தொலைந்துபோன அறம் - எங்கே போகிறோம் நாம்
ஊழல் என்றால் அரசியல்வாதிகள் என்பதிலிருந்து தொடங்கி பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் வரை வந்து இப்போது எல்லோருக்கும் பொதுமை என்றாகி விட்டது. பணம் படைத்தவர்கள் மட்டுமே வாழ்வாங்கு வாழ முடியும் என்றதொரு காலச்சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம்.
ஊழலின் ஊற்றுக்கண் குடும்பத்தில் தான் இருக்கிறது. பெரியவர்கள் சிறியவர்களிடம் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் ‘நல்லாப் படிக்கணும், கை நிறைய சம்பாதிக்கணும்’ என்பது.
நல்லாப் படிக்கணும் என்பது அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற கருத்தில் சொல்லப்படுகிறதே தவிர நல்லதைப் படிக்க வேண்டும் என்ற கருத்தில் சொல்லப்படுவது இல்லை அதாவது நல்லொழுக்கம் நன்னடத்தை மனிதநேயம் என்ற கருத்தில் சொல்லப்படுவது இல்லை. கை நிறைய சம்பாதிக்கணும் என்பது அதிகமாக பொருள் ஈட்டவேண்டும் என்ற பொருளில் சொல்லப்படுகிறதே தவிர நல்வழியில் ஈட்ட வேண்டும் என்ற பொருளில் இல்லை.
நல்லாப் படிக்கணும் என்பது அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற கருத்தில் சொல்லப்படுகிறதே தவிர நல்லதைப் படிக்க வேண்டும் என்ற கருத்தில் சொல்லப்படுவது இல்லை அதாவது நல்லொழுக்கம் நன்னடத்தை மனிதநேயம் என்ற கருத்தில் சொல்லப்படுவது இல்லை. கை நிறைய சம்பாதிக்கணும் என்பது அதிகமாக பொருள் ஈட்டவேண்டும் என்ற பொருளில் சொல்லப்படுகிறதே தவிர நல்வழியில் ஈட்ட வேண்டும் என்ற பொருளில் இல்லை.
இங்கு குழந்தைகளுக்கு அறம் சொல்லித் தரப்படுவது இல்லை மாறாக பொருள் மட்டுமே சொல்லித் தரப்படுகிறது. அதுவும் அய்யன் வள்ளுவன் சொல்லிய அதிகாரங்களின் படி அல்ல, தனி மனித அதிகாரங்களின் படியே. அறத்தை மீறிய பொருள் எப்போதும் ஊழல் நிறைந்ததாகவே இருக்கும்.
பல இலட்ச ரூபாய் செலவு செய்து கல்வி கற்று, பல இலட்ச ரூபாய் கையூட்டாகக் கொடுத்து பணியில் சேரும் ஒருவன் எவ்வாறு நல்வழியில் பொருள் ஈட்டுவான்.
பல்கலைக்கழக துணை வேந்தரின் ஊழல் பற்றிய செய்தி ஊடகங்களில் உலா வருகிறது, இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அனைவருமே நன்றாகப் படித்தவர்கள்தான், ஆனால் நல்லதைப் படித்தவர்கள் இல்லை.கை நிறைய சம்பாதிப்பவர்கள் தான், ஆனால் நல்வழியில் சம்பாதிக்கிறவர்கள் இல்லை.
துணை வேந்தர் ஆவதற்கு அவர் எவ்வளவு கையூட்டு கொடுத்தாரோ தெரியவில்லை,முன்பு கொடுத்ததை இப்போது மற்றவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டிருக்கிறார். தற்போது இவரிடம் கொடுப்பவர் பிற்காலத்தில் மற்றவர்களிடமிருந்து பெற்றுக்கொள்வார் இது ஒரு சங்கிலித்தொடர் நிகழ்வு.
உதவிப் பேராசிரியர் நியமனத்திற்காக ஒருவரிடமிருந்து முப்பது இலட்சம் கையூட்டாக பெற்றுள்ளார். துணை வேந்தராக பதவியேற்று இரண்டு வருடங்களில் அவர் 82 பேரை பல்வேறு பணியிடங்களுக்கு பணி நியமனம் செய்துள்ளார். அப்படியானால் அவர் பெற்ற கையூட்டு எவ்வளவு. இவர் ஊழல்வாதி என்றால் பணி நியமனம் பெற்றவர்களும் ஊழல்வாதிகள் தானே. இவர்களுக்கு எல்லாம் கிடைக்கப்போகும் தண்டனை தான் என்ன. பணம் ஒன்று மட்டுமே போதுமானதா அனைத்திற்கும். தகுதி திறமை எல்லாம் தேவை அற்றதா.
இது ஒன்றும் முதல் நிகழ்வு இல்லை, இது போன்ற முறை கேடுகள் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன இதற்கு முடிவுதான் என்ன. அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி என அமைதியாக இருந்துவிட வேண்டியது தானா.
பொருளாதார வசதியற்று, அல்லல்பட்டு கல்வி கற்று, அரசு வேலை எனும் கனவோடு காத்திருக்கும் இளைஞர்களுக்கு இந்த சமுதாயம் சொல்லும் செய்திதான் என்ன, பொருள் நிறைந்தவர்களுக்கு மட்டுமே வாழ்க்கை பொருள் நிறைந்ததாய் இருக்கும் பொருளற்றவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் என்ற எதிர்மறை சிந்தனையை மட்டும் தானா.
குழந்தைகளுக்கு நாம் அறத்தை மட்டும் கற்றுத்தருவோம், பொருள் செய்வது பற்றி அவர்கள் கற்றுக்கொள்வார்கள். அறத்தை மீறிய பொருளும் காமமும் அழிவை நோக்கியே இட்டுச்செல்லும்.
க.ம.மணிவண்ணன்
06/02/2018
06/02/2018
No comments:
Post a Comment