Tuesday 23 January 2018

நித்தியானந்த மட சீடர்களுக்கு

நித்தியானந்த மட சீடர்களுக்கு மணிவண்ணன் எழுதுவது,
வைரமுத்து அவர்களுக்கு எதிராக நீங்கள் பேசிய காணொளி கண்டேன், அதைப் பார்த்த பிறகு உங்கள் அறியாமையின் மீதும் அறிவீனத்தின் மீதும் பரிதாபமும் உங்கள் மதங்களின் மீது கோபமும் தான் வருகிறது.
உங்கள் பேச்சில் தான் எவ்வளவு கருணை, ஒவ்வொரு வார்த்தையிலும் அன்பு பெருக்கடுத்து ஓடுகிறது.
வைரமுத்து அவர்களின் ஆண்டாள் பற்றிய கட்டுரையை நானும் படித்தேன். அதில் அவர் ஆண்டாளைப் பற்றி பெருமையாகவே எழுதியுள்ளார். அதில் ஆண்டாளைப் பற்றிய ஒரு ஆய்வாளாரின் கருத்தைக் குறிப்பிட்டுள்ளார் அவ்வளவே.
அந்தக் கருத்து தவறு எனில் நீங்கள் சரியான கருத்தை நிறுவ வேண்டும். அந்த கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் அவர் கருத்தோடுதான் நீங்கள் மோத வேண்டும் அதை விடுத்து அவரை எவ்வளவு தரக் குறைவாக பேசி இருக்கிறீர்கள், உங்கள் பேச்சில் எவ்வளவு வன்மம் எவ்வளவு ஆபாசம், ஒரு தனி மனிதனின் உறவுகளை கொச்சைப்படுத்தி இருக்கிறீர்கள். இதுதான் அன்பை மட்டுமே போதிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் உங்கள் மதங்கள் சொல்லித் தந்ததா.
நீங்கள் என்ன செய்வீர்கள் பாவம், உங்கள் மதங்கள் எதைப் பேசுகிறதோ எதை எழுதுகிறதோ எதைச் செய்கிறதோ அதையே தான் நீங்களும் செய்துள்ளீர்கள்.
அன்பை மட்டுமே போதிப்பதாகச் சொல்லும் உங்கள் எல்லா மதங்களும் தங்களுக்கு எதிராக விமர்சனம் வரும்போதும் கருத்துக்கள் வரும்போதும் கருத்துக்களோடு மோதாமல் கருத்துச் சொன்னவர்களோடுதான் மோதி இருக்கின்றன, மிரட்டி இருக்கின்றன, அடி பணியாத போது எங்கே நாம் தோற்று விடுமோவோ எனப் பயந்து கொலை செய்திருக்கின்றன. இதுதான் வரலாறு நெடுகிலும் காணக் கிடைக்கிறது.
ஏனென்றால் உங்கள் மதங்கள் வெற்று நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உணர்சிகளால் கட்டப்பட்டவை. அவைகளால் விவாதிக்கவோ தங்களது கருத்துக்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் புதிய கருத்துகளை ஏற்றுக்கொள்ளவோ தங்களைப் புதுப்பித்துக்கொள்ளவோ முடியாது.
உலகம் தட்டை எனச் சொன்ன உங்கள் மதங்கள் உருண்டை எனச் சொன்ன கலிலியோவின் அறிவியலைக் கல்லால் அடித்துக் காயப்படுத்தியது. அறிவியலாளர் புருனோவை ரோம் நகர வீதியில் வைத்து உயிரோடு கொளுத்தியது.
வங்காள தேசத்தில் முற்போக்கு எழுத்தாளர்களைக் கொன்றதும் சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் தலைகளுக்கு விலை வைத்ததும் உங்கள் மதங்கள் தானே. சமணர்களையும் பௌத்தர்களையும் கழுவேற்றிக் கொன்றதும், எழுத்தாளர்கள் கோவிந்த் பன்சாரே, தபோல்கர், கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகியோரைக் கொன்றதும் உங்கள் மதங்கள் தானே.
ஆனால் நாத்திகம் என்பது அப்படி ஆனது அல்ல, அது மனித நேயத்துடனான அறிவியல் சிந்தனை. அதனால் தான் அது தன்னுடைய கருத்து தவறு என்றால் திருத்திக்கொள்ளவும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளவும் செய்கிறது. மதங்கள்தான் மனிதனைக் கொன்று இருக்கின்றன, ஆனால் நாத்திகம் எந்த மனிதனையும் கொன்றதாக வரலாற்றின் எந்தப் பக்கங்களிலும் பதிவே இல்லை.
சாக்ரடீஸ் முதல் புத்தன் வரை, காரல் மார்க்ஸ் முதல் பெரியார் வரை, இங்கர்சால் முதல் பெட்ரன்ட் ரஸ்ஸல் வரை, அனைவரின் பேச்சிலும் எழுத்திலும் செயலிலும் கடவுள் மறுப்பை விஞ்சிய மனித நேயமே இருக்கிறது. நாத்திகர்களே ஆகச் சிறந்த சமூகப் போராளிகளாகவும் இருந்து வருகிறார்கள். உங்கள் மதங்கள் கடவுளைப்பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்கும்போது நாத்திகம் தான் மனிதர்களைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கிறது.
உங்களை எல்லாம் நான் நாத்திகர்களாக மாறச் சொல்லவில்லை. ஏனென்றால் நாத்திகனாக மாறுவதும் வாழுவதும் எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும். எனவே குறைந்த பட்சம் மதங்களை விடுத்து மனிதர்களாக மாறுங்கள்.
இப்படிக்கு,
க.ம.மணிவண்ணன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...