Thursday 15 March 2018

நீ எதற்காகச் சொல்கிறாய் மகளிர் தின வாழ்த்து

நீ எதற்காகச் சொல்கிறாய் மகளிர் தின வாழ்த்து
காமம் தலைகேறிய
உன் வக்கிரக் கண்களால்
எங்கேயும் என்னை 
வன்புணர்வு செய்கிறாய்
நீ எதற்காகச் சொல்கிறாய் மகளிர் தின வாழ்த்து
வெறும் பாலுறுப்பாகவே
என்னை எப்போதும் பார்க்கிறாய்
நான் ஆறாக இருந்தாலும்
அறுபதாக இருந்தாலும்
நீ எதற்காகச் சொல்கிறாய் மகளிர் தின வாழ்த்து
என்னை அவமானப்படுத்த
நடத்தை சரியில்லை என
எளிதாகச் சொல்கிறாய்
நீ எதற்காகச் சொல்கிறாய் மகளிர் தின வாழ்த்து
நான் அடைந்த உயரமெல்லாம்
பெண்ணாக இருப்பதால் என
பொதுவெளியில் பகடி செய்கிறாய்
நீ எதற்காகச் சொல்கிறாய் மகளிர் தின வாழ்த்து
கூண்டைத் தூக்கிக்கொண்டே
பறக்கச் சொல்கிறாய்
சாவியை உன் கையில் வைத்துக்கொண்டு
நீ எதற்காகச் சொல்கிறாய் மகளிர் தின வாழ்த்து
சாலைகளில்
உன் வாகனத்தை நான் முந்துவதையே
ஏற்றுக்கொள்ள முடியாத நீ
எதற்காகச் சொல்கிறாய் மகளிர் தின வாழ்த்து
நீ ஈட்டும் பொருள்
உனது என்கிறாய்
நான் ஈட்டும் பொருளும்
உனதே என்கிறாய்
நீ எதற்காகச் சொல்கிறாய் மகளிர் தின வாழ்த்து
நான் எப்போதும் இருக்கிறேன்
தாயாய் மகளாய் சகோதரியாய்
தோழியாய் துணைவியாய்
ஆனால் நீ மட்டும் இருக்கிறாய்
எப்போதும் ஒரு ஆணாய்
நீ எதற்காகச் சொல்கிறாய் மகளிர் தின வாழ்த்து

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...