Monday 25 February 2019

மதவாதிகளின் சிம்மசொப்பனமாக விளங்கிய அறிவியலாளர் - கலீலியோ கலிலி

மதவாதிகளின் சிம்மசொப்பனமாக விளங்கிய அறிவியலாளர் - கலீலியோ கலிலி பிறந்தநாள் பிப்ரவரி 15
வானத்தை பாருங்கள், அது உண்மையைச் சொல்லும்.
டெலஸ்கோப் மிகவும் நம்பகமானது. போப்பைக் காட்டிலும்
- கலீலியோ கலிலி
500 ஆண்டுகளுக்கு முன்புவரை பூமிதான் பிரபஞ்சத்தின் நடுநாயகம் என்றும், நிலாவும் சூரியனும் பூமியை சுற்றுகின்றன என்றும் உலகம் நம்பிக்கொண்டிருந்தது. அது பொய் சூரியனை சுற்றிதான் அனைத்து கோள்களும் சுழல்கின்றன என்ற உண்மையை துணிந்து சொன்னதற்காக மதவாதிகளால் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்தவர்தான் வானியல் அறிஞர் கலீலியோ கலிலி.
மக்களிடம் தன் கண்டுபிடிப்பை முதலில் எடுத்துச் சென்ற அறிஞர் கலீலிலியோதான். கிருத்துவ திருச்சபைக்கு எதிராக அவர் நடத்திய போராட்டங்கள் நம்மை உறைய வைத்துவிடும். அந்த உக்கிரமான போராட்டம், "மனித வரலாற்றில் முக்கிய மைல்கல்' என்று கம்யூனிச சிந்தனையாளர் பிரடெரிக் எங்கெல்ஸால் புகழ்ந்துரைக்கப்பட்டது.
ஐரோப்பாக் கண்டம் கிருத்துவ கத்தோலிக்க திருச்சபையின் ஆதிக்கத்தின் பிடியில் பல நூற்றாண்டுகள் இருந்தது. மானுடத்திற்கு பகுத்தறிவு அளித்து அறிவுப் புரட்சி செய்ய வந்த பல மகத்தான விஞ்ஞானிகள் ஒடுக்கப்பட்ட காலமது.
1609-இல் தாமஸ் ஹரியோட் மற்றும் சிலருடன் சேர்ந்து தொலைநோக்கியை வடிவமைத்தார். இதன் வழியே வான்வெளியை ஆராய்ந்து சூரியன் மையப்பகுதி என்று கூறினார். இங்குதான் அவருக்கு எதிர்ப்பு ஆரம்பமாகியது. பல நூற்றாண்டுகளாக பூமிதான் பிரபஞ்சத்தின் மையப்பகுதி என்றும் அதனையே சூரியன் சுற்றிவருகிறது என்றும் நம்பப்பட்டு வந்தது.
இந்த நிலையில்தான் கலீலியோ “சூரியன்தான் மையப்பகுதி. பூமி உட்பட ஏனைய அனைத்துக் கோள்களும் சூரியனை சுற்றி வருகின்றன” என்று புதிய விளக்கமளித்தார். வேண்டுமானால் நீங்களே தொலைநோக்கியில் பாருங்கள் என்று மக்கள் முன்னால் தனது ஆய்வை நிரூபித்தார். ஆனாலும் அவரது கருத்துகளை கிருத்துவ சமயவாதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. கிருத்துவ மத குருமார்களால் குற்றம்சாட்டப்பட்டார்.
கலீலியோவின் புதிய அறிவியல் கருத்துக்கள் அபாயகரமானதெனவும் மதத்திற்கெதிரான கொள்கை எனவும் கருதப்பட்டது. ஏனெனில் பைபிள் வாசகங்களில் Pslam 93: 1, Pslam 96: 10, மற்றும் Chronicles 16:30 போன்றவற்றில், "உலகம் விரிவுபடுத்தப்பட்டது. அதனால் நகர முடியாது.'' Pslam 104: 5 இல் "கர்த்தர் பூமிக்கான அடித்தளத்தை இட்டார். அதனால் நகர முடியாது'' என்றுள்ளது. இதனை கலீலிலியோ கடுமையாக மறுத்தார். "பைபிள் பாடல்களையும், கவிதைகளையும் கொண்டது. இது வரலாற்று ஆவணமோ தகவல் களஞ்சியமோ இல்லை'' எனக்கூறி அதனை மறுத்தார். அதற்காக தாக்கப்பட்டார். மதத்திற்கு எதிரானவரென பிரச்சாரம் செய்யப்பட்டது.
அந்தக்காலகட்டத்தில் சர்வ வல்லமை பெற்றிருந்தன தேவாலாயங்கள். நாட்டை அரசன் ஆண்டாலும் அந்த அரசனையும் ஆளும் வல்லமை தேவாலாயங்களுக்கு இருந்தன. 1615-ஆம் ஆண்டில் கலிலியோ தமது கண்டுபிடிப்புகளையும், சூரியன்தான் பிரபஞ்சத்தின் நடுநாயகம் என்ற கருத்தையும் ஒரு புத்தகமாக வெளியிட்டார். புனித தேவாலாயத்திற்கு எதிராக செயல்பட்டார் என்றுகூறி கலிலியோவை கைது செய்தனர் தேவாலாய அதிகாரிகள்.
தன்னுடைய கருத்துகள் தவறானவை என்று ஒப்புக்கொள்ளும்படி கலிலி வற்புறுத்தப்பட்டார். தன் உயிருக்கே ஆபத்து என்று உணர்ந்த கலிலி வேறு வழியில்லாமல் தன் கூற்று தவறு என்று உதட்டளவில் ஒப்புக்கொண்டார்.
ப்ளோரன்ஸ் (Florence) நகர அதிகாரிகளின் அனுமதியோடு 1632-ஆம் ஆண்டில் அவர் மற்றொரு புத்தகத்தை வெளியிட்டார். மீண்டும் தேவாலயத்தை அவமதிக்கிறார் என்றுகூறி ரோம் நகர உயரதிகாரிகள் அவரை மீண்டும் கைது செய்தனர் இம்முறை விடுதலை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் அவரை வீட்டுக்காவலில் வைத்தனர் அப்போது அவருக்கு வயது 68. பத்து ஆண்டுகள் வீட்டுக்காவலிலேயே காலம் கழித்த கலிலி 1642-ஆம் ஆண்டு தமது 78-ஆவது அகவையில் காலமானார்.
உண்மை என்று நம்பப்படுபவைகளை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சந்தேகம் இருந்தாலும் துணிந்து கேட்கலாம் அது பொய் என்று தெரிந்தால் தைரியமாக சொல்லலாம். கலிலியோ போல் கேள்வி கேட்க துணிபவர்களுக்கும், புதிய உண்மைகளை கண்டுபிடிக்க முனைவர்களுக்கும் விடாமுயற்சியுடன் தன்னம்பிக்கையோடு உழைப்பவருக்கும் நிச்சயம் அந்த வானம் வசப்படும்.
க.ம.மணிவண்ணன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...