கேள்வி : சி.பி.எஸ்.சி ஒரு No.1 டுபாக்கூர் – விளக்குக.
பதில் : Central Board of Standard Education என்று ஆங்கிலத்திலும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்று தமிழிலிலும் அழைக்கப்படும் இந்நிறுவனம் உயர்தரக் கல்வியை வழங்குவதாக தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறது அவ்வாறே பொதுமக்களாலும் நம்பப்படுகிறது, ஆனால் இதுவரை இந்தக் கருத்து அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
உயர்தரக் கல்வியை வழங்குவதாகச் சொல்லிக்கொள்ளும் இந்த நிறுவனத்தால் நடத்தப்படும் தேர்வுகள் மிகவும் தரமற்றதாக இருக்கிறது. சென்ற கல்வியாண்டில் நடத்தப்பட்ட பிளஸ்-2 வகுப்பு பொருளாதார தேர்வு வினாத்தாளும், 10-ம் வகுப்பு கணக்கு தேர்வு வினாத்தாளும் தேர்வுக்கு முந்தின நாளே பலருக்கு ‘வாட்ஸ்-அப்’பில் வந்துவிட்டது. 10-ம் வகுப்பு கணக்கு வினாத்தாளை பொறுத்தமட்டில், சி.பி.எஸ்.இ. தலைவருக்கே முந்தினநாள் அனுப்பப்பட்டு இருக்கிறது. ‘முடிந்தால் என்னை பிடித்துப்பார்’ என்ற தைரியம்தான் இந்த வினாத்தாளை அனுப்பியவர்களுக்கு இருந்திருக்கிறது.
வினாத்தாள் வெளியானதால் மறுதேர்வு அறிவிக்கப்பட்டபோது அதை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் செய்தனர் அப்போது அவர்கள் “இது சிபிஎஸ்இ தவறு. அவர்களால் கேள்வித்தாளை பாதுகாப்பாக வைக்க முடியவில்லை. அதற்காக நாங்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?” என கேள்வி எழுப்பினர். இருந்தபோதும் தேர்வு திட்டமிட்டபடியே நடத்திமுடிக்கப்பட்டது. சி.பி.எஸ்.இ.-யை பொறுத்தமட்டில், வினாத்தாள் வெளியாவது இதுதான் முதல்முறையல்ல. ஏற்கனவே 2006-ம் ஆண்டும், 2011-ம் ஆண்டும் கேள்வித்தாள்கள் தேர்வுக்கு முன்பே வெளியாகியிருக்கிறது.
இதுமட்டுமல்ல நீட் தேர்விலும் இதுபோன்ற பல குளறுபடிகள் நடந்துள்ளன. சென்ற ஆண்டு நடந்த தேர்வில் வினாத்தாள்கள் ஒரே மாதிரியாக இல்லை எனவும், கேள்விகள் வடமாநிலங்களில் எளிதாக இருந்ததாகவும் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கடினமாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது, உயர்நீதிமன்றமும் கேள்வித்தாள்கள் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என சி.பி.எஸ்.இ-க்கு அறிவுறுத்தியது. இந்த ஆண்டும் கூட தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில்(தமிழ்வழி) 49 கேள்விகள் தவறானவை என்று சொல்லப்படுகிறது. இதுதவிர மாணவர்களை சோதனை என்ற பெயரிலும் தேர்வுமையங்களை வெளிமாநிலங்களில் அமைத்தும் மனஉளைச்சலுக்கு உள்ளாக்கி வருகின்றனர்.
ஒரு தேர்வையே சிறப்பாக நடத்தத் தகுதியும் திறமையும் இல்லாத துப்புக்கெட்ட வெட்கங்கெட்ட சி.பி.எஸ்.இ-க்கு தகுதித்தேர்வு நடத்த என்ன அருகதை இருக்கிறது என்பதே பெரும்பாலான மாணவர்களின் கருத்தாக இருக்கிறது.
இதுபோன்ற பல்வேறு காரணங்களால் சி.பி.எஸ்.சி ஒரு No.1 டுபாக்கூர் என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது.
பி.கு. ஆசிரியப் பெருமக்கள் இந்த கேள்வி பதிலைப் படித்துவிட்டு மதிப்பெண் வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
முன்னாள் மாணவன்
க.ம.மணிவண்ணன்
க.ம.மணிவண்ணன்
No comments:
Post a Comment