தன்மையில் உருவாகி, இன்று உலகம் கண்டு மகிழும் திருவள்ளுவர் திருவுருவமாக நிலை பெற்றுள்ளது. உண்மை வரலாறு இப்படித்தான் பதிவாகியிருக்கின்றது.
க.ம.மணிவண்ணன்
16/01/2020

ஜன.14 தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்ட நாள்.

ஜன.14 தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்ட நாள்.
---------------------------------------------------------------------------
தமிழுக்கென்று தனி மாநிலம் அமைந்தாலும், அதற்கு சென்னை மாநிலம் என்ற பெயரே தொடர்ந்தது. 1956-ம் ஆண்டிலேயே சென்னை மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழறிஞர்களும் தொடர்ந்து இந்தப் பெயர் மாற்றத்தை வலியுறுத்தினர்.1957ல் தி.மு.க சட்டமன்றத்தில் கொண்டுவந்த பெயர் மாற்றத் தீர்மானம் தோல்வியைத் தழுவியது.
தமிழ்நாடு பெயர் மாற்றத்தை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்ட சங்கரலிங்கனார் 78-ம் நாளில் உயிர்விட்டார். எந்தக் கோரிக்கைக்காகத் தியாகி சங்கரலிங்கனார் தனது உயிரை விட்டாரோ அதை அண்ணா முதல்வராகப் பதவியேற்றபோது நிறைவேற்றிவைத்தார். 1967 ஜூலை 18 அன்று பெயர் மாற்றத் தீர்மானத்தை சட்டசபையில் முன்மொழிந்தார் அண்ணா, அத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. 1968 நவம்பர் 23 ஆம் தேதி தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.1969 ஜனவரி 14 அன்று தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்தது.
விடுதலைக்கு முன்னும் பின்னுமான காலகட்டத்தில் தமிழ்நாடு தனது மொழி, இன உரிமைக்காகக் கட்சி பேதமின்றி பெரும் போராட்டங்களை நடத்தியிருக்கிறது. தியாகங்களையும் புரிந்திருக்கிறது. அதன் விளைவாகவே இன்றைய தமிழ்நாடு, இந்த உரிமைகளைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும்தான் அந்த தியாகங்களுக்கான சரியான மரியாதை.
க.ம.மணிவண்ணன்
14/01/2020

அந்த ஒரு நாளில்தான் அது நடந்தது

அந்த ஒரு நாளில்தான் அது நடந்தது
---------------------------------------------------------
சேக்கிழார்
கம்பராமாயணம் எழுதி முடித்த
அந்த ஒரு நாளில்தான்,
பாபா சாகேப்
மரணதண்டனை விதிக்கப்பட்டு
சிறையிலிருந்த
அந்த ஒரு நாளில்தான்,
அடிமைகளின் சூரியன்
ஆபிரகாம் லிங்கனா?
அபிராமிப் பட்டரா?
குழம்பிப் போன
அந்த ஒரு நாளில் தான்,
பகத்சிங்
மாவீரனா? மாவினா?
புரியாத
அந்த ஒரு நாளில்தான்,
எதிர்பாராதவொன்று
எதிரிலே நடந்தது,
ஆம்
புத்தகக் கண்காட்சியைத்
தொடங்கி வைத்துப்
பேருரையாற்றினார்
அந்தப் பெரிய மனிதர்.
க.ம.மணிவண்ணன்
11/01/2010

இயற்பியல் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களின் கருத்துகள்



இயற்பியல் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களின் கருத்துகள்
1. உலகம் (பிரபஞ்சம்) உருவாவதற்கு முன்பு மிகப் பெரும் வெற்றிடம் இருந்தது. இதை உருவாக்க கடவுளுக்கு அவசியம் இல்லை; கடவுள் உருவாக்கவும் இல்லை. மதவாதிகள் கூறுவது போல், உலகத்துக்கு வெளியிலிருந்தும் எவரும் படைக்கவில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை. கடவுள் வந்து, தடவிப் பார்த்து, உலகமே நீ உருவாகு என்றவுடன் உலகம் உருவாகியதாக கூறுவது அபத்தமானது.
2. எனக்கு நானே இரண்டு கேள்விகளைக் கேட்டுக் கொள்கிறேன். முதல் கேள்வி, இந்த பிரபஞ்சம் உருவானதற்கான காரணம், நம்மால் புரிந்து கொள்ள முடியாது. புரிந்து கொள்ள முடியாத காரணங்களுக்காகவே கடவுள், இந்த உலகை உருவாக்கினார் என்பது சரியா? இது முதல் கேள்வி. அறிவியல் கோட்பாடுகளின் அடிப்படையில், உலகம் (பிரபஞ்சம்) உருவானதா என்பது இரண்டாவது கேள்வி.
இதில் இரண்டாவது கேள்வியையே நான் ஆதரிக்கிறேன். இயற்பியல் கோட்பாடுகள்தான் பிரபஞ்சத்தை உருவாக்கியது. இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியதில், எந்தக் கடவுளும் உரிமை கோர முடியாது என்பதே எனது உறுதியான கருத்து.
3. பிர‌ப‌ஞ்ச‌த்தில் இருண்ட குகைகள் (black holes) இருக்கின்றன. ஆனால், அந்த இருட்டை விட, விஞ்ஞானத்தை புரிந்து கொள்ளாமலும் ஏற்க மறுத்தும் அறியாமையில் உழலும் இருட்டுதான் மிக‌வும் ஆபத்தானது.
4. பல கோடிக்கணக்கான மக்கள் கடவுளை நம்புகிறார்கள் என்பதற்காகவே அந்த ஆதார‌ம‌ற்ற‌ பொய்யை சுய‌சிந்த‌னையுள்ள எந்த மனிதனும் ஏற்கத் தேவையில்லை.
5. கடவுள் என்ற ஒரு த‌னி ச‌க்தி இருந்தால் கூட அதுவும் இயற்பியல் விதிகளுக்கு கீழ்படியும் கடவுளாகத்தான் இருக்கமுடியும்.
6. நல்ல‌வேளை "பெருவெடிப்பு" பற்றிய என் உரையின் பொருள் பற்றி போப்பாண்டவருக்கு புரியவில்லை. இல்லையென்றால் எனக்கும் கலீலியோக்கு நேர்ந்த அதே கதிதான் நேர்ந்திருக்கும்.
7. விஞ்ஞானத்தின் முன் மதம் மண்டியிட வேண்டும். விஞ்ஞானம் ம‌த‌த்திற்குமுன் ஒருபோதும் மண்டியிடக்கூடாது.விஞ்ஞான‌ம் ஆதார‌ங்க‌ளின், தெளிவுக‌ளின், நிரூப‌ண‌ங்க‌ளின் அடிப்ப‌டையில் ஆன‌து.
8. உங்க‌ள் அன்றாட‌ வாழ்வின் செளக‌ரிய‌ங்க‌ளும் வ‌ச‌திக‌ளும் விஞ்ஞான‌ம் அளித்த‌ வ‌ர‌மா அல்ல‌து ம‌த‌ம் கொடுத்த‌ அதிச‌ய‌மா என்று ந‌டுநிலையோடு சிந்தித்தால் உங்க‌ளுக்கே அது புரியும்.
அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் பிறந்த நாள் (ஜன.08) இன்று

சொர்க்கவாசல் திறப்பும் வரலாற்று உண்மையும்

சொர்க்கவாசல் திறப்பும் வரலாற்று உண்மையும்
நாகப்பட்டினத்தில் இருந்து ஜைனக் கோவிலின் பொன் விக்கிரகத்தைத் திருடி வந்து அதை உருக்கி எடுத்துப் பணமாக்கி, திருமங்கை ஆழ்வார் என்ற பார்ப்பனர் சீரங்கம் கோவிலின் மதில்களைக் கட்டினார். ஆனால், அக்கோவிலின் மதில்களையும், கட்டடங்களையும் கட்டிய தொழிலாளிகளுக்கோ அந்தக் கோவிலின் சின்னத்தையே அதாவது நாமத்தையே சாத்திவிட்டார் அந்த பார்ப்பனர். கூலி கேட்ட தொழிலாளர்களை ஓடத்தில் ஏற்றி, பொன்னும் பொருளும் தருகிறேன் என்று கூறி, காவிரி ஆற்றில் கொண்டு போய்க் கவிழ்த்துக் கொன்றுவிட்டார் திருமங்கை ஆழ்வார் - ஓடக்காரன் துணையோடு.
அவர்களை ஆற்று வெள்ளத்தில் தள்ளி, படுகொலை செய்த இடத்திற்குக் கொள்ளிடம் என்றும், அந்தத் துறைக்குப் பார்வானத்துறை (பார்வானம் - சுடுகாடு, பார்வணம் - ஈமச் சடங்கு செய்யும் இடம்) என்றும் பெயரிட ரெங்கநாதனிடம் வேண்ட, அவரும் அதற்கு அனுமதி அளித்ததோடு அன்று கொல்லப்பட்டவர்க்கெல்லாம் முக்தி(சொர்க்கம்)யும் வழங்கினாராம்
(ஆதாரம்:திருமங்கை ஆழ்வார் வைபவம் என்ற பக்தி நூல்)
சீரங்கம் வைகுண்ட ஏகாதசியின்போது திறக்கப்படுகின்றதே சொர்க்கவாசல் - அது எங்கே செல்லுவது தெரியுமா? திருமங்கை ஆழ்வார் கொள்ளிடக்கரையில் தொழிலாளர்களைக் கொன்று இறுதிச் சடங்கு செய்த அந்தப் பார்வனத்துறைக்கு. சொர்க்கவாசல் மகிமை இப்போது புரிகிறதா?
திருமங்கை ஆழ்வார் வைபவம் எனும் பக்தி நூல் இவ்வாறு கூறுகிறதே - இதன் பொருள் என்ன?
(1) திருமங்கை ஆழ்வார் என்பவன் ஒரு திருடன்.
(2) தொழிலாளர்களுக்குக் கொடுக்கவேண்டிய கூலியைக் கொடுக்காமல் வஞ்சகமாக அழைத்துச் சென்று படுகொலை செய்தவன்.
(3) இந்தப் படுகொலைக்கு சீரங்கநாதன் என்று கூறப்படும் ரெங்கநாதன் என்ற கடவுளும் உடந்தை.
(4) திட்டமிட்டு படுகொலையையும் செய்துவிட்டு, அதனை வஞ்சகமாகப் பக்திப் போதை மாத்திரைகளாக உருட்டிக் கொடுத்து, பக்திப் பரவசமாக்கி - வைகுண்ட ஏகாதசி - சொர்க்கவாசல் திறப்பு என்று கூறி மக்களை ஆண்டுதோறும் வஞ்சிக்கிறார்கள் – சுரண்டுகிறார்கள்.
பக்தர்களே, உங்கள் முன்னோர்களைப் படுகொலை செய்த நாளைப் பயபக்தியோடு ஏற்கலாமா? இந்தப் பார்ப்பன வஞ்சகத்தை வெறுக்கவேண்டாமா?
க.ம.மணிவண்ணன்

விழியின் மொழி – ஜன.4 ப்ரெய்லி நாள்(உலக கண்பார்வையற்றோர் நாள்)



விழியின் மொழி – ஜன.4 ப்ரெய்லி நாள்(உலக கண்பார்வையற்றோர் நாள்)
மனிதர்கள் உடலில் குறைபாடுடன் பிறப்பதற்கு அவர்கள் முற்பிறவியில் செய்த பாவமே காரணம் என்ற மூடநம்பிக்கையை விதைத்ததோடு அவ்வாறு பிறப்பவர்கள் பாவப் பிறவிகள் என இழிவுபடுத்திய அனைத்து மத ஆதிக்கங்களும் நிறைந்த அந்த காலகட்டத்தில் தான் கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் எழுத்துக்களை தொட்டு வாசிப்பதற்கும் படிப்பதற்கும் ஏற்ற எளிய எழுத்து முறையை உருவாக்கினார் லூயி ப்ரெய்லி.
இரு கண்களிலும் பார்வையை இழந்த சிறுவன் ப்ரெய்லி, பார்வையற்றோர் எளிதாகப் படிக்க எதுவாக ஒரு எழுத்து முறையை 1825 ஆம் ஆண்டில் உருவாக்கிய போது அவனுக்கு வயது 15. விழிகளின் கதையை கண்ணீரில் எழுதாமல் ஏட்டில் எழுதிய லூயி ப்ரெய்லியின் பிறந்த நாளான ஜனவரி 4 ப்ரெய்லி நாளாக(உலக கண்பார்வையற்றோர் நாள்) நினைவில் கொள்ளப்படுகிறது.
ப்ரெய்லி எழுத்துமுறை எந்த மொழிக்கும் சொந்தமில்லை ஆனால் உலகின் பெரும்பான்மை மொழிகளில் அந்த குறியீடுகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. 2016 ம் ஆண்டு உலகம் முழுமைக்கும் ஒருங்கிணைந்த ஆங்கில ப்ரெய்லி குறியீட்டு வழக்கம் ஏற்கப்பட்டது.
ப்ரெய்லி என்பது ஒரு மொழியல்ல, அது பேசு மொழியாக இல்லை. பார்வையற்றவர்களுக்கான எழுத்து குறியீடு மொழியாக மட்டுமே உள்ளது. சைகை குறியீடு போலவே இதுவும் குறியீடாகவே ஏற்கப்படுகிறது.
ப்ரெய்லி எழுத்து முறையில் எழுத்துகள், எண்கள், கணிதக் குறியீடுகள், சிறப்புக் குறியீடுகள் மட்டுமல்லாது இசைக் குறியீடுகளும் தற்போது உள்ளன. ஏ.டி.எம் இயந்திரங்களை பயன்படுத்துவதற்கென சிறப்பு ப்ரெய்லி எழுத்து முறை உள்ளது.
தற்போது பெரும்பாலான பொது இடங்களில் ப்ரெய்லி குறியீடுகளைப் பார்க்கலாம். பல்வேறு நாடுகளில், கண்டிப்பாக ப்ரெய்லி எழுத்து இடம் பெற வேண்டும் என்ற விதிகள் உள்ளன.
மாற்றுத் திறனாளிகள் மிகவும் திறமைசாலிகள், நுண்ணறிவு மிக்கவர்கள், படைப்பாளிகள் என்பதற்கு லூயி ப்ரெய்லி அவர்களின் வாழ்வே ஒரு மிகச் சிறந்த சான்றாகத் திகழ்கிறது.
க.ம.மணிவண்ணன்
04/01/2020

கனவில் வந்த கலாம்

கனவில் வந்த கலாம்
----------------------------------
நேற்றிரவு அயர்ந்த உறக்கம்
உறக்கத்தில் ஒரு கனவு
கனவிலும் உறங்கிக் கொண்டிருந்தேன் நான்
தட்டி எழுப்பினார் முதியவர் ஒருவர்
கண்விழித்து யாரெனக் கேட்டேன்
நான் தான் கலாம் என்றார்
கனவு காணச் சொன்ன கலாமா என்றேன்
ஆம் என்று கூறி அமைதியாய் நின்றார்
கனவு காணச் சொல்லிய நீங்களே
கனவை கலைப்பது முறையா என்றேன்
சின்னதாக புன்னகை செய்தார்.
வீணையும் கீதையும் எங்கே என்றேன்
வெறும் கையுடனேயே வந்தேன் என்றார்
எழுப்பிய காரணம் எதுவெனக் கேட்டேன்
பிறந்து விட்டது 2020
அது தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்தால்
இந்தியா எப்படி வல்லரசாகும்
கோபமுடன் கேட்டார் கலாம்
வல்லரசு என்றால் என்னவென்று கேட்டேன்
வலிமையான பாரதம் அதுவே என்றார்
புரியும்படி கூறுங்கள்
ஒன்றும் தெரியாத சின்னப்பயல் நானென்றேன்
இராணுவ பலம் மிகுந்துருப்பதுவே
வல்லரசு நாட்டின் இலக்கணமென்றார்
மூன்று வேளை உணவு கிடைக்குமா
வல்லரசாக இந்தியா ஆகி விட்டால்?
நல்லரசாய் இருப்பதுவே காலத்தின் தேவையென்றேன்
புரியாத மொழியினிலே கடுப்பாகத் திட்டிவிட்டு
காணாமல் போய் விட்டார்
பொறியாளராய் இருந்து விஞ்ஞானியாய் அவதரித்த
அந்த மெத்தப்படித்த மேதாவி
மீண்டும் போர்வையைப் போர்த்தி
கனவில் உறங்க ஆரம்பித்தேன் நான்.
க.ம.மணிவண்ணன்
01/01/2020

நுண்ணுயிரியலின் தந்தை லூயிஸ் பாஸ்டியர்

நோய்கள் கடவுள் கொடுத்த தண்டனையல்ல, அது கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகளின் வேலை என்று கூறியவர் நுண்ணுயிரியலின் தந்தை லூயிஸ் பாஸ்டியர்.
• சில நுண்ணுயுரிகளால் நன்மையும், சிலவற்றால் நோயும் பரவுகிறது எனவும் காற்றிலும் கிருமிகள் உள்ளன எனவும் தெளிவுபடுத்தினார் லூயிஸ் பாஸ்டியர்.
• ரேபிஸ் எனும் வெறிநாய்கடி நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்தார். அம்மை நோய்க்கும் தடுப்பூசி கண்டறிந்தார்.
• கால்நடைகளைத் தாக்கும் ஆந்த்ராக்ஸ் கிருமியையும், கட்டுப்படுத்தும் மருந்தையும் கண்டுபிடித்தார் லூயிஸ் பாஸ்டியர்.
• லூயிஸ் பாஸ்டியரின் கண்டுபிடிப்புகளைத் தழுவியே காசநோய்,போலியோ போன்ற கொடிய நோய்களுக்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது.
• மருத்துவர்கள் கையுறை அணியும் முறைக்கும் மருத்துவ கருவிகளை கிருமி நீக்கம் செய்து பதனிடும் பெட்டியில் வைத்து பயன்படுத்தும் முறைக்கும் வழிவகுத்தவர் அவரே.
• பட்டுப்புழுக்களை பாதிக்கும் கிருமிகளை கண்டுபிடித்ததுடன் அவற்றிடமிருந்து பட்டுப்புழுக்களை காக்கவும் ஆலோசனை வழங்கினார்.
• உணவுத் துறையில் நுண்ணியிர்களை கட்டுப்படுத்தி உணவு பதனிடும் முறையை உருவாக்கினார்.
• உணவுப் பொருள்களை பதப்படுத்தி பாதுகாக்கும் முறை பாஸ்ச்சரைசேசன் என்று அவரது பெயராலேயே இன்றும் அழைக்கப்படுகிறது.
• இன்று பலநோய்கள் கட்டுப்படுத்தப்பட்டு மனிதனின் வாழ்நாள் இரட்டிப்பாகி உள்ளதென்றால் அதில் முதன்மையானதும் முக்கியமானதுமான பங்கு லூயிஸ் பாஸ்டியருக்கும் உண்டு.
அறிஞர் லூயிஸ் பாஸ்டியரின் பிறந்தநாள் இன்று.
க.ம.மணிவண்ணன்
27/12/2019

வானில் தோன்றும் நெருப்பு வளையம்(சூரிய கிரகணம்) – அறிவியலும் மூடநம்பிக்கையும்



வானில் தோன்றும் நெருப்பு வளையம்(சூரிய கிரகணம்) – அறிவியலும் மூடநம்பிக்கையும்
இன்று வானில் தோன்றிய வளைய சூரிய கிரகணத்தை நம்மில் பலபேர் solar filter வழியாகவோ தொலைக்காட்சியிலோ கண்டிருப்போம். இயற்கை நிகழ்வான இந்த சூரிய கிரகணத்தை பற்றிய அறிவியல் தகவல்களை கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
சூரிய கிரகணத்தின் வகைகள்:
-----------------------------------------------
சூரிய கிரகணத்தில் முழு சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம், நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்று பொதுவாக மூன்று வகை உள்ளது. இது தவிர நெருப்பு வளைய சூரிய கிரகணமும் பகுதி சூரிய கிரகணமும் இணைந்த கலப்பின சூரிய கிரகணம் என்ற வகையும் உள்ளது.
சூரிய கிரகணம் எதனால் ஏற்படுகிறது?
------------------------------------------------------------
சந்திரன், பூமி, சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமையும் அமாவாசையன்றே சூரிய கிரகணம் உண்டாகும். இவ்வாறு அவை ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் இருக்கும் சந்திரன், சூரியனை நம் பார்வையிலிருந்து மறைத்து விடுவதே சூரிய கிரகணம். சூரிய கிரகணம் அமாவாசை அன்றுதான் உருவாகும் ஆனால் எல்லா அமாவாசையிலும் உருவாகாது.
பூமிக்கு மிக அருகில் சந்திரன் இருக்கும்போது சூரியனின் அளவும் சந்திரனின் அளவும் நம் பார்வைக்கு ஒரே மாதிரியாக இருக்கும். அதனால் சந்திரன் சூரியனை முழுமையாக நம் பார்வையிலிருந்து மறைத்துவிடும். இது தான் முழு சூரிய கிரகணம்.
பூமிக்கு மிகத் தொலைவில் சந்திரன் இருக்கும் போது நம் பார்வைக்கு சூரியனைவிட சந்திரன் சிறியதாக இருக்கும் அப்போது சூரியனின் நடுப்பகுதியை மட்டுமே சந்திரானால் நம் பார்வையிலிருந்து மறைக்க முடியும். சூரியனின் விளிம்புப் பகுதி ஒளி வீசும் நெருப்பு வளையம்போல் காணப்படும். இதுதான் இன்று தோன்றிய நெருப்பு வளைய சூரிய கிரகணம்.
சந்திரனானது சூரியனை பகுதி அளவில் மறைக்கும் பொழுது, உண்டாவது பகுதி சூரிய கிரகணம்.
கிரகணம் பற்றிய மூடநம்பிக்கைகள்:
---------------------------------------------------------
ராகு கேது ஆகிய பாம்புகள் சூரியனை விழுங்கி விடுவதாலேயே கிரகணங்கள் தோன்றுவதாக மூட நம்பிக்கை நிறைந்த கதைகள் சொல்லப்படுகிறது, கிரகண நேரத்தில் நீர் அருந்தக் கூடாது, உணவு உண்ணக்கூடாது,கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் வரக்கூடாது என்று சொல்லப்படுபவை எல்லாம் முழுக்க முழுக்க மூட நம்பிக்கையே. கடவுள்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கோவில்கள் கூட கிரகண நேரத்தில் மூடப்படுவது அதிகபட்ச வேடிக்கை.
க.ம.மணிவண்ணன்.
26/12/2019

பாரதி(யார்?)

பாரதி(யார்?)
-------------------
பாரதியின் கவிதைகளைப் படித்துவிட்டு அவரை வானளாவப் புகழும் நம்மில் பல பேர் அவர் சுதேசமித்திரன், இந்தியா ஏடுகளில் எழுதியவைகளையும் அவரது கட்டுரைகளையும் முழுமையாக வாசிப்பதில்லை, அவ்வாறு வாசித்திருந்தால் இன்றைய ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி களுக்கு அவர்தான் முன்னோடி என்பதும் அவர் மகாகவி அல்ல மகா"காவி" என்பதும் தெளிவாக விளங்கும்.
1) சுதேசமித்திரன் ஏட்டில் 1906ல் “எனது தாய்நாட்டின் முன்னாட் பெருமையும் இந்நாட் சிறுமையும்” என்ற தலைப்பில், “ஆரியர் வாழ்ந்து வரும் அற்புத நாடென்பது போய்ப்
பூரியர்கள் வாழும் புலைத்தேசமாயினதே” என்று எழுதியவர்தான் பாரதி என்பது உங்களுக்குத் தெரியுமா?
2) 1907 இல், சுதேசமித்திரனில் “வந்தே மாதரம்” பாடலில் “ஆரிய பூமியில் நாரியரும் நர சூரியரும் சொலும் வீரிய வாசகம் வந்தே மாதரம்” என்றெழுதி இந்தியாவை ‘ஆரிய பூமி’ என்றழைத்தவர்தான் பாரதி என்பது உங்களுக்குத் தெரியுமா?
3) “சுதேச கீதங்கள்” என்னும் தலைப்பில் தமிழ்த்தாய் கூறுவதாக “ஆன்ற மொழிகளினுள்ளே – உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்” என்று ஆரியத்தை உயர்த்தி எழுதியவர்தான் பாரதி என்பது உங்களுக்குத் தெரியுமா?
4) சமஸ்கிருதம் ஒன்றே தெய்வபாஷை மற்றவைகள் எல்லாம் மனிதர்கள் பேசும் சாதாரண பாஷை என்று எழுதியவர்தான் பாரதி என்பது உங்களுக்குத் தெரியுமா? (ஆதாரம்: பாரதியார் கட்டுரைகள், ப.46, வானதி பதிப்பகம், சென்னை, 1981)
5) ‘உலகில் உள்ள எல்லா நாகரிகங்களுக்கும் மூலமாக இருப்பது ஆரிய நாகரிகமே’ என்றவர்தான் பாரதி என்பது உங்களுக்குத் தெரியுமா? (ஆதாரம்: பாரதியார் கட்டுரைகள், ப.264, வானதி பதிப்பகம், சென்னை, 1981)
6) சுதேசமித்திரன் (11.1.1920) இதழில் ‘ஒளிர்மணிக் கோவை’ என்னும் தலைப்பில் எழுதியுள்ள பாரதி சமஸ்கிருதம்தான் இந்தியாவுக்கு பொது மொழியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
7) 1914 ஆம் ஆண்டில், அச்சமில்லை அச்சமில்லை என்று வீரமாக பாடல் இயற்றிய பாரதிதான் ஆங்கிலேய ஆட்சியின் தயவை நாடி 1912, 1913, 1914 என்று தொடர்ந்து அவர்களுக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்தார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா? (ஆதாரம்: பாரதியின் கடிதங்கள் (தொ.ஆ) ரா.அ.பத்மநாபன், ப.51,53,55)
8) 28.11.1918ல் கடலூர் சிறையில் இருந்தபடியே சென்னை மாநில ஆளுநருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து பின்பு விடுதலையானார் என்பதும் அதன்பிறகு அரசியலை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு சமயம் சார்பாக மட்டுமே பேசியும் எழுதியும் வந்தார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா? (ஆதாரம்: பாரதியின் கடிதங்கள் (தொ.ஆ) ரா.அ.பத்மநாபன், ப.57)
9) “நான்கினில் ஒன்று குறைந்தால் வேலை தவறிச் சிதைந்தே – செத்து வீழ்ந்திடும் மானிடச் சாதி” என்று ‘சமூகம்’ என்ற தலைப்பில் நால்வருணத்தை மிகவும் வலியுறுத்திப் பாடியதும் “நாலு குலங்கள் அமைத்தான் – அதை நாசம் உறப்புரிந்தனர் மூடமனிதன்” என்று ‘கண்ணன் என் தந்தை’ என்ற பாடலில் நால்வருணத்தைக் கெடுத்து விட்டார்களே எனக் கூறி வருந்தியதும் பாரதிதான் என்பது உங்களுக்குத் தெரியுமா?
10) டாக்டர் டி.எம்.நாயர் அவர்கள் பஞ்சமர் மாநாட்டில் 7.10.1917 அன்று பார்ப்பனர்களை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து பேசியதற்கு எதிராக இந்துமத வெறியையும் ஜாதி வெறியையும் தூண்டியவர்தான் பாரதி என்பது உங்களுக்குத் தெரியுமா? (ஆதாரம்: பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம், ப.394)
11) தனது நண்பரான நாராயணன்(பிள்ளை) அவருடைய மகனுக்கு தன்னுடைய மகளை மணம் முடித்து வைக்க கேட்டபோது, முதலில் உங்கள் மகனுக்கு ஒரு பறை அல்லது சக்கிலியப் பெண்ணைத் தேடித் திருமணம் செய்து வையுங்கள். அதன்பிறகு பாப்பா திருமணத்தைப் பற்றிப் பேசலாம் என்று ஜாதி வெறியோடு பேசியவர்தான் ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடியதாகப் போற்றப்படும் பாரதி என்பது உங்களுக்குத் தெரியுமா?(ஆதாரம்: சித்திரபாரதி, ரா.அ.பத்மநாபன், ப.164)
12) பாரதி ‘ஞானரதம்’ என்ற கதையில் நால்வருணத்தை வலியுறுத்தியுள்ளார் என்பதும் இந்த உலகத்தில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் தீர ஒரே வழி என்னவென்றால் மீண்டும் நால்வருணம் தோன்ற வேண்டும் என்பதே என்றும் கூறியது பாரதி என்பது உங்களுக்குத் தெரியுமா?
13) ஸாவித்திரி, ஸீதை, சகுந்தலை போன்று கணவனுக்காகவே வாழும் கற்புடையவர்களாக பெண்கள் இருக்கவேண்டும் என்றும் உடன்கட்டை ஏறியவர்கள் உத்தமிகள் என்றும் எதிர்காலத்தில் கணவனுடன் உடன்கட்டை ஏறும் பெண்கள் மஹா ஸ்திரிகளாவார்கள் என்றும் பெண்கள் விவாகரத்து செய்யக் கூடாது என்றும் எழுதியவர் பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்ததாக புகழப்படும் பாரதிதான் என்பது உங்களுக்குத் தெரியுமா?
(ஆதாரம்: பாரதி புதையல் பெருந்திரட்டு, ப.379, பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம், ப.350,351)
14) தான் சார்ந்த இந்துமதத்தை மட்டுமே உயர்த்தியும் அதனை அழியாமல் காப்பாற்ற வேண்டும் என்று எழுதி வந்த பாரதி புத்த,முகமதிய,கிருஸ்துவ மதங்களை கடுமையாகச் சாடி விமர்சனம் செய்தவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? (ஆதாரம்: பாரதியின் பகவத் கீதை (உரைவிளக்கம்), பாரதியார் கட்டுரைகள்)
15) இந்துக்கள் அனைவரையும் ஒன்று திரட்ட வேண்டும் என்றும் மதமாற்றத்தை தடுக்கவேண்டும் என்றும் இந்து தர்மத்தை அழியாமல் காக்கவேண்டும் பரப்பவேண்டும் என்றும் இந்தியாவிற்கு பாரததேசம் என்று பெயர் வைக்கவேண்டும் என்றும் பசுவை தெய்வமாக வணங்க வேண்டும் என்றும் இசுலாமியர்களும் கிருஸ்துவர்களும் தேசபக்தி அற்றவர்கள் என்றும் எழுதியவர்தான் பாரதி என்பது உங்களுக்குத் தெரியுமா?( ஆதாரம்: பாரதியார் கட்டுரைகள், பாரதியார் புதையல் பெருந்திரட்டு)
க.ம.மணிவண்ணன்
11/12/2019

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...