நிர்மலாதேவி ஒரு தூண்டில்
----------------------------------------------
----------------------------------------------
மாட்டிக்கொள்ளும் தூண்டில்களும் தப்பித்துக்கொள்ளும் தூண்டில்காரர்களும்.
-----------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------
தூண்டில்காரர்களுக்கு மீன்கள் தான் இலக்கு, அதற்கு அவர்கள் பயன்படுத்தும் கருவியே இந்த தூண்டில்கள். மீன்களை கொன்ற பழி எப்போதும் தூண்டில்களையே வந்து சேரும். பழி வந்து சேரலாம் என்று தெரிந்தும் ஏன் தூண்டில்கள் மீன்களை கொல்லவேண்டும், தூண்டில்காரர்களிடமிருந்து பெற்ற இனி பெறப்போகும் சலுகைகளுக்காகவும் நம்மை எப்படியும் தூண்டில்காரர்கள் காப்பாற்றிவிடுவார்கள் என்ற நம்பிக்கையிலும் தான்.
தூண்டில்களுக்கு பெரும்பாலும் தெரிவதில்லை தூண்டில்காரர்கள் ஆகப் பெரிய நயவஞ்சகர்கள் என்பது. இவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று தெரிய வரும்போது தூண்டில்களை விட்டுவிட்டு தப்பித்துக்கொள்வார்கள் முடியாதபட்சத்தில் தடயம் தெரியாமல் தூண்டில்களை முறித்து விடுவார்கள்.
நான் சொல்ல வருவது ஓரளவுக்கு புரிந்திருக்கும். ஆம் இப்போது நிர்மலாதேவி என்கிற தூண்டிலைப் பிடித்துள்ளார்கள். தூண்டில்காரர்கள் யார் என்ற விசாரணை தொடங்கி உள்ளது. அதாவது higher official எனப்படுகிற மிக உயர்ந்த பொறுப்பில் உள்ள அந்த நபர் யார் என்ற தேடல் துவங்கி உள்ளது.
நிர்மலா தேவி தன்னிடம் இந்த வேலையைச் சொன்ன, தான் இதுவரை higher official என்று நம்பிக் கொண்டிருக்கிற இரண்டு அல்லது மூன்று நபர்களின் பெயரைச் சொல்லுவார். ஆனால் அவர்களும் இவரைப்போன்ற தூண்டில்களாகவே இருப்பர். இப்படியாக எல்லாத் தூண்டில்களும் தாங்கள் தூண்டில்காரகள் என நம்பிக்கொண்டிருந்தவர்களின் பெயரைச் சொல்லும்.ஆனால் இதில் யாருமே தூண்டில்காரர்களாக இருக்க மாட்டார்கள்.
இறுதியாக ஒருவர் ஒரு குறிப்பிட்ட நபரின் பெயரைச் சொல்லுவார் அந்த நபர் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கிற மிகுந்த செல்வாக்கு மிகுந்த அரசியல் பின்புலம் கொண்டவராக இருக்கும்போது விசாரணை அடுத்த கட்டத்திற்கு நகராது நின்ற இடத்தில் நின்று கொண்டே வட்டமடிக்கும் இது எப்போதுவரை என்றால் நாம் விழித்துக்கொண்டிருக்கும் வரை நாம் உறங்க ஆரம்பித்ததும் அதுவரை வட்டமடித்துக் கொண்டிருந்த விசாரணை கால்களை நன்றாக நீட்டி கைகளை தலைக்கு வைத்து நன்றாக குறட்டைவிட்டு உறங்கி விடும்.
நாம் தீடிரென்று விழித்துக்கொண்டு குரல் எழுப்பினால் இப்படி ஒரு செய்தி வரும் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிர்மலாதேவி மனநிலை சரியில்லாதவர் அவர் பல்கலைக்கழகத்திற்கும் உயரதிகாரிகளுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு செய்திகளை பரப்பி இருக்கிறார் என்று. வேறு ஏதேனும் அசம்பாவிதம் கூட அவருக்கு நேரலாம். ஆக இப்படியாக விசாரணை முடித்து வைக்கப்படும்.
மக்களே நாமெல்லாம் பார்க்காத நீதி விசாரணையா
க.ம.மணிவண்ணன்
18/04/2018
18/04/2018
No comments:
Post a Comment