Wednesday 26 June 2019

இன்றைய இளைஞர்களின் சமுதாய அக்கறை


இன்றைய இளைஞர்களின் சமுதாய அக்கறை மிகுந்திருக்கிறதா? குறைந்திருக்கிறதா? மிகுந்தே இருக்கிறது இதுவே என் கருத்து.

சமுதாய அக்கறை இல்லாமல் ஒரு சில இளைஞர்கள் இருப்பதாக வேண்டுமானால் சொல்லலாம் ஆனால் மிகுதியான இளைஞர்கள் சமுதாய அக்கறை மிகுந்தே உள்ளனர்.

பள்ளி கல்லூரிகளில் படிக்கும்போதே இளைஞர்களின் சமுதாய அக்கறை தொடங்கிவிடுகிறது. என்.எஸ்.எஸ். என்.சி.சி போன்றவற்றில் சேர்ந்து சமுதாயத் தொண்டாற்ற தொடங்கி விடுகின்றனர். கல்லூரி காலங்களில் கிராமங்களுக்குச் சென்று ஆறு,குளம்,கண்மாய்,ஏரி ஆகியற்றை தூர்வாரி மக்களுக்கு உதவுவது சமுதாய அக்கறையினால் தானே.

இன்றைய இளைஞர் சமுதாயம் பிறருக்கு உதவும் மனப்பான்மையை அதிகம் கொண்டுள்ளது. புயல் வெள்ளம் பெருமழை, நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் ஜாதி மத பேதம் இன்றி இளைஞர்கள் ஓடி ஓடி உதவுவது சமுதாயத்தின் மீதுள்ள அக்கறை மிகுந்திருப்பதாலா குறைந்திருப்பதாலா நீங்களே சொல்லுங்கள்.

இன்றைய இளைஞர்கள்தான் உயிர்காக்கும் பணிகளில் அதிகமாக ஈடுபடுகின்றனர். விபத்துக் காலங்களில் இரத்ததானம் செய்ய முண்டியடித்துக்கொண்டு வருவது இளைஞர் கூட்டம் தானே, அதற்குக் காரணம் சமுதாய அக்கறை இல்லாமல் வேறென்ன, இரத்ததானம் செய்கின்ற ஆர்வம் அவர்களுக்கு கல்லூரி காலங்களிலேயே தொடங்கி விடுகிறது. உடல் உறுப்பு தானங்களில் அதிகம் ஆர்வம் காட்டுவதும் இளைஞர்கள்தான். இப்போது சொல்லுங்கள் இளைஞர்களின் சமுதாய அக்கறை மிகுந்திருக்கிறதா இல்லையா என்று.

இன்றைக்கும் படித்த இளைஞர்கள் கிராமங்களில் மாலை நேர வகுப்புகள் நடத்தி கல்வி அறிவை வளரச் செய்வதற்கு சமூக அக்கறை ஒன்றே காரணம் அல்லவா, தன்னார்வ மிகுதியால் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கின்ற இளைஞர்கள் எத்தனையோ பேர் உள்ளனர்.
நகரை தூய்மைப்படுத்துதலிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களிலும் தன்னார்வத் தொண்டர்களாய் ஈடுபடும் இளைஞர்களின் சமூக அக்கறையை அறிந்ததில்லையா நீங்கள்.

வரதட்சணை வாங்க மாட்டோம், சாதி மதத்தை மறுப்போம் என்ற குறிக்கோளோடு மணம் முடிக்கும் இளைஞர்கள் கூட்டம் இன்னும் இருக்கத்தானே செய்கிறது. இது சமூக அக்கறை இல்லையா
அரசு வேலையை மட்டும் நம்பிக்கொண்டிராமல் தாமாகத் தொழில் தொடங்கி எண்ணற்ற வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை தருவதையும் நாம் சமுதாய அக்கறையில்தானே சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இன்றைய இளைஞர்கள் பொதுப் பிரச்சனைகளில் ஒன்றுகூட மாட்டார்கள் என்ற கருத்தை உடைத்தது ஜல்லிக்கட்டு போராட்டம், இளைஞர்களின் ஒற்றுமையை உலகுக்கே உணர்த்தியது அப்போராட்டம், தன்னெழுச்சியாக கூடிய இளைஞர்கள் கூட்டம் தமிழர் மரபை மீட்டெடுப்பதற்காக கடைசி வரை களத்தில் நின்று போராடி உரிமையை மீட்டுத்தந்தது சமுதாய அக்கறை இல்லாமல் வேறென்னவாக இருக்க முடியும்.

எனக்கு ஒரு சிறு வருத்தம், மாட்டுக்காக கூடிய கூட்டம் நீட்டுக்காக கூடாமல் போனதேனோ, நீட்டுக்காகக் கூடியிருந்தால் சகோதரி அனிதா நம்மோடு இருந்திருப்பார்.

இன்றைய இளைஞர்களின் சமுதாய அக்கறை மிகுந்தே இருந்தாலும் ஒரு சில இளைஞர்கள் சமுதாய அக்கறை இன்றி ஜாதி மத வெறியோடும், போதைப் பழக்கத்திற்கு அடிமையாகவும், திரைக் கலைஞர்களின் மாயக் கவர்ச்சியாலும் பாதை மாறி பயணம் செய்வது கவலை கொள்ள வைக்கிறது. அவர்களும் நல்வழிக்கு திரும்பி சமுதாய அக்கறை கொண்டால் நம் தமிழ்ச் சமுதாயம் உயர்ந்த வாழ்வும் வளமும் பெறும் என்பது உறுதி.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...