Saturday, 11 November 2017

மதிப்புக்குரிய ஆட்சியாளர்களுக்கு

மதிப்புக்குரிய ஆட்சியாளர்களுக்கு ஒன்னுந்தெரியாத சின்னப்பய எழுதுறது,
நா ஒரு சாதரணமான ஆளு, எனக்கு ஒங்க அளவுக்கு பெரிய அறிவெல்லாம் கெடையாது, நா எழுதுனதுல ஏதாவது தப்பு இருந்துச்சுன்னா என்ன மன்னிச்சுக்குங்க.
ரொம்ப நாளாவே நீங்க எல்லாரும் இந்தியா வல்லரசு ஆகணும் வல்லரசு ஆகணும்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க, ஆனா எனக்கு தெரிஞ்சதெல்லாம் எங்க ஊருல இருக்க வல்லத்தரசு அப்புடிங்கிறவரத்தான், சரி நமக்குத்தான் தெரியல நல்லா படிச்சவங்ககிட்ட கேப்போம்னு ஒருத்தர்கிட்ட போயி கேட்டேன்.
அவரு சொன்னாரு வல்லரசுன்னா வலிமையான பாரதம் அப்படின்னு, அய்யா நம்ம மரமண்டையில ஒன்னும் ஏறல கொஞ்சம் வெவரமா சொல்லுங்கன்னேன், அதுக்கு அவரு எல்லா நாடுகளும் நம்மள பாத்து பயப்படுற மாதிரி நாம ராணுவ பலத்தோட இருக்கிறதுக்கு பேரு தான் வல்லரசு அப்படின்னாரு.
நா வாய மூடிக்கிட்டு பேசாம இருந்துருக்கணும் அவருக்கிட்ட கேட்டேன் அப்படி வல்லரசு ஆயிட்டா எல்லாருக்கும் மூணு வேள சோறு கெடைக்குமான்னு, அதுக்கு அவரு என்ன கோவமா மொறச்சாரு நா வாய மூடிக்கிட்டு பேசாம வந்துட்டேன்.
ஏங்க வல்லரசா இருக்குறது முக்கியமா இல்ல நல்லரசா இருக்குறது முக்கியமா, இங்க நெறைய பேரு சோத்துக்கு வழியில்லாம கெடக்குறான், என்ன மாதிரி நெறைய பேரு படிப்பில்லாம இருக்குறான், படிச்சுப்புட்டு நெறைய பேரு வேல கெடைக்காம திரியுறான், அதுக்கு ஏதாவது பண்ணுங்கன்னா அத விட்டுப்புட்டு வல்லரசு ஆகணும் வெங்காயம் ஆகணும்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க, வரிசையா ராக்கெட் விடுறீங்களே எல்லா ஊருக்கும் பஸ் விட்டுட்டீங்களா.
இந்தியா வளர்ந்துருச்சு வளர்ந்துருச்சுன்னு சொல்றீங்களே, 1947 ல இருந்து நீங்க மட்டுந்தான் வளர்ந்து இருக்கீங்க நாங்க என்னமோ இன்னும் அப்படியே தான் இருக்கோம், மத்தவங்கல்லாம் அவங்க பொருளுக்கு வெள வச்சுக்கிறாங்களே நாங்க வெவசாயம் பண்ற பொருளுக்கு ஏங்க எங்களால வெள வக்க முடியல, நீங்க எங்களுக்கு எதுவும் இலவசமா தர வேணாங்க நாங்க நல்லபடியா பொழைக்கிறதுக்கு வழி பண்ணுங்க நாங்களே எல்லாத்தையும் காசு கொடுத்து வாங்கிக்கிறோம்.
எங்க பக்கத்து வீட்டுல இருக்குற தம்பி ஏதோ டிஜிட்டல் இந்தியான்னு சொல்லிக்கிட்டு இருந்தான், என்னடா இது புது இந்தியாவா இருக்கேன்னு அப்படின்னா என்னன்னு கேட்டேன், அதுக்கு அந்த பய இனிமே நாடு முழுக்க கம்ப்யூட்டர் தான் இன்டர்நெட் தான் அத வச்சே எல்லா வேலயயும் முடிச்சுறலாம் அப்படின்னான், நா கேட்டேன் மனுசனோட மலத்த மனுசனே அள்ளுறானே, கழிவுத் தொட்டிக்குள்ள எறங்கி சுத்தம் பண்றானே அதுக்கு ஏதாவது டிஜிட்டல் இந்தியாவுல திட்டம் இருக்கான்னு, அதுக்கு அவன் இங்கிலிசுல ஏதோ திட்டுனான் எனக்குத்தான் ஒன்னும் புரியல, ஏங்க நா கேட்டதுல என்னங்க தப்பு.
நா எழுதுனத படிச்சுட்டு என்ன நீங்க ஆண்டி இந்தியன்னு நெனச்சுக்காதீங்க, நா வெறும் அன்னக்காவடி இந்தியன் தான்.
இப்படிக்கு,
ஒன்னுந்தெரியாத சின்னப்பய
க.ம.மணிவண்ணன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...