விழியின் மொழி – ஜன.4 ப்ரெய்லி நாள்(உலக கண்பார்வையற்றோர் நாள்)
மனிதர்கள் உடலில் குறைபாடுடன் பிறப்பதற்கு அவர்கள் முற்பிறவியில் செய்த பாவமே காரணம் என்ற மூடநம்பிக்கையை விதைத்ததோடு அவ்வாறு பிறப்பவர்கள் பாவப் பிறவிகள் என இழிவுபடுத்திய அனைத்து மத ஆதிக்கங்களும் நிறைந்த அந்த காலகட்டத்தில் தான் கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் எழுத்துக்களை தொட்டு வாசிப்பதற்கும் படிப்பதற்கும் ஏற்ற எளிய எழுத்து முறையை உருவாக்கினார் லூயி ப்ரெய்லி.
இரு கண்களிலும் பார்வையை இழந்த சிறுவன் ப்ரெய்லி, பார்வையற்றோர் எளிதாகப் படிக்க எதுவாக ஒரு எழுத்து முறையை 1825 ஆம் ஆண்டில் உருவாக்கிய போது அவனுக்கு வயது 15. விழிகளின் கதையை கண்ணீரில் எழுதாமல் ஏட்டில் எழுதிய லூயி ப்ரெய்லியின் பிறந்த நாளான ஜனவரி 4 ப்ரெய்லி நாளாக(உலக கண்பார்வையற்றோர் நாள்) நினைவில் கொள்ளப்படுகிறது.
ப்ரெய்லி எழுத்துமுறை எந்த மொழிக்கும் சொந்தமில்லை ஆனால் உலகின் பெரும்பான்மை மொழிகளில் அந்த குறியீடுகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. 2016 ம் ஆண்டு உலகம் முழுமைக்கும் ஒருங்கிணைந்த ஆங்கில ப்ரெய்லி குறியீட்டு வழக்கம் ஏற்கப்பட்டது.
ப்ரெய்லி என்பது ஒரு மொழியல்ல, அது பேசு மொழியாக இல்லை. பார்வையற்றவர்களுக்கான எழுத்து குறியீடு மொழியாக மட்டுமே உள்ளது. சைகை குறியீடு போலவே இதுவும் குறியீடாகவே ஏற்கப்படுகிறது.
ப்ரெய்லி எழுத்து முறையில் எழுத்துகள், எண்கள், கணிதக் குறியீடுகள், சிறப்புக் குறியீடுகள் மட்டுமல்லாது இசைக் குறியீடுகளும் தற்போது உள்ளன. ஏ.டி.எம் இயந்திரங்களை பயன்படுத்துவதற்கென சிறப்பு ப்ரெய்லி எழுத்து முறை உள்ளது.
தற்போது பெரும்பாலான பொது இடங்களில் ப்ரெய்லி குறியீடுகளைப் பார்க்கலாம். பல்வேறு நாடுகளில், கண்டிப்பாக ப்ரெய்லி எழுத்து இடம் பெற வேண்டும் என்ற விதிகள் உள்ளன.
மாற்றுத் திறனாளிகள் மிகவும் திறமைசாலிகள், நுண்ணறிவு மிக்கவர்கள், படைப்பாளிகள் என்பதற்கு லூயி ப்ரெய்லி அவர்களின் வாழ்வே ஒரு மிகச் சிறந்த சான்றாகத் திகழ்கிறது.
க.ம.மணிவண்ணன்
04/01/2020
04/01/2020
No comments:
Post a Comment