மூச்சு விட முடியவில்லை ( I can’t breathe)
அடிமைத் தளை ஒடித்த ஆபிரகாம்லிங்கன்
அறிந்திருக்க வாய்ப்பில்லை
விடுதலைக் காற்றை சுவாசிக்க முடியாமல்
நீ வீழ்ந்து போனதை
கனவொன்றிருக்கிறது எனக்கு எனச் சொன்ன
லூதர்கிங்கிற்கு தெரியாது
வெள்ளை நிறவெறி
கழுத்தை நெரித்து கதை முடித்த வரலாறு
வரலாற்றை மறந்த சமூகத்தால்
வரலாறு படைக்கவே முடியாது எனச் சொன்ன
மால்கம் எக்ஸ் அறிந்திருக்க மாட்டார்
வெள்ளை மாளிகையை கருமேகங்கள் சூழ்ந்து
விடாது கருப்பு என வீரமுழக்கமிட்டதை.
ஜார்ஜ் பிளாய்டே! என் சோதரா!
“மூச்சு விட முடியவில்லை”
அது உன் ஒற்றைக் குரலல்ல
ஒடுக்கப்பட்டோரின் ஒட்டுமொத்தப் பெருவலி
உனக்கொன்று தெரியுமா?
எனக்கும் மூச்சு விட முடியவில்லை
மேலேறி அமர்ந்திருக்கிறது ஜாதி வெறி
உரிமையைப் பறித்தது
வெள்ளை ஆதிக்கம் உன் மண்ணில்
ஆரியம் என் மண்ணில்
போய் வா என் தோழனே!
நாளை நானாகவும் இருக்கக்கூடும்
என்றாவது ஓர் நாளில் நமது பொழுதுகள்
நாம் சொல்லித்தான் விடியும்
அதுவரை அமைதியாய்
கண்ணுறங்கு
No comments:
Post a Comment